கிச்சன் டைரீஸ்



டயட் மேனியா

டயட்கள் எத்தனை டயட்களடி என்று பாட்டுப் பாடும் அளவுக்கு விதவிதமான டயட்கள் நாள்தோறும் பெருகிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவரின்  உடல் நலத்துக்கும் கற்பனை வளத்துக்கும் ஏற்ற டயட்கள் உலகம் முழுதும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு டயட்டையும்  லட்சக்கணக்கான மக்கள் ஒரு மதத்தைப் பின்பற்றுவது போன்ற ஆவேசத்துடன் கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்னொரு உலகப் புகழ்பெற்ற டயட்தான் லோ-கார்போ டயட். பேலியோ டயட்டை தீவிரவாதம் என்றால் லோ-கார்போ டயட்டை  மிதவாதம் எனலாம். இந்த இரண்டு டயட்டுக்களுக்குமே கார்போஹைட்ரேட் எனும் மாவுச் சத்துதான் முதல் எதிரி என்றாலும் லோ-கார்போ டயட்  சிவப்பு அரிசி, ஓட்ஸ், உருளைக் கிழங்கு போன்றவற்றை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது.

பொதுவாக, குறைவான அளவில் கார்போஹைட்ரேட் உணவுகள் எடுத்துக்கொள்வதை லோ-கார்போ டயட் எனலாம். சென்ற நூற்றாண்டின் பாதியில்  உலகம் முழுதும் கொழுப்புச்சத்துக்கு எதிரான மனோபாவம் தூக்கலாக இருந்தது. அதிக கொழுப்புச்சத்தால்தான் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம்  இதய நோய்கள், சர்க்கரை வியாதி போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன என்று உணவியல் நிபுணர்களும் மருத்துவர்களும் கருதிவந்தார்கள். ஆனால்,  கடந்த இருபது வருடங்களாக இந்தப் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிக கார்போஹைட்ரேட் உடலில் சேர்வதால்தான் உடல் பருமன் உள்ளிட்ட வியாதிகள் வருவதாக ஒரு தரப்பினர் கருதுகிறார்கள். அதன்  விளைவுகளில் ஒன்றுதான் லோ-கார்போ டயட் மோகம். லோ-கார்போ டயட்டில் பல வகை உள்ளன. ஒருவரது உடல் நலம், அவரது உடல் உழைப்பு  மற்றும் உடற்பயிற்சி செய்யும் கால அளவு, தினசரி இழக்க வேண்டிய எடையின் அளவு ஆகியவற்றைக் கொண்டு ஒவ்வொருவருக்கும் ஏற்ற  லோ-கார்போ டயட்டை வடிவமைக்கலாம்.

அசைவம், மீன், முட்டை, காய்கறிகள், பழங்கள், விதைகள், நட்ஸ், பால் பொருட்கள், கொழுப்புச்சத்து உணவுகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை  நிறைய எடுத்துக்கொள்ளலாம். க்ளூட்டான் இல்லாத மாவுச்சத்துக்களான அரிசி, சிவப்பு அரிசி, சிறுதானியங்கள், ஓட்ஸ் போன்றவற்றை லோ-கார்போ  டயட்டில் அளவாக எடுத்துக்கொள்ளலாம்.

சர்க்கரைப் பொருட்கள், செயற்கையான இனிப்புப் பொருட்கள், கோதுமை, மைதா, எண்ணெய்கள், ட்ரான்ஸ் ஃபேட் உணவுகள், குறைவான  கொழுப்புச்சத்து கொண்ட உணவுகள், ப்ராசஸ்டு ஃபுட்ஸ் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். லோ-கார்போ டயட்டுக்கும் உடற்பயிற்சி  மிகவும் முக்கியம். பொதுவாக, அரிசி அல்லது மாவுச்சத்தை மிகக் குறைவாகவும் மற்றவற்றை அதைவிட இரண்டு மடங்கும் எடுத்துக்கொள்ள  வேண்டும்.

உணவு விதி #8

பெரும்பாலானோர் உண்பதையே நாமும் உண்போம். இது ஓர் அழகான விதி. நாம் வாழும் சூழலில் பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  உணவு ஒன்று இருந்தால் அதுதான் நம் உணவாகவும் இருக்க வேண்டும். இதனால், நமக்கு உணவும் எளிதாகக் கிடைக்கும். ஆரோக்கியமும்  உத்தரவாதமாய் இருக்கும். வித்தியாசமாக  உண்கிறேன் என்ற பெயரில் கண்டதையும் உண்டுவிட்டு சூழ்நிலைக்கு செட் ஆகாமல் அவதிப்பட  வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த விதி.

எக்ஸ்பர்ட் விசிட்

நம் உடல் நாள் தோறும் உருமாறிக்கொண்டே இருக்கும் செல் தொகுப் புகளால் ஆனது. இதை பாடி மெட்டபாலிசம் என்பார்கள். அதாவது, உடல்  வளர்சிதை மாற்றம். இளமையில் நம் உடலில் நிகழும் மாற்றங்கள் அல்ல, நாற்பது வயதுக்குப் பிறகு நிகழ்வது. சில ஆரோக்கியமான உணவுப்  பழக்கங்கள் மூலம் நமது வளர்சிதை மாற்றத்தை எப்போதும் சிறப்பாக வைத்திருக்கலாம் என்கிறார் உணவியல் நிபுணர் தீபாளி மைரல்.  
அன்றாடம் நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரி விகிதத்தை தடாலடியாகக் குறைக்காதீர்கள்.

உங்கள் உடல் பட்டினி கிடக்க நேர்ந்தால் அது வளர்சிதை மாற்றத்தின் செயல்பாட்டை மந்தமாக்கும். அவசியம் எனில், கலோரி அளவைக் கொஞ்சம்  கொஞ்சமாகக் குறைக்கலாம். தினசரி உணவில் புரதச்சத்தை அதிகமாகச் சேர்க்க வேண்டும். புரதத்தை உடைத்து சத்தாக மாற்ற நம் உடலுக்கு மூன்று  மணி நேரம் தேவை என்பதால் சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் அளவாக புரோட்டின் எடுக்கலாம். காலை எழுந்த பிறகு இரண்டு மணி  நேரத்துக்குள்ளாக காலை உணவை உண்டுவிடுங்கள். காலையில் செரிமானத்துக்குத் தேவையான நொதி அமிலங்கள் தயார் நிலையில் இருக்கும்.

நீங்கள் உணவை மறுத்தால் அவை உங்கள் குடலைப் பதம்பார்க்கும். தினசரி மூன்று வேளை உணவு; இரண்டு வேளை ஹெல்த்தி ஸ்நாக்ஸ்  உண்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். டீ, காபி சாப்பிடுவதால் அதில் உள்ள காபின் மெட்டபாலிசத்தைத் தூண்டும். ஆனால், அளவுக்கு அதிகமாகப்  பால் மற்றும் சர்க்கரை சேர்ந்தால் கலோரி அளவும் கூடும் என்பதால் கவனம். அதிகபட்சம் இரண்டு வேளை டீ அல்லது காபி ஏதேனும் ஒன்று  பருகலாம். க்ரீன் டீ இன்னமும் பெஸ்ட். அடில் கெட்டாசின்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. காஃபின் கிடையாது.

ஐந்து சதவீதம் வரை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். தினசரி 28 கிராம் டார்க் சாக்லெட் சாப்பிட்டால் உடலின் மெட்டபாலிசம் துரிதமாகும்.  கவனம். அதற்கு மேல் உண்டால் உடல் எடை அதிகரிக்கும். டார்க் சாக்லெட்டில் கேட்டிசின்ஸ், காஃபின் போன்றவை உள்ளன. நம் உடலில் லெப்டின்  என்ற ஹார்மோன் சுரக்கிறது. நாம் உணவு உண்ணும்போது போதும் என்ற திருப்தியைத் தருவது இவைதான். ஜிங்க் எனும் துத்தநாகம் உள்ள  உணவுகள் இந்த லெப்டின் சுரப்பைத் தூண்டுகின்றன. எடையைக் கட்டுப்படுத்த நினைப்பவர்கள் துத்தநாகச் சத்துள்ள உணவுகளை உண்ணலாம்.

கோதுமை, பூசணிக்காய், அதன் விதைகள், முந்திரிப் பருப்பு, கீரை, மீன், காளான், மாதுளை, பேரீச்சம் பழம், முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கு,  புரோகோலி ஆகியவற்றில் துத்தநாகம் உள்ளது. குடைமிளகாயில் கேப்சைசின் என்ற உயிர்வேதிப் பொருள் உள்ளது. உணவு உண்ட பல மணி நேரம்  கழித்தும் கலோரியைக் கரைப்பதற்காக போராடும் குணம் இதற்கு உண்டு. எனவே, உடல் பருமன் உள்ளவர்கள் இதைச் சாப்பிடலாம். தினசரி ஏதேனும்  ஒரு பழத்தை காலை எழுந்த ஒரு மணி நேரத்துக்குள் உண்டுவிடுங்கள். அதில் உள்ள ஊட்டச்சத்துகள் உடனடியாக உடலில் சேரும். பசி உணர்வு  தோன்றினால் உடனே சோறுதான் சாப்பிட வேண்டும் என்று இல்லை.

சாலட்கள், நட்ஸ், முளைகட்டிய பயிர்கள் எனச் சிறிது சாப்பிடலாம். நெடு நேரம் பசியோடு இருக்கக் கூடாது. தினசரி உணவில் புரதச்சத்து அதிகமாக  இருக்கட்டும். முட்டையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. பருப்பு, சோயா, நட்ஸ், சிறுதானியங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றிலும் புரதச்சத்து  நிறைந்துள்ளது. உடலில் நீர்ச்சத்து எப்போதும் இருக்கட்டும். தினசரி இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் பருகுங்கள். உடற்பயிற்சி செய்யும்  கால் மணி நேரம் முன்பு மிகச் சிறிதாக ஏதேனும் உண்டுவிட்டு தொடங்குங்கள். இல்லாவிடில் விரைவில் பசி உணர்வு எழும். உடற்பயிற்சியும்  தடைபடும். வளர்சிதை மாற்றமும் முழுமையடையாது.

மைதாவில் மரவள்ளி... கபடக் கூட்டு

மைதா ஆரோக்கியமான உணவு இல்லை என்பதுதான் உணவியல் நிபுணர்களின் தீர்ப்பு. ஆனால், புரோட்டா முதல் பிஸ்கெட், இனிப்புகள் உள்ளிட்ட  தின்பண்டங்கள் வரை மைதாவின் ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது என்பதால் அதை இனி முழுமையாகத் தவிர்க்கவும் முடியாது. எனவே, அளவாகப்  புசிக்கலாம். ஆனால், மைதாவிலும் மரவள்ளிக் கிழங்கைக் கலப்படம் செய்து கலங்கடிக்கிறார்கள் கலப்படக்காரர்கள். மைதாவின் எடையையும்  வண்ணத்தையும் அதிகரிப்பதற்காக மரவள்ளியை அரைத்துத் தூளாக்கி, காயவைத்து மைதாவுடன் கலக்கிறார்கள். மைதா மாவுக்கு இழுவைத்தன்மை  (எலாஸ்டிசிடி) அதிகமாக இருக்கும். நீரில் கலந்ததும் உதிரி உதிரியாக திரிந்தால் அது கலப்பட மைதா என்று அறியலாம்.

சாம்பார் தன் வரலாறு கூறுதல்

இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதச் சொன்னால் சாம்பார் என்ன மொழியில் எழுதும் என்று நினைக்கிறீர்கள். நிச்சயமாகத் தமிழில் இல்லை.  அதைப் போலவே எந்த தென்னிந்திய மொழிகளிலும் இல்லை. பிறகு, அநேகமாய் மராட்டியில் எழுதக்கூடும். துணுக்குற வேண்டாம். சாம்பார் என்ற  உணவை நாம் உருவாக்கவில்லை. மராட்டியத்தைப் பூர்வீகமாகக்கொண்ட சரபோஜி மன்னர்களின் தஞ்சாவூர் அரண்மனையிலேயே உலகின் முதல்  சாம்பார் உருவானது.

வீர சிவாஜியின் வாரிசுகளான சரபோஜிகள் மிகச் சிறந்த போர் வீரர்கள் மட்டும் அன்று,  நல்ல உணவுப் பிரியர்களும்கூட. அக்கால சரபோஜி  மன்னர்கள் வெள்ளையரோடு மோதாமல் நட்புறவாகவே இருந்தனர். அதனால், சரபோஜிகளின் அரண்மனையில் சைவ உணவுக் கூடங்களோடு, அசைவ  உணவுக் கூடங்களும் ஆங்கிலேயருக்கான சிறப்பு உணவுக் கூடங்களும் இருந்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சாஹூஜி என்ற சரபோஜி  மன்னர் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்தார். சாஹூஜிக்கு ‘அமிதி’ என்ற புளிக்குழம்பு மிகவும் பிடிக்கும். மராட்டியர்கள் நம் ஊர் புளியைக்கொண்டு  புளிக்குழம்பு வைக்கமாட்டார்கள்.

கோகம் என்ற புளியைப் பயன்படுத்துவார்கள். ஒருமுறை, கோகம் தீர்ந்து போகவே தமிழகத்துப் புளியை வைத்து துவரம் பருப்பு, காய்கறிகள் சேர்த்து  ஒரு உணவைத் தயாரித்தனர். அதிர்ஷ்டவசமாக மன்னருக்கு அதன் ருசி பிடித்துவிடவே அதை அடிக்கடி தயாரிக்கச் சொல்லியிருக்கிறார். அந்த  உணவுக்கு ஷாம்பாஜி என மன்னரின் பெயரையே வைத்தார்களாம். அநேகமாய் அதுதான் சாம்பார் என்று மாறியது என்கிறார்கள். தஞ்சை சரஸ்வதி  மகாலில் சரபோஜி மன்னர்கள் காலத்தில் எழுதப்பட்ட போஜன குதூகலம், சரபேந்திர பக்ஷன சாஸ்திரம் போன்ற நூல்களில் சாம்பார் பற்றிய குறிப்புகள்  உள்ளன.


இளங்கோ கிருஷ்ணன்