மாசற்ற பொலிவிற்கு



- பி.கமலா தவநிதி

நம் அழகை வெளிப்படுத்துவதில் முக்கியமானது  நம்முடைய தோல்.  தோலை பார்த்துத்தான் நம் ஆரோக்கியத்தையும்  கணிக்க முடிகிறது.  அழகிற்கு மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்கும்  அடிப்படையானதுதான் தோலின் நலம்.   நமக்கு தெரிந்தது, மருத்துவர்கள்,  நண்பர்கள், கேள்விப்பட்டது என தோலின் நலனுக்காக பல விஷயங்களை கடைபிடிப்பது  சருமப் பிரச்சனைகள் வர காரணமாகின்றன. ஆனால் இவ்விஷயத்தில் நாம் கவனமாக இருக்கவேண்டியுள்ளது

வெப்ப பூமியில் வாழும் நாம் ஒரு நாளைக்கு நான்கு முதல் நான்கரை லிட்டர்  தண்ணீர் அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.  குறைந்தபட்சம்  இரண்டிலிருந்து மூன்றரை லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும், காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிட வேண்டும் என்பது நம் மனம் அறிந்தவையே. ஆனால்  நாம் அனைவரும் இதை செய்கிறோமா? பல  பெண்களின் கன்னங்களில் கருமை நிறம் படர்ந்திருப்பதை  பார்த்திருப்போம்.  

அந்த நீண்ட கால கருமையின் பெயர் மங்கு. முன்பெல்லாம் நாற்பது வயதைத் தாண்டிய பெண்களுக்குத் தான் மங்கு இருக்கும்.  இப்போதுள்ள சூழலில் இருபது வயதுள்ள இளம்பெண்களுக்கும் மங்கு வர ஆரம்பித்து விட்டது. பல வருடங்களுக்கு போகாமல் நிலைத்து இருந்து நம்மை மன உளைச்சலுக்கும் இது ஆளாக்கிவிடும். அதனைப் போக்க  மார்க்கெட்டில் கிடைக்கும் பல கிரீம், லோஷன், பவுடர் போன்ற ரசாயனங்களை பயன்படுத்தி மேலும் முக அழகை கெடுத்துக்கொள்கிறோம் நாம்.  

மெலஸ்மா அல்லது பிக்மென்ட்டேஷன் என்று சொல்லக் கூடிய மங்கு ஒரு வகை சருமப் பிரச்சனை தான். இது நாம் எவ்வளவு அழகாக இருந்தாலும் நம் முக அழகை கெடுக்கக்கூடியது.  மங்கு குறிப்பாக கன்னங்கள், மூக்கு, நெற்றி பகுதிகளைத் தான் அதிகம் பாதிக்கும்.  சிவப்பு, பிரவுன் மற்றும் கருப்பு நிறங்களில் முகத்தில் தோன்றும். சருமத்தின் மேல் அதிகம் வெயில் படுத்தல், வைட்டமின் டி பற்றாக்குறை, ஹேர் டை, மெனோபாஸ், ரத்த அணுக்களின் எண்ணிக்கையில் மாற்றம், சுற்றுசூழலில் மாசு போன்ற விஷயங்களே மங்கு தோன்ற காரணம். 

மேலும் குறிப்பிட்ட வயதை நெருங்கியவுடன் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வந்துவிடுமோ என்று உணவில் சிலவற்றை தவிர்ப்பது என இதுவும் மங்கு வர காரணங்கள்.  இதற்காக நாம் அன்றாடம் கேரட் ஜூஸ், மாதுளை, பப்பாளி சாப்பிட வேண்டும். வாரம் இருமுறை அரைக்கீரை சாப்பிட்டு வருவதும் மங்கு வராமல் தடுக்கும். பால் பொருட்களை வெளிப் பிரயோகத்தில் சேர்த்து கொள்ளும் போது உடனடி தீர்வு கிடைக்கும். மங்குவின் அடர் நிறத்தை குறைக்கும். பழங்கள் கொண்டு பேக் போடுவதாலும் மங்கு கொஞ்சம் கொஞ்சமாய் மறைவதை காணமுடியும். உட்கொள்ளும் உணவுகளைத் தவிர வெளிப் பிரயோகத்தில் பயன்படுத்த வேண்டியவை பற்றி கூறுகிறார் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.

நன்கு பழுத்த பப்பாளி துண்டுகள் நான்கு, அத்துடன் இரண்டு டீஸ்பூன் பால் சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்த விழுதை முதலில் மங்கு இருக்கும் இடத்தில் பூச வேண்டும். பின் முகம் முழுவதும் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவேண்டும்.  இந்த பேக்கை வாரத்தில் மூன்று நாட்கள் போட்டு வந்தால் மங்குவின் கருமை நிறம் குறையும். பப்பாளிக்கு இயற்கையாகவே சருமத்தை பளிச்சிட செய்யும் தன்மை உண்டு. பால் சருமத்தில் தோன்றும் வறட்சியை போக்கி, மிருதுவாக செய்யும். 

கசகசா இரண்டு டீஸ்பூன், கஸ்துரி மஞ்சள் அரை டீஸ்பூன், வெண்ணெய் ஒரு டீஸ்பூன் எடுத்து கொள்ள வேண்டும். கசகசாவை அரைத்து அத்துடன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் வெண்ணெய் ஆகிவையையை சேர்த்து கலக்க வேண்டும். இந்த கிரீமை முகம் முழுவதும் பூசி நன்கு மசாஜ் செய்வதை போல் தேய்க்க வேண்டும். இது நம் சருமத்தில் ஸ்க்ரப் போன்று செயல்படும். கசகசாவில் உள்ள எண்ணெய் மங்குவை மறைய செய்யும். கஸ்தூரி மஞ்சள் முகத்திற்கு பொலிவை கொடுக்கும். வெண்ணெய் கிளென்சிங் ஏஜென்ட் போல் செயல்படும். 

பால் ஒரு டீஸ்பூன், வெண்ணெய் ஒரு டீஸ்பூன், கடலைமாவு ஒரு டீஸ்பூன் எடுத்து மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.  இதனை முகம் முழுவதும் பூசி மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும்.  பால், வெண்ணெய் இரண்டும் சிறந்த கிளென்சிங் பொருள்.  கடலைமாவு சருமத்தில் நிறமேற்றும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

குங்குமப்பூ ஒரு கிராம், ஜாதிபத்ரி ஐந்து கிராம், பார்லி பத்து கிராம் எடுத்து கொண்டு, அம்மியில் வைத்து நன்கு அரைக்க வேண்டும்.  குங்குமப்பூ மிக்ஸியில் நன்கு அரைபடாது என்பதனால் அம்மியில் வைத்து அரைக்க வேண்டும். அரைத்து வைத்திருக்கும் கலவையை முகத்தில் பூசி கழுவி வரவும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைப்பாடு காரணமாக முகத்தில் மங்கு ஏற்பட்டிருப்பின் இந்த கலவையை பூசி வந்தால் மங்கு மறையும். இதனை வாரம் இருமுறை தொடர்ந்து செய்ய வேண்டும். 

மனஅழுத்தம் காரணமாகவும் இந்த மங்கு முகத்தில் தோன்றும்.  இதற்கு செண்பகப்பூ பத்து எண்ணிக்கை, மரிக்கொழுந்து ஐந்து எண்ணிக்கை எடுத்துக்கொள்ளவும். இவை இரண்டையும் 50 மிலி நல்லெண்ணெயில் போட்டு காய்ச்ச வேண்டும். தினமும் இந்த எண்ணையை மங்கு இருக்கும் இடத்தில் பூசி வர வேண்டும். அரைமணி நேரம் ஊறிய பிறகு பாலுடன் வெந்நீர் கலந்து அதில் முகம் கழுவி வர மங்குவிற்கு நல்ல தீர்வு கிடைக்கும்.