மருத்துவத் துறையிலும் ஊழல்



-ஜெ.சதீஷ்

அம்பலப்படுத்தும் திவ்யா

அமெரிக்காவை சேர்ந்த மருந்து மாஃபியாக்கள் தன்னை மிரட்டியதை அடுத்து, இதன் பின்னணியில் உள்ள ஆபத்துகள் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. இது குறித்து நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா கூறுகையில், “என்னுடைய ஆலோசனை மையத்துக்கு சில நாட்களுக்கு முன்பு இரண்டு ஆண்களும் மற்றும் ஒரு பெண்ணும் வந்தனர். அவர்களில் இருவர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள், மற்றொருவர் இந்தியாவை சேர்ந்தவர்.

அவர்கள் மூவரும் தாங்கள் கொண்டு வந்துள்ளது மல்டி வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கொழுப்பை குறைக்கக்கூடிய மருந்துகள் என்று கூறி, அவற்றை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும்படி கூறினர். தங்கள் நிறுவன மருந்துகளின் பட்டியல் ஒன்றையும் அளித்தனர். அந்தப் பட்டியலில் உள்ள பொருட்களின் விவரங்களை படித்து அதிர்ந்துவிட்டேன். காரணம், அந்த பட்டியலில் உள்ள மருந்துகளில் ‘ஹைபர்விட்டமினோசிஸ்’ என்ற ஆபத்தான ரசாயனம் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்த மருந்துகளை சாப்பிட்டால் குமட்டல், கண்பார்வை மங்குதல், கல்லீரல் வீக்கம் போன்ற கடும் பாதிப்புகள் ஏற்படும். இந்த மருந்துகள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். தவிர, அறிவியல்ரீதியாக தரமில்லாத மருந்துகளை நான் பரிந்துரைப்பதில்லை என்று தெரிவித்தேன். உடனே அந்த மூவரும் எனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தனர். உடனடியாக அவர்களை என்னுடைய ஊட்டச்சத்து மையத்திலிருந்து வெளியேறச் சொன்னேன்.

இதனை தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு இந்தியாவில் அரசியல் செல்வாக்கு அதிகம் உண்டு எனவும், இதே மருந்துகளை மும்பையில் வேறு ஏதாவது பிரபல ஊட்டச்சத்து ஆலோசகர் மூலமாக பிரபலப்படுத்தவும், விற்கவும் போவதாகவும் மிரட்டல் தொனியில் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை உடனடியாக செய்தியாளர்களிடம் தெரிவித்தேன். இந்தப் பிரச்சனையின் ஆபத்து குறித்து பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளேன்.

அதில், அங்கீகரிக்கப்படாத, அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறும் மேலும், நீட் நுழைவுத் தேர்வினால் வரும் விளைவை பற்றியும், மருத்துவ உலகில் பெருகி வரும் அசிரத்தை பற்றியும், நுழைவுத் தேர்வில் நடக்கும் அநியாயங்கள் பற்றியும் எழுதி இருக்கிறேன்” என்கிறார். திவ்யா போன்றவர்களை மருத்துவத்துறையின் கண்கள் எனலாம். சபாஷ்!