மண்ணை மீட்க போராடும் பெண்கள்
-ஜெ.சதீஷ்
பெண்களையும் குழந்தைகளையும் முன்னிறுத்திப் போராடுவது இப்போது ஃபேஷனாகிவிட்டது என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லுமளவுக்கு தமிழகத்தில் நடக்கும் பல போராட்டங்களிலும் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் வீரியமிக்க பெண்களின் பங்கு அதிகமாக இருந்தது.
தொடர்ந்து நெடுவாசல், ஜல்லிக்கட்டு போராட்டம்... இப்போது சில நாட்களாகவே ஊடகங்களால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிற கிராமம், தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள கதிராமங்கலம். இங்கு நடந்துவரும் போராட்டத்திலும் பெண்களே முன்னிலையில் இருக்கின்றனர். இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவெளிக் கழகம் எனப்படும் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட எரிவெளிக் குழாய்களை அகற்றக் கோரி நெடுவாசல் போன்ற விவசாய கிராமங்கள் பல நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில் காவிரி பாசனப் பகுதியில் புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அறிவித்தது மத்திய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம். ஏற்கனவே காவிரிப் படுகையில் பல்வேறு கிராமங்களில் போடப்பட்டுள்ள எரிவெளிக் குழாய்கள் நாளடைவில் வெடித்தும், நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டும் பல கிராமங்கள் வறட்சியை சந்தித்ததை கண்ட கதிராமங்கல கிராம மக்கள் விழிப்புப் பெற்று ’ஓஎன்ஜிசியே வெளியேறு’ என்று ஒற்றைக் குரலில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து கதிராமங்கலம் கிராமத்துப் பெண்களிடம் பேசினோம்...
“முப்போகமும் விளைந்த மண்ணில் விளைச்சலே இல்லாத சூழலில் தள்ளப்பட்டிருக்கிறோம்” என்கிறார் கதிராமங்கல விவசாயி கலையரசி முருகன். காவிரி பாசனம் இல்லையென்றாலும் நிலத்தடி நீர் கொண்டு வேளாண்மை செய்து வந்த கிராமம் இது. கம்பருக்கு நெற்கதிரால் கூரை நெய்து கொடுத்ததற்காக கதிர்வேய்ந்த மங்கலம் என்றும், பெருமளவுக்கு விவசாயம் பார்த்து வந்ததற்கான வரலாற்று சான்றும் எங்கள் ஊருக்கு உண்டு.
இந்த ஊரைச்சுற்றி ஒரு புறம் காவிரி, மறுபுறம் விக்ரம ஆறு என்று நீர் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் தண்ணீர்ப் பற்றாக்குறையே இத்தனை ஆண்டுகளில் பார்த்தது கிடையாது. இவை அனைத்தும் ஓஎன்ஜிசி நிறுவனம் வந்த பிறகு தலைகீழாய் மாறிப்போனது. இங்கு அமைக்கப்பட்டுள்ள எரிவெளிக் குழாய்களில் இருந்து கச்சா எண்ணெய் அடிக்கடி கொப்புளிக்கிறது, குடிநீரிலும் எண்ணெய் கலந்து வருவதால், இரண்டு மூன்று குழந்தைகளுக்கு கேன்சர் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட்டு இருக்கிறது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துப்போக வேண்டும் என்றாலும் இங்கிருந்து 8 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். எங்கள் கிராமத்தில் சுகாதார மையம் என்று ஒன்று கிடையாது. மருத்துவர்கள் இந்த குடிநீரை பயன்படுத்தாதீர்கள் என்று சொல்கிறார்கள். விலை கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கும் அளவுக்கு எங்களுக்கு வசதி கிடையாது.
எரிவெளிக் குழாய் அமைப்பதற்கு முந்தைய காலத்தில் வாழை, மஞ்சள், உளுந்து, நிலக்கடலை, எள்ளு, நெல்லு என்று பல்வேறு பயிர்களுக்கு நல்ல விளைச்சல் இருந்தது. இதில் பச்சை வாழையில் ஒரு தாருக்கு 24 சீப்பு பழங்கள் வரும். வருடத்திற்கு 600 லோடு பல மாநிலங்களுக்கு அனுப்பினோம். கடந்த 10 ஆண்டுகளில் வாழை விளைச்சலே கிடையாது.
10 அடியில் தண்ணீர் கிடைத்த பூமியில், தற்போது 200 அடி தோண்டி போர் போட்டும் தண்ணீர் சுத்தமாக கிடைப்பதில்லை. இதனால் சிறு குறு விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் போடக்கூடிய பொருளாதார நிலையில் விவசாயிகள் இல்லை. அவரவர் நிலங்களை விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்.
கதிராமங்கலத்தில் விவசாயம் முழுக்க முழுக்க பாதிப்படைந்து இருக்கிறது. 10 குடும்பங்களில் 4 பேர் வெளியூருக்கு சென்று பிழைக்கக்கூடிய நிலைதான் இங்கு இருக்கிறது. எங்கள் எதிர்கால சந்ததியின் நலன் கேள்விக்குறியாகக் கூடாது என்றுதான் அமைதியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். எங்களுக்கு இந்த திட்டத்திலிருந்து முழுமையான விடுதலை வேண்டும். ஏற்கனவே போடப்பட்டிருக்கும் குழாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும்” என்றவரை தொடர்ந்து அனிதா முருகனிடம் பேசினோம்.
‘‘எங்க ஊர் மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டது இந்த அரசு” என்று மெல்லிய குரலில் பேசத்துவங்கினார் அனிதா முருகன். ‘‘2002ம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனம் எங்கள் ஊருக்குள் வந்து மண்ணெண்ணெய் எடுக்கவேண்டும் என்று குழாய் அமைத்தார்கள். அப்பொழுது எங்களுக்கு இதைப்பற்றி எடுத்து சொல்வதற்கு யாரும் இல்லை.
நாட்கள் போகப் போக பிரச்னைகள் வரத்தொடங்கின. கடந்த ஜூன் 1ம் தேதி பெரிய ராட்சச எந்திரங்கள் கொண்டு ஓஎன்ஜிசி நிறுவனம் ஊருக்குள் நுழைந்தது. மக்கள் ஒன்று கூடி கேட்டபோது மாவட்ட ஆட்சியர், குழாய்களை புதுப்பிக்கப் போவதாக கூறினார். எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு அனைத்து வாகனங்களையும் அப்புறப்படுத்துங்கள் என்று முறையிட்டோம்.
எங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுங்கள், அப்புறப்படுத்தி விடுகிறோம் என்று வாக்குறுதியளித்தார் ஆட்சியர். அதன் பெயரில் அனைவரும் கலைந்து சென்றோம். மூன்று நாட்களுக்குப் பிறகு, எங்கள் கிராமத்தை சுற்றி ஆயிரக்கணக்கான காவல்துறையினர் இறக்கப்பட்டனர். எங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
இங்கு என்ன நடக்கிறது என்று தட்டிக்கேட்ட பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை காரணமின்றி கைது செய்தது காவல்துறை. இந்த நிகழ்வு எங்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கிராம மக்கள் அனைவரும் கூடி கோயிலில் ஆலோசித்துக் கொண்டிருந்தபோது சுமார் 60க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து கல்யாண மண்டபத்தில் அடைத்து, இரவு 11 மணியளவில் விடுவித்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள்.
காவல் துறையின் அராஜகத்தை கண்டித்து அமைதியான முறையில் கிராம மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தை நடத்தினோம். காவல் துறையினர் வீட்டிற்கு வீடு வந்து எல்லா கொடியையும் பிடுங்கினர். கேள்வி கேட்ட குழந்தைகளை, ‘எதிர்த்து பேசினால் கைது செய்து விடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர். ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத சூழ்நிலையில் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தோம்.
கிராம மக்கள் அனைவரும் ஊருக்கு வெளியே கூடி ஆட்சியரை சந்திக்கவேண்டும் என்று காத்திருந்தோம். ஓஎன்ஜிசி நிர்வாகிகள், காவல்துறையினர் அனைவரும் வந்தனர். இறுதிவரை ஆட்சியர் வரவே யில்லை. துணை மாவட்ட ஆட்சியர் வந்தபோது அவரிடத்தில் எங்கள் கேள்விகளை முன்வைத்தோம். குடியிருப்பு பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தக்கூடாது என்றும், கைது செய்யப்பட்ட அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும் என்று கேட்டோம்.
எங்கள் ஊருக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்து இருப்பதாக காவல்துறையினர் கூறுகிறார்கள். ஏன் எதற்கு என்று கேட்டதற்கு ‘அப்படி ஒன்றும் போடப்படவில்லை. அவர்களின் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறி அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். இருந்தாலும் எங்களது ஊர் இயல்பு நிலையை அடையவில்லை.
கடந்த ஜூன் 30 அன்று வனதுர்க்கை அம்மன் கோயில் அருகில், ஏற்கனவே போடப்பட்டிருந்த எரிவெளிக் குழாயில் இருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. ஊர் முழுவதும் துர்நாற்றம் வீசத்தொடங்கியதும், மக்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த இடத்தை முற்றுகையிட்டு, மாவட்ட ஆட்சியர் வந்தால் மட்டுமே சீர்செய்ய அனுமதிப்போம் என்று அறவழிப் போராட்டத்தை தொடங்கினோம்.
அதிகாரிகள் யாரையும் நாங்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கவில்லை. அங்கு வந்த துணை வட்டாட்சியரிடத்தில் இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று சொன்னீர்கள், ஆனால் இப்பொழுது பிரச்னை வந்திருக்கிறதே என்று கேட்டோம். நாங்கள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். சிறிது நேரத்தில் சுமார் 2000த்துக்கும் மேலான காவல் துறையினர் எங்களை சூழ்ந்தனர்.
மாலை 6 மணி அளவில் காவல் துறையினர் பெண்கள் என்றும் பாராமல் அடித்து கூட்டத்தை கலைத்து உள்ளே நுழைந்தனர். அதிகாரிகள் சென்ற அடுத்த நொடியிலே எண்ணெய்ப் படலம் பற்றி எரியத் தொடங்கியது. அவ்வளவு நேரம் எரியாத இடத்தில் போலீஸ் நுழைந்த பிறகு எரியத் தொடங்கியதும் போலீசார் அதை காரணமாக கொண்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்கினார்கள். பெண்கள் பலருக்கும் காயம் ஆறவில்லை. இவ்வளவு பிரச்சனைகள் நடந்த பிறகும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
மக்கள் கூட்டம் கலைந்த அடுத்த நொடி மாவட்ட ஆட்சியர் வந்து சம்பவம் நடந்த இடத்தை சோதனை செய்தார். ஆனால் அவர் மக்களை சந்திக்க மறுத்துவிட்டார். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. பெண்களாக முன்நின்று போராட்டங்களை நடத்தி வந்தாலும், வீட்டில் ஆண்களுக்கு பாதுகாப்புஇல்லை. வேலைக்கு சென்ற ஆண்கள் வீடு திரும்பும் வரை உயிரை கையில் பிடித்தபடி இருக்கும் சூழல்தான் ” என்றார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்தும், கதிராமங்கலத்தின் சூழல் குறித்தும் விவரிக்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். ‘‘அடிப்படையில் ஓஎன்ஜிசி நிறுவனம் செய்யக்கூடிய வேலை என்ன என்பது குறித்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் எந்தெந்தப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் இருக்கின்றன என்று ஆய்வு செய்வதற்காக தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் ஆய்வுக் குழாயை அமைத்தது. 1999ஆம் ஆண்டுவரை அந்நிறுவனம் எண்ணெய் எடுத்து வந்தது.
அதன் பிறகு தனியார் நிறுவனங்கள் எடுப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் எண்ணெய் மற்றும் எரிவாயு சட்டத்தின் கீழ் அனுமதியை வழங்கியது மத்திய அரசு. விவசாய மக்களின் அறியாமையை பயன்படுத்தி மண்ணெண்ணை எடுப்பதாகக் கூறி போடப்பட்டது ஓஎன்ஜிசி நிறுவனக்குழாய்கள். சில ஆண்டுகள் கடந்த பிறகு நிலத்தடி நீர் மாசடைவதும், எரிவெளிக் குழாய்கள் எரிவது போன்ற பிரச்சனைகளை மக்கள் தொடர்ந்து பார்த்து தற்போது தெளிவடைந்திருக்கிறார்கள். இது அந்த ஊர் மக்களின் பிரச்னை மட்டும் இல்லை.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரச்சனையாகத்தான் பார்க்க வேண்டும். தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காக நிலத்தில் இருந்து ஹைட்ரோ கார்பனை எடுத்து விட்டு பூமிப் படலத்தில் அடுத்து இருக்கக்கூடிய நிலக்கரியை எடுப்பார்கள். இம்மாதிரியான திட்டங்கள் வளர்ந்த நாடுகளில் மக்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கவேண்டும் என்று சட்டங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் இது போன்ற சட்டங்கள் எதுவும் இல்லை.
இயற்கை எரிவாயு பிரிவு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியது. மாநில அரசாங்கத்திற்கு பங்கில்லை என்றாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அடிப்படையில் நீர் மாசு அடைகிறது என்று எதிர்ப்பு தெரிவித்து மாநில அரசு கட்டுப்படுத்தலாம், ஆனால் மாநில அரசு அந்த முயற்சி யில் ஈடுபடுவதாக தெரியவில்லை. இது காவிரிக் கரையோரம் மட்டும் அல்லாமல்.
ஒடிசா தொடங்கி தூத்துக்குடி வரையிலாக கடலோரப் பகுதியில் எண்ணெய் வளம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. மும்பை போன்ற பகுதியில் கடலுக்கு அடியில் இத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டுமே விவசாய நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இது தொடர்ந்தால் மண்வளம் சீர் கெட்டு மக்கள் ஊரைவிட்டு வெளியேறும் நிலை தமிழகத்தில் உருவாகும். ஓஎன்ஜிசி நிறுவனம் இயற்கை வளங்களை ஆராய்ந்து என்னென்ன வளங்கள் இருக்கின்றன என்று ஒரு தகவலை கொடுக்கும். தனியார் நிறுவனங்கள் அந்தத் தகவலை அறிந்து மத்திய அரசிடம் ஒப்பந்த அடிப்படையில் வளங்களை எடுக்கும். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நெய்வேலியில் எப்படி இன்று விவசாயமே இல்லாமல் மக்கள் கூலி வேலை செய்கிறார்களோ அதே நிலைதான் தமிழகம் முழுவதும் ஏற்படும்.
மக்கள் ஒரு திட்டத்தை எதிர்ப்பதும், அத்திட்டங்களை மாநில அரசுகள் மக்கள் மீது திணிப்பதும் தொடர்ந்து நடந்து வருவது தொடர்ச்சியாகிவிட்டது. அதிலும் தற்போது ஆளுகின்ற மாநில அரசு மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளை அனுசரித்து போகக்கூடிய சூழ்நிலையில் இருப்பதால் கூடுதலான ஆதரவை தெரிவித்து வருகிறது. இதுவே மக்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்கும் முயற்சிக்கு காரணமாக அமைகிறது’’ என்கிறார் வெற்றிச்செல்வன்.
|