சல்யூட் ப்ரித்திகா யாஷினி



-ஜெ.சதீஷ்

ஏப்ரல் 15... திருநங்கைகள் தினம்  கொண்டாடும் நேரத்தில் திருநங்கையான ப்ரித்திகா யாஷினி காவல்துறை துணை ஆய்வாளர் பணியில் சேர்ந்திருப்பது நிச்சயம் பிற திருநங்கைகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாகவே இருக்கும்.

ப்ரித்திகா யாஷினியின்  வாழ்க்கைப் பயணம் பல  சட்டப் போராட்டங்களுக்குப் பின் வெற்றி கண்டுள்ளது. ப்ரித்திகாவின் விடாமுயற்சிதான் இந்தியாவின் காவல்துறையில் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் என்ற பெருமையை பெற்றுத்தந்துள்ளது. ஆனால் இதற்கு பின்னால் அவர் சந்தித்த துயரங்கள் மிக அதிகம். பொதுவாகவே எந்தத் துறையிலும் பெண்கள் சாதித்து தங்களை நிலை நாட்டிக் கொள்வது போராட்டங்கள் நிறைந்ததாகவே இருக்கும், இதுவே திருநங்கை என்றால் சொல்லவே வேண்டாம்.

இன்றளவும் திருநங்கைகளின் வாழ்க்கை நிலை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. தனக்கான உரிமையைக் கூட இந்த சமுதாயத்தில் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. ப்ரித்திகாவும் பல முறை நீதிமன்றம் சென்றே பெற்றிருக்கிறார். சேலத்தில் உள்ள கந்தம்பட்டி என்ற ஊரில் பிறந்து வளர்ந்த ப்ரித்திகாவிற்கு தனது பள்ளிப் பருவத்தின் போதே அவரின் மாற்றம் புலப்பட ஆரம்பித்திருக்கிறது.

அவருடைய பதின்பருவம் தன்னை முழுவதுமாக அறிந்து கொள்ள உதவியிருக்கிறது. மிகுந்த சிரமங்களுக்கிடையே 2011 ம் ஆண்டு கணினி பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். கல்வியின் அவசியத்தை உணர்ந்திருந்த ப்ரித்திகா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 2011ம் ஆண்டு படிப்பை முடித்ததும், வீட்டில் உள்ள பிரச்சனையின் காரணமாக சென்னை வந்தார்.

பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பம் செய்து நேர்காணல் நிறைவு பெற்றதும் அவர் ஒரு திருநங்கை என்பதே, வேலை நிராகரிப்பிற்கு காரணமாக இருந்திருக்கிறது. மிகுந்த இடர்பாடுகளை கடந்த ப்ரித்திகா தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். ப்ரித்திகாவிற்கு சிறு வயதிலிருந்தே காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெற்ற எஸ்.ஐ தேர்வு அவருடைய ஆசைக்கு பரிசாக அமைந்தது.

காவல்துறையில் துணை ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பித்தார். விண்ணப்பம் ஏற்கப்படாத நிலையில் நீதிமன்றம் சென்றார். பின்னர் மே மாதம் எழுதிய தேர்விற்கான முடிவுகள் ஜூலை மாதத்தில் அறிவிக்கப்பட்டது. சாதி, ஆண், பெண், சமூகம், துறை ரீதியாக என பல்வேறு நிலைகளின் கீழ் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இவருக்கு எந்த கட் ஃஆப் மதிப்பெண்ணும் வரையறுக்கப்படவில்லை. மீண்டும் நீதிமன்றம் சென்றார்.

இதன் பிறகு உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது. நானூறு மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கைப்பந்து என எல்லா தேர்வுகளை கடந்து நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒரு வினாடி தாமதமாக வந்ததால் நிராகரிக்கப்பட்டார். சான்றிதழ்களில் உள்ள பெயரும் அவருடைய ப்ரித்திகா யாஷினி என்ற பெயரும் பெறும் சிக்கலாகவே இருந்தது. மீண்டும் நீதிமன்றம் வரை சென்று வென்றுள்ளார்.
 
நவம்பர் மூன்றாம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த திருநங்கைகளுக்கான இடஒதுக்கீட்டு உத்தரவு இவருக்கு மட்டுமின்றி இவர் சார்ந்த சமூகத்தையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்தது. உடல்ரீதியாக, மனரீதியாக மிகுந்த போராட்டங்களை சந்தித்த ப்ரித்திகா வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்த பொழுது தங்க இடம் கூட இல்லாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். வீடு தர கூட யாரும் முன்வரவில்லை. வேலை பெறுவது என்பது மிக கடினமாக இருந்துள்ளது. 
 
கொஞ்சம் கொஞ்சமாக ப்ரித்திகாவின் வீட்டார் அவரை புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மாற்றங்கள் காரணமாக அவர்களை புறக்கணிக்கக் கூடாது. மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் புரிந்து கொண்டால் பெரும்பாலானோர் வீட்டை விட்டு வெளியேறும் அவசியம் ஏற்படாது.
 
ப்ரித்திகாவிற்கு தன்னம்பிக்கை  அதிகம் இருந்தாலும், புறக்கணிப்பு, இன்னல்கள் இவையே ப்ரித்திகாவை சாதிக்க உந்தித் தள்ளியிருக்கிறது. இந்த வெற்றி மாற்றம் குடும்பத்தினரின் சந்தோஷம், மீடியா பேட்டி, முகம் தெரியாதவர்களிடம் இருந்து கூட வாழ்த்துகள், இடைவிடாத தொலைபேசி அழைப்புகள் என, அவர் சாதிக்க வேண்டியதை நோக்கிய பயணத்தை வேகப்படுத்தி உள்ளது. அடுத்து வரும் இளம் தலைமுறையினருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறார் ப்ரித்திகா யாஷினி.