ப்ரியங்களுடன்...........
‘வேற்றுமையிலும் ஒற்றுமை’ என இந்தியா தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், மூடநம்பிக்கைகளின் முன்னோடியாகவே இன்றும் இருக்கிறது. இவ்விஷயத்தில் மத்திய அரசின் மவுனத்தைக் கண்டித்து, உச்சபட்ச கௌரவமான சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்த நயன்தாரா சேகலின் முடிவு அரசுக்கு ஒரு பாடம். - ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர் மற்றும் பிரபாலிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.
படித்தவர் எல்லோருக்கும் வேலை கிடைத்துவிடுவதில்லை. கிடைத்தாலும் சிலருக்கு வெளியில் சென்று வேலை பார்க்க முடியாத சூழ்நிலை. ‘நீங்கதான் முதலாளியம்மா’ அவர்களுக்கான அருமையான வழிகாட்டியாக, உற்சாகம் தந்து உரமேற்றுகிறது. - எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
‘80 குழந்தைகளின் தாய்’ வாசிக்கையில் கண் கசிந்தது. மேரியம்மா இன்னொரு அன்னை தெரசா! - கே.தங்கராஜ், கோவை.
பெண்களின் ‘லுங்கி’ கவர்ச்சியால், இனி ஆண்கள் ‘குலுங்கி’ புலம்பினாலும் வியப்பதற்கில்லை! - சுகந்தி நாராயண், வியாசர்பாடி.
சீனா பற்றிய தவறான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். கட்டுரை படு சுவாரஸ்யம். சுபஸ்ரீ அவர்களுக்குப் பாராட்டுகள்! - ராஜி குருஸ்வாமி, சென்னை-88.
ஆரோக்கிய பெட்டகத்தில் கருணைக்கிழங்கின் பயன்களையும் மருத்துவ குணங்களையும் தெரிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. - கே.ராஜேஸ்வரி, மணப்பாறை மற்றும் ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.
‘யாரோ யாரோடி’ அத்தனையும் சூப்பர். படு சுவாரஸ்யமாக இருந்தது! - எஸ்.ஆனந்த், பரமத்தி.
சங்ககாலம் தொடங்கி இன்று வரை பொருள் தேடப் பிரிகிற ஆணை திடப்படுத்துகிறவளாகவும், அவனுடைய கடமைகளை நிறைவேற்றுவதற்காக தன்னுடைய விருப்பங்களை விட்டுக் கொடுக்கிறவளாகவும் பெண்ணே இருக்கிறாள் என்று ‘ஒரு பெண் நீர் வார்க்கிறாள்’ மூலம் பெண் பெருமையை எடுத்துக்கூறிய சக்தி ஜோதிக்கு நன்றி! - எம்.கவிதா, ஆதம்பாக்கம், சென்னை-88.
ஏழ்மை நிலையிலும் படிப்பை தொடர்வதோடு சிலம்பாட்டத்திலும் சிறந்து விளங்கும் அலமேலு, ‘பெண்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணம் எல்லோர்கிட்டயும் இருக்கு... அதுல கொஞ்சமும் உண்மை இல்லை’ என்று கூறியது நூற்றுக்கு நூறு உண்மை! - வி.புஷ்பா, பெருந்துறை.
நம் மருதாணியின் பெருமையை உலக அளவில் பரவச் செய்து கொண்டிருக்கும் பிரேமா வடுகநாதனுக்கு வாழ்த்துகள். - ரஜினி பாலசுப்ரமணியன். சென்னை-91 (மின்னஞ்சலில்...)
தங்களது திறமையால் உலகையே உற்றுப்பார்க்க வைத்து, நமது பெண்களின் பெருமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் உலகெங்கும் உள்ள நம் தோழிகள் இந்தியப் பெண்மையின் இறையாண்மைக்கு இலக்கணம்! - வளர்மதி ஆசைத்தம்பி, விளார், தஞ்சாவூர்-6 (மின்னஞ்சலில்...)
ஏ.ஆர்.சி.கீதா சுப்ரமணியம் தங்கத் தொழிலின் நுட்பங்களை மட்டுமல்ல... சுரங்கத் தொழிலாளர் நிலையையும் பகிர்வது அவரது சமுதாய நோக்கைப் புலப்படுத்துகிறது. - ச.சபாரத்தினம் (சுரங்க மேலாளர்-ஓய்வு), கோவைப்புதூர் (மின்னஞ்சலில்...)
|