ஒரே செடியில் இரண்டு காய்கள்!



ஒரே செடியில் கத்தரிக்காயும் காய்த்து அதன் வேரில் உருளைக்கிழங்கும் விளைந்தால் எப்படியிருக்கும்? மேஜிக் போலிருக்கும் இதை உண்மையாக்கிக் காட்டியிருக்கிறார்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.கத்தரிக்காயை முட்டைத் தாவரம் என்றுதான் அழைக்கிறது மேற்குலகம். சிப்ஸ் என்றால் அவர்களுக்கு உருளைக்கிழங்குதான்.

ஆக, எக் & சிப்ஸ் பிளான்ட் (Egg&Chips Plant ) என்ற பெயரில் இந்த இரண்டையும் கலப்பினம் செய்து ஒரே செடியாக்கும் ஆராய்ச்சி அங்கே பல ஆண்டுகளாக நடக்கிறது. இப்போது ஒரு வழியாக இது சாத்தியமாகிவிட, இங்கிலாந்தைச் சேர்ந்த தாம்சன் & மார்கன் நிறுவனம் இதற்கான விதைகளை விற்கவும் துவங்கிவிட்டது.

உருளைக்கிழங்கை தனியாகவும் கத்தரியை தனியாகவும் பயிரிட்டு வளர்க்க அதிக இடம் தேவை. அந்தச் சிக்கலை இது தீர்த்து வைக் கிறது. மேலும் பால்கனிகளில் தொட்டி வைத்து செடிகளை வளர்க்கும் தாவர ஆர்வலர்களுக்கும் ஏற்றபடி இந்தச் செடி இருக்கிறது. விளம்பரத்துக்காக சிறிய தொட்டியில் வளர்க்கப்பட்ட இந்த இரட்டைச் செடி, நான்கு மெகா சைஸ் கத்தரிக்காய்களையும் 2 கிலோ உருளைக்கிழங்கையும் தந்திருக்கிறது.