காமிக்ஸ் பிதாமகன்!



மார்வெல் காமிக்ஸை உலகம் கொண்டாடும் நிறுவனமாக பேசவைத்த உழைப்புக்கு சொந்தக்காரர், ஸ்டான் லீ. 1922 ஆம் ஆண்டு டிச.28 அன்று அமெரிக்காவின் மன்ஹாட் டனில் பிறந்த ஸ்டான் லீ, பத்து வயதிலேயே ஷேக்ஸ்பியர், ஆர்தர் கானன் டாயில், மார்க் ட்வைன் ஆகியோரின் நூல்களை வாசிக்கத் தொடங்கிவிட்டார்.  

ரொமேனியாவைப் பூர்வீகமாக கொண்ட ஸ்டான் லீ, டெவிட் பள்ளியில் படித்தார். தீவிர இலக்கிய வேட்கையில் பல்வேறு வேலைகளைப் பார்த்தவர், டைம்லி பப்ளிகேஷன் என்ற தனது உறவினரின் கம்பெனியில் வாரத்திற்கு 8 டாலர் சம்பளத்தில் வேலைக்குச்  சேர்ந்தார். காமிக்ஸில் ஸ்டான் லீக்கு ஆர்வம் வந்தது இங்குதான்.

இங்கு தான் ஓவியர் ஜேக் கிர்பி, எழுத்தாளர் ஜோ சைமன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. சூப்பர்ஹீரோ கதைகளை எழுதுவது, எடிட் செய்வது என ஆபீசின் அத்தனை வேலை களையும் செய்தார் ஸ்டான் லீ. “நான் எழுதிய கதைகளைஒரே சிட்டிங்கில் எழுதி முடிப்பேன். பெஸ்ட்டாக எழுதினேனா என்று தெரியாது.

ஆனால் வேகமாக எழுதிமுடிப்பேன்” என்பது ஸ்டான் லீ வாக்கு. ஜோன் பூகாக் என்ற மாடல் அழகியை மணந்த ஸ்டான் லீக்கு இரு மகள்கள் பிறந்தனர். அதில் ஒருவர் சில நாட்களிலேயே இறந்துபோனார். 1940 ஆம் ஆண்டில் காமிக்ஸ் நூல்கள் அபரிமிதமாக விற்றன. அதேசமயம் அமரத்துவம் உள்ளிட்ட தத்துவங்களை கலந்துகட்டி அடித்த EC, DC காமிக்ஸ்கள் செனட் சபை கண்டனத்திற்குள்ளாயின.

காதல், பேய்க்கதை எழுதி சோர்ந்துபோன ஸ்டான்  லீ, 1961 ஆம் ஆண்டு கிர்பியுடன் இணைந்து ஃபென்டாஸ்டிக் ஃபோர் காமிக்ஸை படைக்க மாஸ் வெற்றி. இன்கிரடிபிள் ஹல்க் கதாபாத்திரத்தை மேற்சொன்ன ஜோடியும், 1962 ஆம் ஆண்டு ஸ்பைடர்மேனை ஸ்டீவ் டிட்கோவுடன் இணைந்தும் உருவாக்கினார் ஸ்டான் லீ. ஓவியர்களுக்கு கதை குறித்த குறிப்பை கொடுத்து அவர்கள் வரைய சிறுசிறு வசனங்கள், ஒலிகளைச் சேர்த்து அதனை நிறைவாக்குவது ஸ்டான் லீ ஸ்டைல்.  

கிர்பி, டிட்கோ ஆகியோர் ஸ்டான் லீயுடன் சேர்ந்து உருவாக்கிய கேரக்டர்களுக்கு உரிமை, கிரடிட் தருவதில் பிரச்னை ஏற்பட இருவரும் 1966-1978 காலகட்டங்களில் விலகியும் இணைந்தும் வேலைசெய்யும் சிக்கல் ஏற்பட்டது. இறுதியாக கிர்பியுடன் 2014 ஆம் ஆண்டு சட்டபூர்வ ஒப்பந்தமிடப்பட்டு அவரின் பெயருக்கு இன்றுவரையும் படங்களில் அங்கீகாரமும், பணமும் அளிக்கப்பட்டு வருகிறது.   

1980 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸுக்கு நகர்ந்த ஸ்டான் லீ, அனிமேஷன் தொடர்களைத் தயாரிக்க முயற்சித்தார். இன்கிரடிபிள் ஹல்க்கை சிபிஎஸ் சேனலில்(1978-82) ஒளிபரப்பி வென்றார். பின் ஃபாக்ஸ் சேனலில் வெளியான எக்ஸ்மேன் தொடர் மெகா வெற்றி பெற்று நம்பிக்கை தந்தது. மார்வெல் எண்டர்பிரைஸ் நிறுவனத்திற்காக உழைத்தாலும் ஸ்டான்லீக்கு தரவேண்டிய தொகை குறித்த பிரச்னை வெடித்தது.

ஆட்டோகிராப்புக்கு 120 டாலர்கள் காசு வாங்கி தன்னை காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் கூட ஸ்டான் லீ இருந்தார். வால்ட் டிஸ்னி 2009 ஆம் ஆண்டு 4 பில்லியன் டாலர்களுக்கு மார்வெல்லை வாங்கியது. ஸ்டான் லீ நிறுவனத்தில் 2.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய பிரச்னை முடிவுக்கு வந்தது.

“கொஞ்சம் அதிகநேரம் கிடைத்தால் திரைப்படங்கள், சொற்பொழிவு, அனிமேஷன் தொடர்கள் செய்திருப்பேன்” என ‘வித் கிரேட் பவர்' ஆவணப்படத்தில்(2010) கூறினார் ஸ்டான் லீ. காலம் யார் கேட்டு நிற்கப்போகிறது? தான் விதைத்த கனவுகள் உலகெங்கும் முளைத்து வந்து கொண்டிருப்பதை  ஸ்டான் லீ மகிழ்ச்சியுடன் விண்ணிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருப்பார்.