முத்தாரம் நேர்காணல்



“இந்தியச்சூழலில் அறிவியல் ஆராய்ச்சிகளைக் காப்பாற்றுவதே பெரிய சவால்தான்!”

நேர்காணல்:
அனிகெட் சுலே, ஆராய்ச்சியாளர், ஹோமிபாபா ஆராய்ச்சி மையம் (HBCSE)

2002 ஆம்  ஆண்டு மும்பை ஐஐடி யில் முதுகலை இயற்பியல் படித்த சுலே, ஜெர்மனியின் பாட்ஸ்டம் பல்கலையில் வானியற்பியலில் முனைவர் பட்டம் வென்றவர், 2007 ஆம் ஆண்டிலிருந்து  ஹோமி பாபா ஆராய்ச்சி கல்விமையத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.
 
மனிதவளத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் சத்யபால் சிங்கிற்கு எதிராக எப்படி கடிதம் எழுதினீர்கள்?  

அமைச்சர் கூறிய டார்வினிய அறிவியல் கொள்கை நவீன அறிவியலையே அசைத்துப் பார்ப்பது என்பதால்தான் கடிதம் எழுதும் முயற்சியை செய்தோம். அதிகாரத்திலுள்ளவர்கள் தாறுமாறு தத்துவமாக அறிவியலைப் புரிந்து  கொண்டு  பேசுவதும்  செயல்
படுவதும் பின்னாளைய தலைமுறையைப் பாதிக்கும். வேதியியலில் பென்ஸீன் அமைப்பு அல்லது இயற்பியலில் நியூட்டனின் விதிகளை எப்படி திடுதிப்பென தவறு எனக் கூறுவீர்கள்? அறிவியல் ஆராய்ச்சிகளைக் காப்பாற்று வதே இந்திய அரசியல் சூழலில் கடினமாகி வருகிறது.
 
அறிவியலுக்கு எதிரான மன நிலையாக இதனைக் கருதலாமா?  

வரலாறு நெடுக அறிவியலுக்கு எதிரான அரசுகளை நாம் பார்க்க முடியும். சர்வாதிகாரிகள் தம்மை நோக்கி மக்கள் எழுப்பும் எவ்வகையான கேள்விகளையும் விரும்புவதில்லை. ஆனால் நகைமுரணாக  இதுபோன்ற நாடுகள்தான் விஞ்ஞானத்தில் முன்னுரிமை பெற்று விளங்குகின்றன.
 
நரேந்திர தபோல்கர் முகம் தெரியாத ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நிலைமை என்ன?  

தபோல்கர் படுகொலையாகி ஐந்து ஆண்டுகளாகியும் குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அடுத்ததாக பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், தன் வீட்டிலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு கொலையானார். ஆனால் இதெல்லாம் மகாராஷ்டிராவில் ஏன் நடப்பதில்லை என எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
 
இந்தியாவெங்கும் பொறியாளர் களும், மருத்துவர்களும் நிரம்பிய சூழலில் மூடநம்பிக்கைகளுக்கு மக்கள் இன்றும் பலியாகி வருகின்றனர். ஏன் இந்த நிலைமை?  

மருத்துவர்கள், பொறியாளர் களாக உருவாகுபவர்கள் யாரும் நேர்மையான வழியில் அறிவியலின் செயல்பாட்டைப் புரிந்துகொண்டு தம்மை தயாரித்துக் கொண்டவர்களில்லை. உண்மையில் நாம் கற்றறிந்த சமூகம் என்றால் நாளிதழ் களில் ஏன் ஆன்மிகப் பத்திகளும் ராசிபலன்களும் வெளியாகின்றன? இவற்றைத் தவிர்த்துவிட்டு பத்திரிகைகளை வெளியிட என்ன தயக்கம்?
 
பள்ளி மாணவர்கள் இன்றும் கணிதம், அறிவியல் இரு பாடங்களைக் கண்டும் மிரள்வது தொடர்வதற்கு காரணம்தான் என்ன?   

தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களை சரியாக ஊக்கப்படுத்தாமல் இருப்பது. இரண்டாவது, பெற்றோர் களுக்கு கணிதத்தில் ஆர்வமில்லை என்பவை முக்கிய காரணங்கள். ஆசிரியரின் பாடம் நடத்தும் முறை மாணவர்களுக்கு ஏற்ற விதத்தில் இல்லாதது முக்கியமான காரணம். இதன்விளைவாக கணிதம் விரும்பும்/வெறுக்கும் மாணவர்கள் என இருபிரிவினர் வகுப்பில் உருவாகிறார்கள்.
 
அறிவியலை நுகர்பொருள் சந்தைக்கு நிரூபணமின்றி பயன்படுத்தும் வழிமுறைகளால் பாதகம் ஏற்படுகிறதா?  

நிச்சயமாக. அறிவியல்பூர்வ ஆராய்ச்சியற்ற கருத்துக்களை  வணிகத்திற்காகக் கூறும்போது பாதகங்கள் நிகழ்கின்றன. கிரகண நாளில் நிலவிலிருந்து புற ஊதாக் கதிர்கள் பூமியில் படாததால் பாக்டீரியாக்கள் வளர்ச்சி யடைகின்றன என்பதும், பதினோராவது அட்சரேகையில் ஆசிரமம் அமைந்துள்ளதால் நேர்மறை கதிர்களைப் பெறுகிறது எனும் ஜக்கி வாசுதேவ் போன்றோரின் மூடநம்பிக்கை கூற்றுகளும் மக்களின் வாழ்வில் அறிவியலை மிகவும் எதிர்மறையாக்குகின்றன.

-Sanjukta sharma, Livemint.com

தமிழில்: ச.அன்பரசு