சென்னை சீக்ரெட்ஸ்



மருத்துவமனை வரலாறு!

கோட்டை மருத்துவமனையின் முதல் சர்ஜன் ஜான் கிளார்க். மெட்ராஸ் ஜெனரல் ஹாஸ்பிடலான இங்கு எட்டு முதல் பத்து ராணுவ வீரர்கள் தங்கி சிகிச்சை பெறும் வசதி இருந்தது. 1680ல் கோட்டையில் புனித மேரி சர்ச் கட்டப்பட்டதும் மருத்துவமனையை விரிவுபடுத்த பேசி, 838 பகோடாகள்(ரூ.3,000) நிதி திரட்டி சர்ச் அருகேயே இரண்டு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது. கோட் டைக்குள் ஆட்கள் பெருக
இடத்தேவையும் அதிகரித்தது.

மருத்துவமனையின் கட்டுமானத் தொகையைத் திருப்பித் தந்து கம்பெனியே அக்கட்டிடத்தை வாங்கிக் கொள்ள கோட்டைக்கு உள்ளே ஒரு வாடகைக் கட்டிடத்திற்கு மாறியது மருத்துவமனை. புதிய கவர்னராக வந்த சர் எலிஹு யேல், கோட்டையின் வடபகுதியில் (நாமக்கல் கவிஞர் மாளிகை)  புதிய மருத்துவமனைக் கட்டிடத்தைக் கட்டினார். ஏறத்தாழ 60 ஆண்டுகள் மருத்துவமனை அதே இடத்தில் செயல்பட்டது.
 
18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த போர்களால் கோட்டையில் வீரர்கள் குவிந்ததாலும், ஆயுதங்களின் சேமிப்பாலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதன்விளைவாக மருத்துவமனைக் கட்டிடம் ராணுவ முகாமாக மாறியது. 1753ல் மருத்துவமனை கோட்டையை விட்டு வெளியேறி கருப்பர் நகரின் ஒரு பகுதியான பெத்தநாயக்கன் பேட்டையில் அமைந்தது.

அன்றைய மருத்துவ மனை அடிக்கல்லை பொது மருத்துவமனை வளாகத்தில் இன்றும் காணலாம். இதை 1953ல் பார்த்தவர்கள் மருத்துவ மனைக்கு 200 ஆண்டு என தவறுதலாகக் கொண்டாடிய ஆவணங்களும் உள்ளன. நிறைவில், 1758ல் மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள் தேவை என அன்றைய கவர்னர் ஜார்ஜ் பிகாட்டுக்கு கடிதம்  எழுதப்பட்டு,  கட்டுமான பிளானும் கொடுக்கப்பட்டது.

அன்று நடந்த போர்களால் திட்டம் செயலாகவில்லை. 1771ல் ராணுவ வாரியம் அங்கீகாரம் கொடுக்க, டபுள் பிளாக் எனப் படும் கட்டுமானம் அமைக்கப்பட்டது. 1772ம் ஆண்டிலிருந்து இன்றைய சென்ட்ரல் ரயில்நிலையம் எதிரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.