குற்றத்தின் சம்பளம்!



வரலாற்று சுவாரசியங்கள்

லெக்ராஸின் கண்ணில் பட்டது ஹோரியின் கர்மா என்றுதான் சொல்லவேண்டும். “ஏதாவது ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளாயா?” என்று கேட்க, ஹோரி தன் பழைய பகையை மறந்து உண்மையை உளறிவிட்டார். “நியூயார்க்கிலுள்ள வின்ஸ்லோ ஹோட்டலில் பெட்டியில்
ஓவியங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்” என்று சொல்ல, போட்டு வாங்கிய லெக்ராஸின் பிளான் மெகா வெற்றி.  

உடனே ஹோட்டலுக்கு போன் போட்டு ஹோரி போல பேசி, அதை எடுத்துக்கொள்ள அவரின் ஆட்கள் வருவார்கள் என்று  கூறி ஓவியங்களை எடுத்து விற்று கோடீஸ்வரன் ஆகிவிட்டார் லெக்ராஸ். ஆனால் இந்த உண்மை ஏதும் ஹோரிக்கு உடனே தெரியவரவில்லை. ரோம், பாரிஸ் என காசுக்கு  நாயாய் அலைந்து திரிந்த ஹோரியை மீண்டும் லெக்ராஸ் சந்தித்தார்.

“நான் உன் ஓவியங்களை விற்றுத்தருகிறேன். ஆனால் நீ இபிஜா தீவில்தான் வசிக்கவேண்டும். மாதாமாதம் உன் கணக்கில் கரெக்ட்டாக பணம் வந்து சேரும்” என்று லெக்ராஸ் ஒப்பந்தம் போட, ஹோரியும் வெகுளியாய் ஓகே சொன்னார். சும்மாயில்லை, ஹோரி வசிக்க புத்தம் புதிய மாளிகையை இபிஜாவில் கட்டிக்கொடுத்தார் லெக்ராஸ்.
 
அப்போது லெக்ராஸின் வலையில் டெக்ஸாஸைச் சேர்ந்த எண்ணெய்க் கிணறு அதிபர் அல்ஜெர் ஹர்டுல் மாட்டினார். இவரிடம் மட்டும் 46 ஓவியங்களை ஹோரி ஏமாற்றி விற்றார். ஆனால் வியாபாரத்தில் லெக்ராஸுக்கும் ஹோரிக்கும் மீண்டும் பிரச்னை.

அதோடு அல்ஜெருக்கும் ஹோரி மீது லைட்டாக டவுட் உருவானது. அப்போது லெக்ராஸ் பாரிஸில் ஓவியக்கடை போட்டு ஹோரியின் ஓவியங்களை வாங்கி விற்கத்தொடங்கினார். அப்போது அங்கு வேலை செய்த பணியாள், ஓவியத்தின் அழுக்கை தூசுதட்ட நிப்பான் பெயிண்ட் கையோடு உரிந்துவர,  போலி ஓவியம் என்ற செய்தி பாரிஸ் எங்கும் பரவியது.

லெக்ராஸ் யார் கையிலும் சிக்காமல் எகிப்துக்கு எஸ்கேப் ஆகி யிருந்தார். அடுத்த ஆள், வரைந்த ஹோரிதானே? ஸ்பெயின் நாட்டு சட்டப்படி இரண்டு மாதங்கள் ஹோரிக்கு சிறை. ஆனால் முதல் வகுப்பு சிறை என்பதால் புத்தகங்கள், துணிகள், மேஜை, நாற்காலி என அத்தனை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன. 1968 ஆம் ஆண்டு  ரிலீசான ஹோரி சொன்ன  உண்மைகளை வைத்து இர்வின் என் பவர் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டு புகழ்பெற்றார்.  

நூலின் பெயர் போலி. இதன் பெயரில் பிரபல நடிகர் ஆர்சன் வெல்ஸ் திரைப்படமும் எடுத்தார். 1979 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் பிடிபட்ட லெக்ராஸ் பிரான்சிற்குக் கொண்டு வரப்பட்டார். இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை. தன்னையும் கைது செய்வார்கள் என்ற பயத்தில் சில நாட்களிலேயே ஹோரி தூக்கமாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்துகொண்டார்.

(அறிவோம்)

ரா.வேங்கடசாமி