மக்களுக்காக ராணியின் சவால்!



மர்மங்களின் மறுபக்கம் 52
 
இங்கிலாந்தை கடைசியாக ஆண்ட ஆங்லோ-சாக்சன் அரசர் எட்வர்டுக்கு   மக்களை டார்ச்சர்  செய்வது தினசரி ஹாபி. கவென்டிரியில் இருந்த மக்கள் இவரின் கொடுமையான வரிவிதிப்பால் அரசுக்கு உழைத்தே வரி கட்டியே களைத்தார்கள். மெர்சியாவின் பிரபு லியோபிரிக் எட்வர்ட், அணுவளவும் சொகுசு குறையாமல்  வாழ்ந்தவர்.

மக்களின் அபயக்குரலை  கடுமையாக  வெறுத்து  ஒதுக்கி. மக்களின் மீது அடுக்கடுக்காக  வரிகளை சுமத்தினார்.  லியோ பிரிக்கின் மனைவி காடிகிப் மக்களின் அவலநிலையை உணர்ந்து வரியைக் குறையுங்கள் என்று கணவரிடம் பணிவாகக் கெஞ்சுவது வழக்கம். ஒருமுறை காடிகிப்பின்  நச்சரிப்பு  லிமிட்  தாண்ட,  அவளுக்கு ஒரு சவால் விடுத்தார் லியோபிரிக்.

‘‘நீ உன் குதிரையின் மீது நிர்வாணமாக ஏறி அமர்ந்து டவுன் மார்க்கெட்டின் ஒரு பகுதியில்  இருந்து  மறுபகுதிக்குச் சென்று வர வேண்டும். அப்படிப்பட்ட ஊர்வலத்தை நீ நடத்திக் காட்டினால், மக்களின் வரியைக் குறைக்கிறேன்’’ என்றார். அவமானத்துக்கு பயந்து மனைவி  தன்னை  நச்சரிக்க மாட்டாள் என்பதே  லியோபிரிக்கின் நோக்கம்.  காடி கிப்பின் மனதில் மக்கள் படும் துன்பமே நிறைந்து இருந்தது.

அதைப் போக்க இப்படி ஒரு வழி இருக்கிறதே என்று நினைத்த அவள், தன் கணவர்  எதிர்பார்க்காத வகையில்,  சவாலை மறுநாளே நிறைவேற்ற முன்வந்தாள்.மறுநாள் காலையில் நிர்வாணமாக அவள் தன் குதிரை மீது ஏறி அமர்ந்தாள். அவள் தன் கணவன் கட்டளையிட்ட பிரகாரம் மார்க்கெட்டின் ஒரு பக்கமிருந்து  இன்னொரு பக்கத்திற்கு குதிரை மீது பவனி வந்தாள்.

தான் சொன்ன விசித்திரமான கட்டளையை மனைவி நிறைவேற்றி விட்டாள் என்பதால், அவள் சொன்னபடி கணவர் லியோபிரிக் வரிச் சுமையைக்  குறைத்தார். தங்களுக்காக பிரபுவின் மனைவி செய்த மாபெரும்  தியாகத்திற்காக  அவளைப் போற்றிய மக்கள், ‘லேடி கோடிவா’ என்று அழைத்தார்கள். இந்தச் சம்பவம் சரித்திரத்திலும் இடம் பெற்று விட்டது.

இளம் வயதில் 1028 ஆம் ஆண்டு பணக்கார விதவை காடிகிப் (கோடிவா) தனது இளம் வயதிலேயே முடிவை நெருங்கி விட்டோம் என்ற பயத்தில்   தனது   சொத்தின்   பெரும்பகுதியை  எலே  என்னும்  இடத்தில் இருந்த கிறிஸ்துவ மடாலயங்களுக்கு எழுதி  வைத்து விட்டாள். ஆனால் அப்போது நல்ல வைத்தியர்கள் சிலரால் அவள் தனது நோயில் இருந்து நீங்கி நல்ல ஆரோக்கியத்தைப் பெற்றாள். அதன் பின்னர் அவள் மெர்சியா பிரபுவை தனது புதிய கணவராக ஏற்றுக்  கொண்டாள்.

ரா.வேங்கடசாமி
(வெளிச்சம் பாய்ச்சுவோம்)