துள்ளாத மனமும் துள்ளும்!




உணவும் உறுப்பும்


கேரட் கண்ணுக்கு நல்லது... ஆப்பிள் பல்லுக்கு நல்லது... இப்படிஒவ்வொரு உணவையும் அதன் அருமை பெருமைகளை விளக்கிச்சொன்னாலுமே சிலரை சாப்பிட வைக்க முடியாது. உண்கிற உணவுக்கும்உடலின் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகக் கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று... இதுவரை தொடாத உணவுகளைக் கூடத் தேடிப் பிடித்து உண்ணச் சொல்கின்றன அந்தத் தகவல்கள்!

*கேரட்

கேரட்டை குறுக்கே நறுக்கினால் கண் போன்றே காட்சியளிக்கும். தினமும் கேரட்டை உணவில் சேர்த்துக்கொண்டால் தெளிவான பார்வையைப் பெறலாம். கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின்,

கேட்டராக்ட் எனப்படும் கண்புரை நோயை வரவிடாமல் செய்கிறது. இந்த வேதிப்பொருள் 60 வயதுக்கு மேலே வரும் பார்வைக் குறைபாட்டினையும் தடுக்கிறது. கேரட் சாப்பிடும் போது இயற்கையாக கிடைக்கும் பீட்டாகரோட்டினின் வீரியம் மாத்திரையாகச் சாப்பிடும் போது கிடைப்பதில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

*வால்நட்

பார்ப்பதற்கு மனித மூளையைப் போலவே காட்சியளிக்கும் வால்நட் சாப்பிடுவதால் மூளைக்கு பலவித நன்மைகள் கிடைக்கின்றன. பருப்பு வகைகளில் வால்நட்டில் மட்டுமே ஒமேகா-3 எனும் கொழுப்பு அமிலம் உள்ளது.

இது டிமென்ஷியா என்னும் மறதி நோய் வராமல் தடுக்கிறது. அல்ஸீமர் நோய் வருவதற்கான மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களையும் தடை செய்கிறதாம் வால்நட். எலிகளுக்கு வால்நட் சாப்பிடக் கொடுத்து ஆராய்ச்சி செய்தபோது, மூளைக்குக் கட்டளை அனுப்பும் செல்கள் நன்றாக இயங்கியதை கண்டறிந்தனர்.

*தக்காளி

தக்காளியை நறுக்கினால் அதில் இதயம் போலவே 4 அறைகள் இருக்கும். தக்காளியில் இருக்கும் லைக்கோபேன் எனும் வேதிப்பொருள் இதய நோய்களையும் புற்றுநோய்களையும் வரவிடாமல் செய்கிறது. அமெரிக்காவில் பெண் நலம் குறித்து 40 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு செய்ததில், ரத்தத்தில் லைக்கோபேன் அதிகம் இருந்தவர்களுக்கு இதய நோய்கள் எதுவும் இல்லை...

லைக்கோபேன் ரத்தத்தில் குறைவாக இருந்த பெண்களுக்கு மட்டுமே இதய நோயின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தன. இந்த லைக்கோபேன் எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்பை ஒழித்து, இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களைக் காக்கும் வேலையையும் செய்கிறது.

*காளான்

மனித காதுகள் போலவே தோற்றமளிக்கும் காளானை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கேட்கும் திறன் அதிகரிக்கும். வைட்டமின் டி சத்து கிடைக்கும் ஒரு சில உணவுப் பொருட்களில் காளான் முக்கியமானது. வைட்டமின் டி எலும்புகளுக்கு இன்றியமையாதது. காதுகளில் உள்ள குருத்தெலும்பே உடலில் உள்ள மிகச் சிறிய எலும்பாகும். இதுதான் மூளைக்கு ஒலியைக் கடத்தி தெரியப்படுத்துகிறது. இதனை வலுப்படுத்த காளான் உதவுகிறது.

*பிராக்கோலி

உற்றுப் பார்த்தால் கேன்சர் செல்கள் போலவே காட்சியளிக்கும் பிராக்கோலி. ஆனால், இது கேன்சருக்கு எதிராகச் செயல்படுகிறது. அமெரிக்காவில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில், நோயாளிகளுக்கு நிறையபிராக்கோலி  சாப்பிட வைத்துப் பார்த்ததில் ப்ரோஸ்டேட் கேன்சரின் தீவிரம் 45 சதவிகிதம் குறைந்து இருந்ததாம்.

*இஞ்சி


இஞ்சியின் மருத்துவ குணம் உலகம் அறிந்ததே. சீனாவில் மலம் கழிக்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு இஞ்சியை கொடுத்துதான் குணப்படுத்துகிறார்கள். கட்டிகள் உள்பட குடலில் பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாக்கும் அருமருந்து இஞ்சி.

*திராட்சை

பார்க்க குலைகுலையாக மனிதனின் நுரையீரல் போலவே காட்சியளிக்கும் திராட்சைகள் உண்மையில் நுரையீரலுக்கு பல நன்மைகளை செய்கின்றன. தினமும் திராட்சையை எடுத்துக்கொண்டால் நுரையீரல் புற்றுநோயும் எம்பைஸீமா என்னும் சுவாச நோயும் வராமல் தடுக்கும். திராட்சை விதைகளில் இருக்கும் புரோஅந்தோசையனடின் எனும் வேதிப்பொருள், ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமாவை குறைக்கும் தன்மை கொண்டது.

* வாழைப்பழம்


வாழைப்பழத்தில் இருக்கும் டைப்போபேன் என்னும் வேதிப்பொருள் உணவு செரித்த பின் செரோடனினாக மாறுகிறது. மன நிலையை வடிவமைப்பதில் செரோடனின் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மூளையில் அதிகமாக சுரந்தால் மனம் உற்சாகத்தில் துள்ளும்.

*அவகேடோ (பட்டர் ஃப்ரூட்)

அவகேடோ பழத்தை குறுக்கே வெட்டிப் பார்த்தால் குழந்தை தாயின் வயிற்றில் தொப்புள்கொடியுடன் அமர்ந்து இருப்பது போல இருக்கும். அவகேடோ என்று அழைக்கப்படும் ‘பட்டர் ஃப்ரூட்’, கருவுறுதலுக்குத் தேவையான பலத்தை அளிக்கிறது. வைட்டமின் இ சத்து அதிக அளவில் இருப்பதால் பெண்களின் ஹார்மோன் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவுகிறது. குழந்தை சரியான எடையில் பிறக்கவும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

*சீஸ்

சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டியில் கால்சியம் நிறைய உள்ளது. எலும்புகளின் உறுதித் தன்மைக்குப் பெரிதும் பயன்படுகிறது. இதில் கிடைக்கும் பாஸ்பேட் எலும்புகளின் வளர்ச்சிக்கும் தசைகளை உறுதிப்படுத்தவும்  உதவுகிறது.

கேரட் சாப்பிடும் போது இயற்கையாக கிடைக்கும் பீட்டா கரோட்டினின் வீரியம் மாத்திரையாகச் சாப்பிடும் போது கிடைப்பதில்லை.பட்டர் ஃப்ரூட் கருவுறுதலுக்குத் தேவையான பலத்தை அளிக்கிறது. வைட்டமின் இ சத்து அதிக அளவில் இருப்பதால் பெண்களின் ஹார்மோன் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவுகிறது. குழந்தை சரியான எடையில் பிறக்கவும் கர்ப்பப்பை புற்றுநோய் வாராமல் தடுக்கவும் உதவுகிறது.