அதிகம் தூங்கினாலும் ஆபத்து!



செய்திகள் வாசிப்பது டாக்டர்

தூக்கமின்மை பல நோய்களை வரவழைப்பதைப் போலவே, அதீத தூக்கமும் பல பிரச்னைகளை கொண்டு வரும் என்கிறது ஓர் ஆய்வு. 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குவது பக்கவாதம் வரும் அபாயத்தை அதிகரிக்கிறதாம். அதிக நேரம் தூங்குகிறவர்களுக்கு மற்றவர்களை விட 46 சதவிகிதம் இந்த பாதிப்பு அதிகம் என்றும் சொல்கிறது ஆய்வு.

இதுவரை பக்கவாதம் ஏற்படாத 62 வயதுள்ள 9,692 நபர்களை பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆய்வுக்கு உட்படுத்தி, அவர்களின் பழக்கவழக்கங்களை அறிந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த இடைப்பட்ட காலத்தில் 346 பேருக்கு பக்கவாதம் வந்திருந்தது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மொத்த பேரில் அதிக நேரம் தூங்கும் பழக்கம் கொண்டிருந்தவர்கள் 986 பேர். அவர்களில் 52 பேருக்கு பக்கவாதம் வந்திருந்தது. இவர்களுக்கு மற்றவர்களை விட இந்த விகிதம் அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அளவாக தூங்குகிறவர்களை விடவும் அதிகப்படியாக தூங்குகிறவர்களுக்கு 4 மடங்கு அதிகமாக பக்கவாதம் ஏற்பட்டிருந்தது. என்ன காரணம் என ஆய்வு செய்ததில், எப்போதும் போலவே அதீத கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், பருமன், உடல் செயல்பாடு குறைவு ஆகியவையே காரணமாக இருந்தது. 6 முதல் 8 மணி நேரத் தூக்கமே ஆரோக்கியமானது என்பதையும் அந்த ஆய்வு அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறது.