கண்கள் சிவப்பாகலாமா?!



கேமரா 576 மெகாபிக்ஸல்

‘ரெண்டு நாளா கண்ணு சிவப்பா இருக்குது டாக்டர்...’ - இது கண்களைக் குறித்து மக்கள்  கூறும் அறிகுறிகளுள் முதன்மையானவற்றில் ஒன்று. இந்தக் கண் சிவப்பை மக்கள் அணுகுவதில்தான் எத்தனை வேறுபாடுகள்... சிலர் லேசாக சிவப்பு தெரிந்தவுடன் மருத்துவரிடம் ஓடி வருவார்கள். சிலர் கடையில் கேட்டு சொட்டு மருந்து வாங்கிப் போடுவார்கள். சிலர் பாட்டிவைத்தியம், சுய மருத்துவம் செய்வார்கள். எல்லா சிவப்பும் ஒன்றா, ஒரே நோயினால் வருபவையா என்றால் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கண்கள் சிவப்பாக இருக்கிறது டாக்டர் என்று நோயாளி சொல்லும் ஒரு பிரச்னைக்குப் பின்னால் மருத்துவரின் மனதில் அது தொடர்பாக பல
சந்தேகங்கள் எழும்.

* கண் சிவப்பு எங்கு இருக்கிறது? குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டுமா, கண்களின் பரப்பு முழுவதுமா?

* ஒரு கண்ணில் மட்டுமா, இரண்டு கண்களிலும் சிவப்பு இருக்கிறதா?

* வேறு என்னென்ன அறிகுறிகள் இருக்கின்றன? அதாவது வலி, உறுத்தல், காய்ச்சல், சளி உள்ளதா? இவற்றுடன் பார்வை குறைபாடு உள்ளதா?

* பாதிக்கப்பட்டவரின் வயது என்ன?

* நோயாளியின் பொதுவான உடல் தகுதி என்ன? சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் எதுவும் உள்ளதா?

* சமீபத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா?

* கண்களில் எப்போதேனும் காயம் ஏற்பட்டு இருக்கிறதா?

கண்களைக் குறித்துப் பிரத்யேகமாகப் படிக்கும், அது தொடர்பாகவே சிகிச்சை அளித்து வரும் மருத்துவருக்கே இத்தனை கேள்விகள் இருக்கின்றன. நிலைமை இப்படி இருக்க கடையில் போய் சொட்டு மருந்து வாங்கிப் போட்டுக் கொண்டால் மட்டும் போதுமா?
எல்லாக் கண் சிவப்பும் கண் வலியால் ஏற்படுவது அல்ல. தூசி விழுந்தாலும் கண் சிவக்கக் கூடும். ஒவ்வாமை ஏற்பட்டாலும் கண்களில் சிவப்பு ஏற்படும். ஒவ்வாமையில் கண்களில் அரிப்பு அதிகம் இருப்பதால் நோயாளி சீக்கிரமே மருத்துவரை நாடி வருவார்.

எந்த அறிகுறியும் இல்லாமலும் வெறுமனே சிவப்பு மட்டும் தோன்றுவது உண்டு. உயர் ரத்த அழுத்தம், ரத்தம் உறையும் நிலையில் உள்ள குறைபாடுகள் இவற்றால் ரத்தக் கசிவு ஏற்பட்டு கண்ணின் வெள்ளை விழியில் சிவப்பு ஏற்படும். (Subconjunctival hemorrhage) வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும் வண்ணம் செய்யக்கூடிய பளுதூக்குதல், தொடர் இருமல், தும்மல், வாந்தி இவற்றால் கண்களின் சிறு ரத்த நாளங்கள் உடைந்து ரத்தக் கசிவு ஏற்படலாம். இந்த நிலையில் வலியோ உறுத்தலோ இன்றி குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் ரத்த சிவப்பாக (bright red) காணப்படும்.

பலருக்கு இந்த நிலையைப் பரிசோதிக்கும்போது உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் சார்ந்த பிரச்னைகளைப் புதிதாகக் கண்டறிய நேரும். விரல், புத்தகம், பென்சில் போன்றவற்றால் ஏற்படும் சிறு காயங்களிலும் இது ஏற்படலாம். இதுவும் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் தானாகவே சரியாகி விடக்கூடிய ஒன்று. சில சமயங்களில் வைட்டமின்-சி அளிக்க வேண்டியதிருக்கும்.

வலியுடன் கூடிய வெண்கோளப் பகுதி(Sclera) கண்சிவப்புக்கு சில காரணங்கள் உண்டு. இது எளிய மருத்துவ முறைகளால் சரி செய்யக்கூடியது. உடலின் வேறு எந்தப் பகுதியிலாவது ஏற்படும் மூட்டுவலி, தசைநார் பிரச்சனைகள் போன்றவற்றாலும் இந்தத் தொந்தரவு நேரக்கூடும். மேற்கூறிய காரணிகள் எளிதில் குணப்படுத்தக் கூடியவை. இவற்றால் பொதுவாக பார்வைக்கு எந்தவித பாதிப்பும் நேர வாய்ப்பு இல்லை. மாறாக சுயமாக சொட்டு மருந்து போட்டு மருத்துவத்தைத் தள்ளிப்போடும் நோய்கள் சில உண்டு. அவை பார்வையை பெருமளவில் பாதிக்கக்கூடியவை.

முகவாதம் போன்ற காரணங்களால் கண்ணை சரியாக மூட முடியாத நிலை ஏற்படலாம். இதனால் கண்களில் ஈரப்பதம் குறைந்து கண் சிவப்பு தோன்றுகிறது. முகவாதம் குணமாகும் வரை சிறு பிளாஸ்டர் மூலம் உறங்கும் நேரமும், மதியம் ஒரு மணி நேரமும் இரு கண்இமைகளையும் ஒட்டி வைத்தால் இதனைத் தவிர்க்கலாம்.

இது தவிர சிறு கட்டிகள், குடற் புழுக்களின் முட்டைகள், கருவிழியில் ஏற்படும் புண்கள் இவற்றாலும் கண்சிவப்பு ஏற்படலாம். வேகமாகப் பரவும் சில புற்றுநோய்களின் அறிகுறிகள் கண்களில் தோன்றலாம். இதிலும் கண்சிவப்பு ஏற்படக்கூடும்.

கண் அழுத்த நோய் மற்றும் கண்ணின் உள் உறுப்புகளால் ஏற்படும் பிரச்னைகளில் கூட வெள்ளை விழியில் சிவப்பு ஏற்படுகிறது. இத்தகைய சிவப்பு கருவிழியைச் சுற்றிலும் காணப்படும். வெண்படலத்தின் மற்ற இடங்களில் சிவப்பு இருக்கும். இந்த இரு பிரச்னைகளும் ஒன்றாகக் கவனிக்க வேண்டியவை. இவற்றால் குறிப்பிடத்தகுந்த பார்வை இழப்பும் ஏற்படும்.

அன்று மிகவும் பரிச்சயமான நபர் ஒருவர் வந்திருந்தார். ‘என் பொண்ணு வெளியூரில் ஹாஸ்டலில் இருக்கா. கண்ணு சிவப்பா இருக்குதாம், தண்ணி வருதாம். ஏதாவது ட்ராப்ஸ் கொடுங்க’ என்றார். ‘நேரடியாகப் பார்க்க வேண்டும். பார்க்காமல் மருந்து போடக் கூடாது’ என்று கூறினேன். ‘ப்ளஸ் டூ படிக்கிறா.... ஸ்கூல்ல லீவ் கொடுத்து அனுப்ப மாட்டாங்க’ என்று வாதாடினார்.

நோயாளியை நேரடியாகப் பார்க்காமல் மருந்து கொடுப்பதில்லை என்பதில் நான் உறுதியாக இருந்ததால் சென்றுவிட்டார். 4 நாட்கள் கழித்து ஏதோ சொட்டு மருந்தைப் போட்டு பின் நிலைமை மோசமானதால், அதன் பிறகு ஸ்கூலில் லீவ் எடுத்து சிறுமியை அழைத்து வந்திருந்தார். கருவிழியில் ஒரு பூச்சியின் சிறகு காணப்பட்டது. தாமதமானதால் கருவிழியும் புண் பட்டிருந்தது. பூச்சியை அகற்றி, புண்ணுக்கு சிகிச்சை அளித்து சிறுமி இயல்பு நிலைக்குத் திரும்பி பள்ளி செல்ல ஒரு மாதம் ஆகிவிட்டது.

சில மணி நேர மருத்துவ பரிசோதனையைத் தவிர்த்ததற்கு அவர்கள் அளித்த விலை ஒரு மாத இழப்பு. A stitch in time saves nine - என்று குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பழமொழிகள் எல்லாம் ஏட்டிற்கு மட்டும்தானா, வாழ்வுக்கு இல்லையா என்பதை சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்!

பார்த்தாலே தொற்றுமா?!

மழை அல்லது பனி போன்ற காய்ச்சல் பரவும் பருவகாலங்களில் அடினோ வைரஸ் மூலமாக பரவக்கூடியது கண் வலி. மெட்ராஸ் ஐ என்றும் இதை அழைப்பார்கள். வெள்ளை விழியில் அதிகமான நீர் சுரப்பு, கண்ணில் கசடுகள் சேர்தல், வலி இவற்றுடன் ஆரம்பித்திருக்கும்.
‘அவனுக்குக் கண் வலி இருக்கு. அவனைப் பார்த்தால் உனக்கும் வந்துவிடும்’, ‘கண் வலி இருந்தால் கருப்பு கண்ணாடி போட்டுக்கொள்’ என்று சிலர்
கூறுவதைக் கேட்டிருப்போம்.

ஒருவரின் கண்களைப் பார்க்கும் போது கண் வலி வந்துவிடுமா என்று கேட்டால், மருத்துவரீதியாக அப்படி இல்லை என்பதே பதில். அப்படி தொற்றுவதாக இருந்தாலும் பெரும் காற்று அடித்து அவரது கண்களில் இருந்து பல வைரஸ்கள் பறந்து வந்து வேண்டுமானால் அருகில் இருப்பவர்களை அடைந்தால் வரலாம். ஆனால், இந்தக் கிருமிகள் தொடுவதன் மூலம் பரவும் ஆற்றல் கொண்டவை.

கண்வலி வந்த நபர் ஒருவரும் நீங்களும் ஒரே மேஜை அல்லது ஒரே பேருந்தின் ஒரே இருக்கையை பயன்படுத்துகிறீர்கள். அப்போது அவர் கண்களில் வழியும் நீரை கைகளால் துடைத்துவிட்டு சீட்டைக் கைகளால் பிடிக்கிறார். அதே இடத்தில் உங்கள் கைபட்டு பின் எதேச்சையாக உங்கள் கண்களையும் நீங்கள் தொட்டு விடுகிறீர்கள். இந்தச் சூழலில் உங்களுக்குக் கண் வலி வர வாய்ப்பு அதிகம். இதேபோல் வீட்டில் ஒரு நபருக்குக் கண் வலி இருந்தால் அவர் பயன்படுத்திய துண்டு, போர்வை, கைகுட்டை இவற்றின் மூலமாகவும் அருகில் படுத்திருக்கும்போது பிறருக்கும் வந்துவிடும்.

கண் வலி வந்துவிட்டால் கண்டிப்பாக மூன்று முதல் ஏழு நாட்களுக்கு இருக்கும். அறிகுறிகளைக் குறைக்க மருத்துவ உதவி தேவை. சில சமயங்களில் வீரியமிக்க கிருமியாகவோ எதிர்ப்பாற்றல் குறைவாகவோ இருக்கும் சமயங்களில் கருவிழியையும் இந்த வைரஸ் தொற்று தாக்கியிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் அதிக கவனம் தேவை. இத்தகைய கண் வலி குறிப்பிட்ட கால அளவில் தானாகவே சரியாகிவிடும்.

(தரிசனம் தொடரும் !)