உணவால் வரும் உணவால் வரும்
புற்றுநோய் இல்லாத புதிய உலகம்
சென்னையில் இருக்கும் பிரபல புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகனை என்னிடம் அழைத்து வந்திருந்தார் அந்தப் பெரியவர். சென்னை மருத்துவர்கள் சொல்லியிருந்த மருந்துகளைச் செலுத்திக் கொள்வதற்காக அவர்கள் வந்திருந்தனர். பெரியவரின் மகனுக்கு நாற்பது வயது இருக்கும். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கைநிறைய சம்பளம். சென்னையில் சொந்தமாக அபார்ட்மென்ட் வாங்கி வாழ்க்கையில் ‘செட்டில் ஆகும் கனவில் இருக்கும்போது, நான்கு நாள் வயிற்றுவலி என்றுதான் மருத்துவரிடம் போனார். ஆனால், அவருடைய பிரச்னையைப் புரிந்துகொள்ள நான்கு மருத்துவர்களைச் சந்திக்க வேண்டி வந்தது. அடுத்த நான்கு வாரங்களுக்குப் பிறகுதான் தெரிந்தது அவருக்கு வந்திருப்பது ‘குடல் புற்றுநோய்’ என்பது... மிகுந்த வருத்தத்தில் இருந்த பெரியவர், ‘எத்தனை நாட்களுக்குத்தான் இந்த மருந்துகளை ஏற்றுவது, டாக்டர்? ஒவ்வொரு தடவையும் அவன் படும் வேதனையைப் பார்க்கச் சகிக்கலே’ என்றார்.
‘என் மகனுக்குக் குடிப்பழக்கம் கிடையாது; சிகரெட் பக்கம் தலைவைத்துக் கூட படுத்ததில்லை; எங்கள் பரம்பரையில் இந்த நோய் யாருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கும் இது வருதே, டாக்டர்! அது ஏன்?’ என்று கவலையோடு கேட்டார். இதற்கான பதில் அவருக்கு மட்டுமே அல்ல; நம் சமூகத்துக்குமானது.
கடந்த கால் நூற்றாண்டுகால நவீன வாழ்வியலில், புற்றுநோய்க்குப் பரம்பரை காரணங்களைக் கடந்து, உண்ணும் ஒவ்வொரு கவளத் துரித உணவிலும் / செயற்கை உரமும் பூச்சி மருந்துகளும் உண்டாக்கிய உணவுப் பொருட்களிலும், உறிஞ்சும் ஒவ்வொரு சொட்டுச் செயற்கை பானத்திலும், சுவாசிக்கும் ஒவ்வொரு துளி மாசுக்காற்றிலும், உபயோகிக்கும் ஒவ்வொரு செயற்கை அழகூட்டியிலும், மணமூட்டியிலும், நிறமூட்டியிலும், பணி நிமித்தம் தோலில் ஒட்டிக்கொள்ளும் நிக்கல், நிலக்கரி, தார், ஆர்செனிக் போன்ற உலோகக் கலவையிலும், உறக்கம் துறந்த, அழுத்தம் மிகுந்த ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் புற்றுக்காரணிகள் பொதிந்திருப்பதை அந்தப் பெரியவருக்கு எடுத்துச் சொன்னேன்.
‘உங்கள் தலைமுறையில் வயோதிக விஷயமாகப் பார்க்கப்பட்ட புற்றுநோய் இந்தத் தலைமுறையில் அவர்கள் தம் நாற்பது வயதில் புறப்பட்டு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைச் சீரழிப்பதோடு மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் ஒரு குடும்பத்தையே சூறையாடி வருகிறது. ஆனால், இந்தப் பேரபாயம் குறித்து இன்னும் நாம் விழித்துக்கொள்ளாமல் இருப்பதுதான் துயரம்’ என்றதும் மௌனமானார்.
புற்றுநோயாக்கம் என்றால் என்ன?
புற்றுநோயைப் பொறுத்தவரை அதைத் தடுக்க முடியாத ஒரே காரணம், மரபு வழி புற்றுநோய் மட்டுமே. அப்பா, அம்மா அல்லது மூத்த தலைமுறையில் ஒளிந்திருக்கும் புற்றுநோய் மரபணுக்கள் அவர்கள் சந்ததிக்கு மரபு வழியில் வந்து, வயோதிகத்திலோ, வாழ்வியல் அழுத்தத்தில் நடுவயதிலோ, குழந்தைப் பருவத்திலோ வெளிப்பட்டு புற்றுநோயை உண்டாக்குவது மரபு வழி புற்றுநோய்.
இது தவிர, நாம் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் / மது மற்றும் புகைக்கும் சிகரெட் வழி வரும் ரசாயனங்கள், வைரஸ் நுண்கிருமிகள், கதிர்வீச்சு, அணுக்கதிர் வீச்சு உள்ளிட்ட புறக்காரணிகளும் உடல் ஹார்மோன்களும் உடலுக்குள் ஆதிக்கம் செலுத்தி, இயல்பான டி.என்.ஏ. சங்கிலிகளைத் தாக்குகின்றன.
அப்போது அங்குள்ள மரபணுக்களில் பல மாற்றங்கள் உண்டாகின்றன. இப்படி மாற்றம் கண்ட மரபணுக்கள் புற்றுநோயை உண்டாக்கும் மரபணுக்களை(Oncogenes) தூண்டுகின்றன அல்லது புற்றுநோயைத் தடுக்கும் மரபணுக்களைச் சிதைக்கின்றன. இதனால் செல்கள் இயல்புக்கு மாறாக வேகமாகப் பிரிந்து, வழக்கமான டி.என்.ஏ. கட்டுப்பாட்டை இழந்து, அளவில்லாமல் வளர்கின்றன. அதேசமயம் திசுக்களில் பழைய செல்களை விழுங்கி அப்புறப்படுத்தும் செயல்கள் முடங்கிப் போகின்றன.
இதனால் செல்கள் தங்கள் வளர்சிதை மாற்றத்தில் சமநிலையை இழந்துவிடுகின்றன. அப்போது மூத்த செல்கள் இறப்பது குறைந்து, பல்கிப் பெருகும் செல்கள் தேவையில்லாமல் ஓரிடத்தில் வளர்ந்து கட்டியாகத் திரள்கின்றன. அந்தக் கட்டி அருகில் உள்ள திசுவைப் பாதிக்கிறது; படிப்படியாகத் தொலைவில் உள்ள உறுப்புகளுக்கும் அது பரவிவிடுகிறது. இதுதான் புற்றுநோயாக்கத்தின்(Oncogenesis) அடிப்படை அறிவியல்.
மாறிப்போன உணவுப்பழக்கம்! தற்போது பெருகி வரும் புற்றுநோய்க்கு அடிப்படைக் காரணம் நம் உணவுமுறை மாறிப்போனதே! வீட்டில் பழைய சோறும் தயிரும் ஊறுகாயும் ருசித்துச் சாப்பிட்ட தலைமுறையில் புற்றுநோய் பெரிதாகத் தெரியவில்லை. பன்னாட்டு உணவகத்தில் சீன உணவு, இத்தாலிய உணவு, மேற்கத்திய உணவு என வாயால் உச்சரிக்க முடியாத இன்னும் பலவகை அந்நிய நாட்டு உணவுகளை எப்போது சாப்பிடத் தொடங்கினோமோ அப்போது ஆரம்பித்தது புற்றுநோய் யுகம்.
சாதாரணமாக இட்லி, தோசை, இடியாப்பம், வெண்பொங்கல் சாப்பிட்ட தட்டுகளில் இப்போது ரொட்டி, ஜாம், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், சில்லி சிக்கன், கிரில் சிக்கன், கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட செந்நிற சிக்கன் வகைகள், சூப் வகைகள், பிரியாணி வகைகள், ஸ்பிரிங் ரோல்கள் போன்ற அந்நிய உணவுகள் ஆக்கிரமித்துள்ளன.
இவையெல்லாம் முன்பு ஓட்டல் பண்டங்களாக இருந்தன. இப்போதோ அவற்றை வீட்டிலேயே அம்மாக்கள் தயார் செய்யவும் ஆரம்பித்துவிட்டனர். அதற்காக கடுகு, சீரகம், சோம்பு, மிளகு, மஞ்சள், பெருங்காயம், இலவங்கம், வெந்தயம் குடிகொண்டிருந்த அஞ்சறைப்பெட்டியில் ‘மோனோசோடியம் குளுட்டமேட்’, சோடா உப்பு, பல வண்ணப் பொடிகள் புகுந்துவிட்டதைப் பார்க்கிறோம்.
சீன உணவின் சுவைதான் இன்றைக்கு சிறுவர்களுக்கும் இளையவர்களுக்கும் அதிகம் பிடிக்கிறது. இல்லை, இல்லை, அவர்களை அடிமைப்படுத்தி இருக்கிறது. என்ன காரணம்? சீன உணவின் அபார ருசிக்கு அதில் கலக்கப்படும் ‘எம்.எஸ்.ஜி’ என்னும் ‘மோனோசோடியம் குளுட்டமேட்’ உப்புதான் பின்புலம். ஆனால், அது ஒரு புற்றுநோய்க் காரணி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
இந்தியாவில் முதலில் சீன உணவகம் கொல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்டது. அங்கேதான் ‘எம்.எஸ்.ஜி’யால் இரைப்பையில் புற்றுநோய் வருவதும் உறுதி செய்யப்பட்டது. சீன உணவுகளைச் சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களிடம் கொல்கத்தா சந்திரபோஸ் புற்றுநோய் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது உறுதியானது.
இன்றைய தலைமுறைக்கு அதிகம் பிடித்த உணவு நூடுல்ஸ். இது பெருநகரங்களில் மட்டுமல்லாமல் பட்டிதொட்டிகளிலும் இப்போது அறிமுகமாகிவிட்டது. நூடுல்ஸில் உலர வைத்த கோழிக்கறியும் காய்கறிகளும் உள்ளன. அவற்றைப் பதப்படுத்துவதற்காக செயற்கை ரசாயனப் பொடிகள் சேர்க்கப்படுகின்றன. நூடுல்ஸ் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக மெழுகு தடவப்படுகிறது. அதன் சுவை கூட்ட Propylene glycol எனும் செயற்கைச் சுவையூட்டி பயன்படுத்தப்படுகிறது. இவை எல்லாமே புற்றுநோயைக் கொண்டு வரும் தூதுவர்கள் என்பதை எத்தனை பேர் அறிவார்? அடுத்து இன்றைய இளைய சமூகத்தை மயக்கி வைத்திருக்கும் துரித உணவுகள் அத்தனையையும் உடைத்துப் பார்த்தால் உள்ளே பதுங்கிக் கொண்டிருந்த பூதமாக வெளி வருவது மைதா.
பரோட்டா, நூடுல்ஸ், நாண், ருமாலி ரொட்டி, பன், சமோசா, பீட்சா, குல்சா, பர்கர்... எல்லாமே மைதா. கோதுமையில் தவிடு நீக்கப்பட்டு சில வேதிப்பொருட்களைச் சேர்த்து வெண்மையாக்கப்படுவதே மைதா. மைதாவுக்கு வெண்மை நிறம் தரும் குளோரின் ஆக்ஸைடு, பென்சோயில் பெராக்சைடு புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தைக் கொண்டவை. சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் மைதாவில் சேர்க்க தடை விதிக்கப்பட்ட வேதிப்பொருட்கள் இவை. இந்தியாவிலோ இது தொடர்பான விழிப்புணர்வே இன்னும் உருவாகவில்லை.
எண்ணெய்களும் சரியில்லை!
உடலுக்கு எந்தக் கெடுதலும் செய்யாத ஆவியில் அவிக்கப்பட்ட அருமையான உணவுகள் நம்மிடம் எத்தனையோ உண்டு. ஆனால், எண்ணெயில் பொரிக்கப்பட்ட துரித உணவுகளைத்தான் இன்றைய சமுதாயம் ரொம்பவும் விரும்பிச் சாப்பிடுகிறது. துரித உணவுத் தயாரிப்பில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு முக்கிய இடம் உண்டு. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் நல்லது என்றே பலரும் நினைக்கின்றனர்.
அதில் உண்மையில்லை! எண்ணெய் சுத்திகரிப்பு என்பதே பல வேதிப்பொருட்களைச் சேர்த்து, வெப்பநிலையை மாற்றி, பலகட்டங்களைக் கடப்பதுதான். இன்னும் சொல்லப் போனால் அதில் மோசமான கலப்படமும் உண்டு. அந்த வேதிப்பொருட்கள் ஒவ்வொன்றும் புற்றுக்காரணி என்பதை நாம் தெரிந்துவைத்திருந்தாலும் சாப்பிடும்போது அதை மறந்துவிடுகிறோம் என்பதுதான் உண்மை.
‘சரி, வீட்டில் நான் செக்கு எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறேன். எனக்குப் புற்றுநோய் ஆபத்து வராதல்லவா?’ என்று அவசரப்பட்டு கேட்கிறவர்களுக்கு மட்டும் இந்த பதில்: செக்கு எண்ணெய் நல்லதுதான். ஆனால், ஒருமுறை பயன்படுத்திய எந்த எண்ணெயையும் பலமுறை சூடாக்கிப் பயன்படுத்தினால் Free radicals என்னும் நச்சுக்கள் அதிகரிக்கும். அவை புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
எமபானம் மென்பானம்!
துரித உணவுக் கலாச்சாரத்துக்கு அடிமையானவர்களால் தவிர்க்கவே முடியாதது குளிர்பானம்/ மென்பானம். முன்பெல்லாம் தாகம் எடுக்கும்போது நீர்மோர், பதநீர், இளநீர், பானகம், சோடா, கலர் குடிப்பதுதான் வழக்கம். அப்போதெல்லாம் புற்றுநோய் என்ற பேச்சு எழவில்லை.
இப்போதோ தாகம் எடுத்தால் யாரும் தண்ணீர் குடித்துவிடக் கூடாது; மென்பானங்களைத்தான் குடிக்க வேண்டும் என்று இன்றைய உணவுச் சந்தை நம்மை மாற்றிவிட்டது. இந்த மென்பானங்களில் இனிப்புச் சுவைக்கு Aspartame என்னும் செயற்கை இனிப்பூட்டியும் அந்த இனிப்பை நிலைப்படுத்துவதற்காக சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவையும் சேர்க்கப்படுவதுண்டு. கோலா பானங்களுக்குக் கருப்பு வண்ணம் தருவதற்கு ‘கேராமல்’ கலக்கப்படுகிறது. டின்களில் அடைக்கப்படும் பானங்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு பென்சாயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. சுவைக்காக ‘காஃபீன்’ கலக்கப்படுகிறது. மென்பானங்கள் அடைக்கப்படும் ‘பெட்’ பாட்டில்களில் ‘பிஸ்பினால் ஏ’ என்னும் ரசாயனப்பூச்சு உள்ளது. கேராமல் உள்ளிட்ட மென்பான ரசாயனங்கள் பலவும் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. ஆகவே, மென்பானங்கள் எல்லாமே நமக்கு எமபானங்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
வீட்டு சமையலறையில் நேரம் செலவழிப்பதற்குச் சோம்பேறித்தனப்பட்டு ‘ரெடி டு ஈட்’ உணவுகளை நாடிச் செல்வதை நவீனமாகக் கருதுகிறோம். அவற்றில் குவிந்திருக்கும் வேதித் துணுக்குகளை உடைத்துப் பார்த்தால் எல்லாமே நமக்கு எதிராளிகள்; நம் மரபணுக்களுக்குக் கொஞ்சமும் பழக்கம் இல்லாதவர்கள்; புதியவர்கள்.
ஆதலால், அவை வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் என நினைத்து அந்த அந்நியர்களுக்கு நம் மரபணுக்கள் இடம் கொடுக்க, போகப்போக அவை போடும் ‘ஆட்டத்தில்’ நிலைகுழைந்து தன்னிலை மறக்கின்றன. அப்போது இயல்பான செல்கள் புற்றுசெல்களாகப் புறப்படுகின்றன.
ஆரோக்கியத்தில் உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் இந்த உடனடி உணவுகளையும் துரித உணவுகளையும் விலக்கி, சரியான, சத்தான, நம் பாரம்பரிய உணவுகளுக்கு மாறுங்கள். தெரிந்தோ தெரியாமலோ நாம் சென்றுகொண்டிருக்கும் புற்றுநோய்ப் பாதையை விட்டு விலகிவிடுவோம். பிறகு புற்றுநோய் இல்லாத புதிய உலகம் படைக்கப் புறப்படுவோம். இந்த நல்ல மாற்றம் முதலில் நம்மிடம் தொடங்கட்டும்!
(படைப்போம்)
|