ஆகாயத்தாமரையில் சானிட்டரி நாப்கின்
சபாஷ்
மாதவிலக்கு நாட்களை சுகாதாரமாகவும், கவனமாகவும் கடக்க வேண்டிய அவசியம் அந்த பருவங்களில் இருக்கும் எல்லா பெண்களுக்குமே இருக்கிறது. பயன்படுத்தும் நாப்கின்களானது சருமம் தொடர்பான பிரச்னையையோ அல்லது வேறு ஏதேனும் தொற்றுகளையோ உண்டாக்கிவிடுவதாகிவிடக் கூடாது. முக்கியமாக, பயன்படுத்தித் தூக்கி எறியும் நாப்கினானது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு பரவி வருவதன் காரணமாக, இயற்கை முறையில் நாப்கின் தயாரிக்கும் முயற்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு கட்டமாக ஆகாயத்தாமரையில் நாப்கின் தயாரித்துள்ளார்கள் கேரள மாணவிகள்.
கேரள மாநிலத்தில் உள்ள அஹமத்குரிக்கல் நினைவு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவிகளானஅஸ்வதி, ஹென்னா சுமி மற்றும் ஸ்ரீ ஜேஷ் வாரியர் என்ற மாணவர் ஆகிய மூவரும் இந்த நாப்கினை வடிவமைத்திருக்கிறார்கள். பள்ளியின் உயிரியல்ஆசிரியர் சரத் வழிகாட்டுதல் பேரில் இதனைத் தயாரித்துள்ளனர். ஆகாயத்தாமரை செடிகளை துண்டுகளாக்கி,உலர வைத்தால் கிருமிகள் இல்லாமல் சுத்தமாகிவிடும். அதன்பிறகு, செடியின் தண்டுகளையும், பருத்தி பஞ்சினையும் பயன்படுத்தி திரவத்தை உறிஞ்சும் Pad தயாரிக்கப்படுகிறது. அதன்பிறகு, மேலும் கீழும் பஞ்சு வைக்கப்பட்டு தேன் மெழுகு கொண்டு சீழ் வைக்கப்படுகிறது.
இந்தப்பேடுகள் புற ஊதாக்கதிர்கள் கொண்டு கிருமிகள் ஏதும் இல்லாமல் சுத்தப்படுத்தப்படுகிறது என்று நாப்கின் தயாரிக்கும் முறையை விளக்குகிறார்கள் மாணவர்கள்.‘ஆகாயத் தாமரை நாப்கினானது, சந்தையில் விற்கப்படும் மற்ற நாப்கின்களைக் காட்டிலும் 12 மடங்கு அதிகமாக ஈரத்தை உறிஞ்சும் திறனுடையது. ஏரி, குளம், குட்டைகளில் வளரும் ஆகாயத் தாமரை கலையாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இதனை சேகரிப்பதற்காக பெரிய செலவுகள் எதுவும் இருக்காது. இதனால் ஒரு நாப்கின் விலை சராசரியாக மூன்று ரூபாய் என்ற அளவிலேயே விற்க முடியும். இயற்கையான முறையில் தயாராகும் நாப்கின் என்பதால், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும்போது விரைவிலேயே மக்கிவிடும். இதற்கான காப்புரிமை பெறப்பட்டு, விரைவில் விற்பனைக்கு வரும்’ என்கிறார் ஆசிரியர் சரத்.
- அ.வின்சென்ட்
|