Medical Trends இயற்கையான அழகே பாதுகாப்பானது!



ரிலாக்ஸ்

சாய் பல்லவி ஒரு மருத்துவ மாணவி என்பதும், எதிர்காலத்தில் டாக்டராக பணிபுரியச் சென்றுவிடுவேன் என்று அவர் பேட்டிகளில் கூறியிருந்ததையும் பலரும் கவனித்திருக்கலாம். இப்போது இன்னும் ஒரு கூடுதல் தகவல்.  சமீபத்தில் சிவப்பழகு க்ரீம் விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காக சாய் பல்லவியை அணுகியிருக்கிறது ஒரு முன்னணி நிறுவனம். 2 கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறியிருக்கிறார்கள். ஆனால், சாய் பல்லவி அதனை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.

‘இயற்கையான அழகையே நம்புகிறேன். செயற்கையான மேக் அப்-களிலோ, க்ரீம்களிலோ எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் என் தனிப்பட்ட கொள்கைக்கு எதிரான ஒன்றை செய்ய மாட்டேன்’ என்று அதற்கு விளக்கமும் அளித்திருக்கிறார். சாய் பல்லவி சினிமாவிலேயே காஸ்மெட்டிக்ஸ் தொடர்பான மேக் அப் போட்டுக் கொள்வதை விரும்பாதவர், அதனால்தான் தன்னுடைய பிம்பிள்ஸைக் கூட அவர் மறைக்க விரும்பியதில்லை. இப்போது அதுவே அவரது அடையாளமாகவும் ஆகிவிட்டது. அவர் ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரத்தை மறுத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று சினிமா வட்டாரத்திலும் கூறுகிறார்கள்.

‘சினிமாவில் இயல்பான, பக்கத்துவீட்டு பெண் போல வருவதையே நான் விரும்புகிறேன். அதனால்தான் காஸ்மெட்டிக்ஸ் மேக் அப் போட்டுக் கொள்ளும்படி இயக்குநர்களும் என்னை கட்டாயப்படுத்துவதில்லை. அவர்கள் எனக்கு மேலும் தன்னம்பிக்கை அளித்து உற்சாகப்படுத்துகிறார்கள்’ என்றும் சாய் பல்லவி இதுகுறித்து முன்னரே கூறியிருக்கிறார்.

முகத்தில் சின்ன பரு வந்தால் கூட பதறிப் போய் கவலைப்படுகிறவர்களும், காஸ்மெட்டிக்ஸ் மேக் அப்பை நம்புகிறவர்களும் சாய் பல்லவியிடம் தன்னம்பிக்கையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மலேரியா தடுப்பு மருந்து அறிமுகம்!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலவியில், மலேரியாவைக் குணப்படுத்துவதற்கான தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கானா, கென்யா ஆகிய நாடுகளில் இந்த சொட்டு மருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர்-ஜெனரல் டாக்டர் டெட்ராஸ் அத்ஹானாம் கிபெரிஇசஸ் கூறும்போது, ‘இந்த வாக்சின் மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் புதிய தீர்வாக பணியாற்றும். மேலும், லட்சக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதிலும் முக்கிய காரணியாக திகழும்’ என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

நிறம் மாறும் லென்ஸ்

கண்களில் உள்ள குறைகளை கண்டறிவதற்காக நோயாளியின் கண்ணுக்குள் முதலில் Eye drops விடுவார்கள். பல நேரங்களில் மருந்து தங்காமல் அப்படியே கண்ணீர் வழியாக வெளிவந்துவிடும். இதற்கு காரணம் வெளியிலிருந்து வரும் எந்த பொருளையும் கண்கள் உள்ளே அனுமதிப்பதில்லை. இதற்காக, நிறம் மாறும் கான்டாக்ட் லென்ஸ்களை புதிதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த லென்ஸ் வழியாக மருந்தை உள்ளே செலுத்தும்போது, மருந்து வெளியேறாமல் கட்டுப்படுத்தப்படும். மருந்து கண்ணுக்குள்ளே சென்றவுடன் இந்த லென்சின் நிறம் மாறிவிடுகிறது என்று குறிப்பிடுகிறார்கள்.

அவஸ்தை தரும் அறிவிப்புகள்

ஃபேஸ்புக்கிலோ, வாட்ஸ் அப்பிலோ முழு தகவலையும் படிக்க நேரம் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் யார்? என்ன? தகவல் அனுப்பியிருக்கிறார்கள் என்பதையாவது அறிந்து கொள்ள மொபைலில் நோட்டிஃபிகேஷன்களை அடிக்கடி செக் செய்யும் பழக்கம் நம் எல்லோருக்குமே உண்டு.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஒரு ஆராய்ச்சியின்படி, ‘செய்கிற வேலைக்கு நடுவே கவனத்தை திசை திருப்பி ஒவ்வொருமுறை நோட்டிஃபிகேஷன்களை செக் செய்யும்போதும், மீண்டும் வேலையில் கவனத்தைத் திரும்ப குறைந்தபட்சம் 24 நிமிடங்களாவது செலவாகிறது. அதனால் முக்கிய வேலையில் ஈடுபடும்போது நோட்டிஃபிகேஷன் வராமல் ஆஃப் செய்துவிடுங்கள்’ என்கிறது இந்த ஆய்வு.

தயிர் சாதத்தில் விஷயம் இருக்கு!

‘இந்திய உணவான தயிர் சாதத்தில் மட்டுமே, மூளையில் சுரக்கக்கூடிய Tryptophan என்ற ரசாயனத்தை வெளியிட முடியும். இது மூளையை அமைதிப்படுத்தி, சாந்தமான சிந்தனையை உண்டாக்குகிறது. டிரிப்டோபன் நரம்பணுக்களை மிதமான ஓய்வுடன் ரீசார்ஜ் செய்கிறது. இந்தியாவில் மட்டுமே தயிர் உபயோகப்படுத்தப்படுகிறது. தயிர்சாதம் வெப்பமண்டல காலநிலைக்குத் தகுந்தவாறு இந்தியர்களின் மூளையை செயல்படுத்துகிறது’ என்கிறது ஓர் ஆய்வு.

தொகுப்பு : குங்குமம் டாக்டர் டீம்