குதிகால் வலியின் முக்கிய காரணங்கள்



எலும்பே நலம்தானா?!

பாதங்களின் அடி மற்றும் பின் பகுதியில் உணரப்படுகிற ஒருவித வலியே குதிகால் வலி எனப்படுகிறது. இது பயப்படுகிற அளவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை என்றாலும் கடுமையான குதிகால் வலி சிலருக்கு அன்றாட வேலைகளையும், நடவடிக்கைகளையும் பாதிக்கும்.

நம் மொத்த உடல் எடையையும் தாங்குபவை பாதங்கள். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்கு சிலருக்குக் குதிகால் வலி பாடாகப்படுத்துவதுண்டு. இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் கால் வைத்ததும் தீயை மிதித்ததுபோல கடுமையான வலியை உணர்வார்கள். எரிச்சலும் மதமதப்பும் சேர்ந்து கொள்ளும். ஓரடிகூட எட்டுவைத்து நடக்க முடியாத நிலை ஏற்படும்.

இந்த வலி சில மணி நேரத்துக்கு மட்டுமே நீடிக்கும். வலியைத் தாங்கிக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டால், கொஞ்ச நேரத்தில் வலி மறைந்துபோகும். பிறகு, இவர்கள் பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் தூங்கச் செல்லும்போது மீண்டும் குதிகாலில் வலி எடுக்க ஆரம்பித்துவிடும். இந்தப் பிரச்னையை ‘பிளான்டார் ஃபேசியைட்டிஸ்’ (Plantar Fasciitis) என்கிறது மருத்துவம்.

குதிகால் வலியின் முக்கிய காரணங்கள்

குதிகால் எலும்பிலிருந்து ‘பிளான்டார் அப்போநீரோசிஸ்’(plantar aponeurosis) கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்துகளும் இணையும் இடத்தில் ஒருவிதமான அழற்சி ஏற்பட்டு, வீக்கம் ஏற்படுகிறது. இதனால் குதிகால் வலி உண்டாகிறது.
குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்க ‘பர்சா’ (Bursa) எனும் திரவப்பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும். ஒரு சிலருக்கு குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும்.

இதற்கு ‘கால்கேனியல்ஸ்பர்’(Calcaneal spur) என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படலாம்.சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானாலும் குதிகால் வலி வரும். முடக்குவாதம், ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர், காசநோய், கோணலாக வளர்ந்த பாதம், தட்டைப் பாதம், எலும்பு வலுவிழப்பு போன்றவையும் குதிகால் வலியை ஏற்படுத்தலாம்.

யாருக்கு ரிஸ்க் அதிகம்?

குதிகால் வலியானது பெரும்பாலும் எந்த வெளிப்படையான காரணங்களுமின்றி ஏற்படுகிறது என்றாலும் கீழ்க்கண்ட காரணங்கள் அதன் தீவிரத்தை அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றன.

* வயது40 முதல் 60 வயதிலிருப்பவர்களுக்கு.
* சிலவகையான உடற்பயிற்சிகள்

குதிகால்கள் மற்றும் அவற்றை இணைக்கும் திசுக்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் பயிற்சிகளைச் செய்வோருக்கு. உதாரணத்துக்கு நீண்ட தூரம் ஓடுவோருக்கு, பாலே நடனமாடுகிறவர்களுக்கு, அதிகம் குதித்துப் பயிற்சி மேற்கொள்வோருக்கு....

கால் அமைப்பு

தட்டைப்பாதம், வளைந்த பாதம் மற்றும் அசாதாரணமான நடை கொண்டவர்களுக்கு குதிகால் வலி வரலாம்.  இவர்களுக்கெல்லாம் உடலின் எடையையத் தாங்கும் சக்தியில் சமநிலையின்மை ஏற்பட்டு, அந்த அழுத்தம் குதிகால்களில் விழுந்து, வலி ஏற்படலாம்.

உடல்பருமன்

அளவுக்கதிக உடல்பருமனும் குதிகால்களில் அழுத்தம் சேர்த்து வலிக்குக் காரணமாகும்.வாழ்க்கைமுறையும் பார்க்கும் வேலையும்நீண்ட நேரம் நின்றுகொண்டும், நடந்துகொண்டும் வேலை பார்க்கிறவர்களுக்கு இந்த வலி தவிர்க்க முடியாதது. உதாரணத்துக்கு ஃபேக்டரிகளில் நின்றுகொண்டு வேலை செய்கிறவர்கள், ஆசிரியர்கள், கடைகளில் விற்பனைப் பிரிவில் நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை பார்ப்பவர்கள், கடினமான தரைப்பரப்பில் நிற்பவர்களுக் கெல்லாம் குதிகால் வலி வரும்.

ஹை ஹீல்ஸ் காலணிகளையும், பிளாஸ்டிக் மற்றும் சிந்தெடிக் காலணிகளையும் ஷூக்களையும் அணிகிறவர்களுக்கு இந்த வலி வரும்.

எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?

வலியின் தீவிரம் அதிகமுள்ள இடங்களைத் தொட்டுணர்ந்து அதற்கேற்ப சிகிச்சைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். வலியின் தீவிரத்துக்கேற்ப எக்ஸ்ரே அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிந்துரைக்கப்படலாம். வலிக்குக் காரணம் வேறு விஷயங்களாக இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தின் பேரில் பரிந்துரைக்கப்படுகிற பரிசோதனைகள் இவை. யூரிக் அமிலத்தின் அளவைப் பரிசோதிக்க வேண்டும்.

சிகிச்சைகள்

முதல் கட்டமாக வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்படும். ஆனால் மருத்துவரின் ஆலோசனையின்றி நாமாக வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது மிக ஆபத்தானது. தொடர்ச்சியான ஓய்வும் வலியுள்ள பகுதிக்கு அதிக வேலை கொடுப்பதை நிறுத்தவும் சொல்லி அறிவுறுத்தப்படும். ஆரம்பக்கட்ட வலி இவற்றிலேயே சரியாகிவிடும். மருந்துகளுடன் கூடவே சிலவகை தெரபிகளும் பரிந்துரைக்கப்படும்.

உதாரணத்துக்கு ஃபிசிகல் தெரபி. இதில் பாதங்களையும் குதிகால்களையும் வலுவாக்கும் பயிற்சிகள் இருக்கும். இரவில் தூங்கும்போது அணியக்கூடிய ஸ்ப்லின்ட் பரிந்துரைக்கப்படலாம். இவை தவிர கடுமையான வலி இருக்கும்பட்சத்தில் வலியுள்ள இடத்தில் ஸ்டீராய்டு ஊசி செலுத்தப்படும். அது தற்காலிக நிவாரணம்தான் தரும். இதை அடிக்கடி போட்டுக் கொள்ளக்கூடாது. வலி குறையாதபோது ஷாக் வேவ் தெரபி மற்றும் அறுவை சிகிச்சைகள்
பரிந்துரைக்கப்படலாம்.

வராமல் தடுக்கும் வழிகள்

எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். குதிகால் உயரக் காலணிகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும். குதிகால்களுக்கு ஷாக் அப்சார்பர் போன்று சப்போர்ட் தரக்கூடிய காலணிகளை அணியவும்.வெறும் கால்களுடன் நடப்பதைத் தவிர்க்கவும்.

நீங்கள் முறையாக உடற்பயிற்சி செய்கிறவர் என்றால் குறிப்பிட்ட இடைவெளிக்கொரு முறை காலணிகளை மாற்றவும். 500 மைல்கள் நடந்து அல்லது ஓடி முடித்ததும் காலணிகளை மாற்றுவது சிறந்தது. நடை மற்றும் ஓட்டப்பயிற்சிகளுக்குப் பதிலாக சைக்கிளிங் மற்றும் ஸ்விம்மிங் பயிற்சிகளை மேற்கொள்ளவும். வலி அதிகமுள்ளபோது ஐஸ் ஒத்தடம் கொடுக்கவும்.

( விசாரிப்போம்… )

- எழுத்து வடிவம் : எம்.ராஜலட்சுமி