அதிகரிக்கும் குழந்தைகளின் உடல்பருமன்



தேவை அதிக கவனம்

தற்போது உடல்பருமன் பிரச்னை அபாயகரமாக அதிகரித்து வருவதால் அதுகுறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதோடு, அந்த பிரச்னையைக் கட்டுப்படுத்தி நமது எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதிலும் குழந்தைகளின் உடல்பருமன் பெரிதும் கவலை தருவதாக இருக்கிறது.

உலகம் முழுவதும் குழந்தைகள்

மற்றும் இளம்வயதினருக்கு உடல்பருமன் விரைவாக அதிகரித்து வருகிறது. குழந்தையின் தற்போதைய மற்றும் நீண்ட கால உடல் நலம், கல்வி சாதனைகள் மற்றும் நல் வாழ்க்கையைப் பாதிக்கும் இளம் வயது உடல்பருமனுக்கு எதிரான நடவடிக்கைகள் உலக அளவில் மெதுவாகவும் நிலையற்றும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய மக்கள் தொகையில் 11.2 சதவிகிதம் பேர் உடல்பருமன் அல்லது அதிக எடை உள்ளவர்களாக உள்ளனர்
என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

எனவே, எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க மருத்துவர்கள் கூறும் கீழ்க்கண்ட ஆலோசனைகளைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டியது அவசியம். இது குழந்தைகளிடம் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தையும், வாழ்க்கைமுறையையும் உருவாக்கும். இந்த ஆலோசனைகள் வயது வந்தவர்களுக்கும் சேர்த்துத்தான்.

* வறுத்த உணவைத் தவிர்த்து அதிகமாகப் பழங்களையும் காய்கறிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* நார்ச்சத்து நிறைந்த முழு தானியம், பருப்பு மற்றும் முளைகட்டிய தானியங்களை உண்ண வேண்டும்.
* காய்கறிகளைப் பொரிக்காமல் நீராவியால் வேக வைத்து பயன்படுத்துவது நல்லது.
* உணவை ஒரே நேரத்தில் அதிகமாக உண்ணாமல், சிறிய அளவில் 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை உண்ண வேண்டும்.
* சீனி, கொழுப்பு வகை உணவுகள் மற்றும் மதுப் பழக்கத்தைக் குறைக்க வேண்டும்.
* தினமும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.
* மின்படிகள், மின்தூக்கிகளுக்குப் பதில் படியைப் பயன்படுத்தலாம்.
* பணி இடத்தில் ஒரே மாதிரியாகத் தொடர்ந்து அமராமல், அவ்வப்போது சிறுசிறு இடைவேளைகளை எடுப்பது நல்லது.
* மெதுவாக எடையைக் குறைக்க வேண்டும். மருத்துவ காரணங்களின்றி எடை இழப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம்.

- கௌதம்