அமலுக்கு வருகிறது தனியார் மருத்துவமனை சட்டம்



செய்திகள் வாசிப்பது டாக்டர்

அதிக கட்டணம் வாங்குகிறார்கள், அலட்சியமாகக் கையாள்கிறார்கள் என்று தனியார் மருத்துவமனைகளைப் பற்றிய புகார்கள் எப்போதும் முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு முடிவு கட்டும்விதமாகவே 1997-ம் ஆண்டு புதிய சட்டம் ஒன்றை தமிழக அரசு இயற்றியது.
தனியார் மருத்துவமனை நிர்மாண(ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1997 என்ற அந்த சட்டம், அதன்பிறகு நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றம் சென்ற இந்த பிரச்னையின் முடிவாக இப்போது அமல்படுத்த அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் முடி மாற்று அறுவை சிகிச்சை மையத்தில் முடி மாற்று சிகிச்சை செய்து கொண்ட மருத்துவ மாணவர் சந்தோஷ்குமார், சிகிச்சை பெற்ற இரண்டு நாட்களில் மரணம் அடைந்தார். இதற்கு அந்த முடி மாற்று சிகிச்சைதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த தனியார் சிகிச்சை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்த மையத்தின் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்துவதற்கு 1997-ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றியும் 20 ஆண்டுகளாக அதை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

தற்போது அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 1997-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசிதழில் அதை வெளியிட்டுள்ளதாகவும், ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து அந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சட்டத்தை அமல்படுத்தியதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி, அந்த வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 8-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

- க.கதிரவன்