வயாகரா முதல் வைப்ரேட்டர் வரை...



கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...

இவை எல்லாமே ரகசியமாக அதிகமாக தேடப்படுபவை. பருவமடைந்த  மனிதர்கள் வாங்கிப் பயன்படுத்த விரும்பும் பொருட்கள் இவை. ஆனாலும் இதைப் பற்றியெல்லாம் நாம் வெளிப்படையாக அதிகம் பேசிக் கொள்வதில்லை. அவைதான் Sex Toys. இந்தியாவில் செக்ஸ் டாய்ஸ் உற்பத்தி செய்வதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவை ஆன்லைனில் கொட்டிக் கிடக்கின்றன. தாராளமாக விற்பனையாகியும் வருகின்றன.  

இதற்கு உதாரணமாக சில மாதங்களுக்கு முன் வெளியான அந்தச் செய்தி இது தொடர்பாக நம்மை யோசிக்கச் செய்கிறது. சீனாவில் இருந்து அதிகளவில் கள்ளத்தனமாக செக்ஸ் டாய்ஸ் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகப்பட்டு ஆய்வு செய்ததன் விளைவாக அவர்கள் கைகளில் சிக்கியது. ஆனால், அவை எல்லாம் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் கடிகாரம், துடைப்பம், குழந்தைகள் நாற்காலி என்ற பெயர்களில் போலியான முகவரியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

சராசரியாக 79 லட்சம் மதிப்பில் செக்ஸ் டாய்ஸ் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ‘செக்ஸ் டாய்ஸ்’ அரசு தடை செய்திருந்தாலும் ஏதோ ஒரு வழியில் மக்கள் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
ஆன்லைனில் பரிமாறப்படும் செக்ஸ் கதைகள் மற்றும் வீடியோக்களில் பெண்கள் டில்டோ, வைபரேட்டர் கருவிகளை செக்ஸ் இன்பத்துக்காக பயன்படுத்துவது போல காட்டப்படுகிறது. லெஸ்பியன் பெண்கள் மற்றும் எப்போதும் செக்ஸ் உணர்வோடு இருக்கும் பெண்கள் தங்களது பிறப்புறுப்புப் பகுதியில் ஆணுறுப்பு வடிவில் உள்ள வெள்ளரிக்காய், கேரட் போன்ற பொருட்களையும் பயன்படுத்துவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆண்கள் தங்களது சுய இன்ப பழக்கத்துக்காக செக்ஸ் உணர்வைத் தூண்டும் படங்கள், வீடியோக்கள், பெண் உருவம் போன்றே உடலமைப்பு கொண்ட செக்ஸியான பொம்மைகளையும் பயன்படுத்துகின்றனர்.

இதெல்லாம் பழக்கத்தில் இருந்தாலும் இது பற்றின பல கேள்விகள் மனதில் எழாமல் இல்லை.சமீபகாலமாக வெளியான ஹிந்தி படங்களில் பெண்கள் தங்களது சுய இன்பத்துக்காக டில்டோ என்னும் கருவியை பயன்படுத்துவதாக காட்சிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இத்திரைப்படங்கள் வெளியான பின்னர் செக்ஸ் டாய்ஸ் விற்பனை 44 சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறது ஒரு புள்ளிவிவரம். கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை ஆன்லைன் மூலம் 1 கோடியே 78 லட்சத்து 99 ஆயிரத்து 775 ரூபாய்க்கு செக்ஸ் டாய்ஸ் விற்பனையாகியிருந்தது. ஆனால், திரைப்படம் வெளியான பின் ஜூன் மாதத்தில் மட்டும் 1 கோடியே, 18 லட்சத்து 99 ஆயிரத்து 346 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன என
புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் படங்களின் தாக்கத்தால் செக்ஸ் டாய்ஸ் விற்பனை கூடியுள்ளது. செக்ஸ் ரோபோக்கள் வரை மனித இனம் உருவாக்கி வருகிறது. இவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கங்கள் விளைவுகள் குறித்து விளக்குகிறார் பாலியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ரமேஷ் கண்ணா. ‘‘செக்ஸ் டாய்ஸ் இந்தியாவில் எந்தக் கடையிலும் கிடைக்காது.

இதுபோன்ற பொருட்களை வெளிப்படையாக வாங்குவதிலும் சங்கடங்கள் உள்ளன. ஆனால், ஆன்லைனில் எக்கச்சக்க வெரைட்டிகளில் கிடைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பருவமடையும் வயது 10 ஆகக் கூட குறைந்துவிட்டது. ஆனால், அவர்களின் திருமண வயதோ சராசரியாக 25-ஐத் தாண்டுகிறது. பருவமடைந்த பின் ஆண், பெண் இருவரது உடலிலும் கலவியல் வேட்கை என்பது தானாகவே எழும்.

ஆண்கள் படிப்பை முடித்து, வேலைக்குப் போய் குறிப்பிட்ட சம்பளம் பெறும் வரை திருமணத்தைத் தள்ளிப் போடுகின்றனர். ஆனால், செக்ஸ் உணர்வுகளை 15 ஆண்டுகள் வரை பூட்டியே வைப்பது அசாதாரணமானது. இதுவும் இவர்களை செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தும்
நிலைக்குத் தள்ளுகிறது. எதிர்பாலினரே இல்லாமல் செக்ஸ் இன்பத்தை அடைவதுதான் இதன் நோக்கம்.

ஆன்லைனில் செக்ஸ் தொடர்பான தகவல்கள், வீடியோக்கள், வாட்ஸ் ஆப் ஷேரிங் என அனைத்தையும் பதின் பருவத்திலேயே தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. கட்டுப்பாடுகளற்ற தகவல் அறிதலும் இதுபோன்ற பொருட்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. மனித குல வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இதுபோன்ற செக்ஸ் இன்பத்தைக் கூட்டுவதற்கான கருவிகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

தன்னை திருப்திப்படுத்த முடியாத கணவன் உள்ளவர்களும், கணவனைப் பிரிந்திருப்பவர்களும் வைபரேட்டர் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். தம்பதியருக்குள் பரஸ்பரம் உடலுறவுக்கான நேரத்தில் இன்பத்தை அதிகரிக்கச் செய்யவும் இதுபோன்ற செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

நாள்பட்ட நோய் காரணமாக செக்ஸ் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் இதுபோன்ற கருவிகளைப் பயன்படுத்தி தன் இணையின் மகிழ்ச்சிக்கு உதவுகின்றனர். செக்ஸ் தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு சில சமயங்களில் மருத்துவர்களும் சில கருவிகளைப் பரிந்துரைப்பதுண்டு.

ஆனால், திருமணத்துக்கு முன்பாக இதுபோன்ற கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து யாரும் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்பதில்லை. ஆன்லைனில் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதுவே அளவுக்கு அதிகமாக மாறும்போது இதுபோன்ற பழக்கங்களுக்கு அடிமை ஆகிவிடுவார்கள். இதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதோடு அவர்களின் கல்வி உள்ளிட்ட வளர்ச்சிகளும் பாதிக்கப்படும்.

செக்ஸ் உணர்வென்பது பிறப்புறுப்புப் பகுதியில் உள்ள நுண் உணர்வுகள் சம்பந்தப்பட்டது. திருமணத்துக்கு முன்பாக பெண்கள் பிறப்புறுப்புப் பகுதியில் தரமற்றக் கருவிகளைப் பயன்படுத்துவதால் பாதிப்புக்கள் ஏற்படலாம். கேரட், வெள்ளரி போன்ற காய்கள் பயிரிடும்போது அவற்றின் வளர்ச்சிக்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.

இவை கெட்டுப்போகாமல் இருக்கவும் இதுபோன்ற பொருட்களில் நச்சுத்தன்மை உள்ள மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை பிறப்புறுப்புப் பகுதியில் செக்ஸ் இன்பத்துக்காகப் பயன்படுத்தினால் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பாருங்கள்... விபரீதம் உங்களுக்கே புரிய வரும்.

பிறப்புறுப்பு பகுதி என்பது சென்சிட்டிவானது என்பதால் இது போன்ற கருவிகளை அதிகளவில் பயன்படுத்துபவர்களால் பின்னாளில் தன் இணையுடன் தாம்பத்ய உறவு கொள்வது, உச்ச இன்பம் அடைவது இவற்றில் சிக்கல் உண்டாக வாய்ப்புள்ளது.

செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்பவர்கள் இதற்கான தேவை கருதி மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். சிலர் இதுபோன்ற செக்ஸ் டாய்ஸுக்கு அடிமையாகியிருக்கலாம். அவர்கள் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று இதுபோன்ற பழக்கங்களில் இருந்து வெளியில் வரலாம்.

இது மட்டும் இல்லாமல் செக்ஸ் உறவு கொள்வதில் இயலாமை உள்ளவர்களுக்கு மூளையில் செக்ஸ் உணர்வைத் தூண்டவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வயாகரா போன்ற மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். ரத்த ஓட்டத்தை இதுபோன்ற மருந்துகள் அதிகரிக்கச் செய்வதால் மருத்துவரின் ஆலோசனை இன்றி எடுத்துக் கொள்ளக் கூடாது. இதய நோய் பாதிப்பு உள்ளவர்களும், ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களும் இதுபோன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இன்றிப் பயன்படுத்தும்போது மாரடைப்புக்கு ஆளாகலாம்.

வயாகரா போன்ற மருந்தைப் பயன்படுத்திப் பழகியவர்கள் அதைப் பயன்படுத்தாமல் தன்னால் செக்ஸ் வைத்துக் கொள்ளவே முடியாது என்னும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். டெஸ்டோஸ்டீரோன் சுரப்பை அதிகரிக்கச் செய்ய வைட்டமின் டி 3, வைட்டமின் இ மருந்துகள் கொடுக்கப்படும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்கள் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க சிகிச்சை அளித்த பின்னர் செக்ஸ் தொடர்பான மாத்திரைகள் சப்போர்ட்டுக்காக வழங்கப்படும். தனக்கு உள்ள உடல்நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு இனிமையான செக்ஸ் என்ற நிலைக்கு தயாராகலாம்.

ஆண்கள் புதுவிதமான செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின்றன. மகிழ்வைத் தரும் அனுபவங்களுக்கு மனித இனம் முக்கியத்துவம் அளிக்கிறது. அதுவே ரகசியமாக வைத்துக் கொள்ளும்போது அது கூடுதலான மகிழ்வைத் தருவதாகவும் எண்ணுகின்றனர்.

இதுபோன்ற பழக்கங்கள் அளவுக்கு அதிகமாகும்போது அது மனிதனை அடிமையாக்கி மனநோய் எனும் நிலைக்குத் தள்ளுகிறது. ஆண், பெண்ணின் சிந்தனையை பாதிப்பதால் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி சிதைக்கப்படுகிறது என்பதை மனதில் கொண்டு செக்ஸ் டாய்ஸ் தரும் இன்பம் தேவையா  என்ற கேள்வியை உங்களிடமே கேட்டு பதில் பெறுங்கள்.

( Keep in touch...)

எழுத்து வடிவம் : கே.கீதா