நொறுக்குத் தீனிகளைக் கட்டுப்படுத்தும் வழி!



ஆரோக்கியம் தரும் உணவுகள் எவை என்பது பற்றியும், ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகள் எவை என்பது பற்றியும் நமக்குத் தெரியும். ஆனாலும், நொறுக்குத் தீனிகளை நாம் விரும்பும் காரணம் என்ன? அவைகளை ஏன் தவிர்க்க முடிவதில்லை என்பதற்கான காரணத்தை உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் கேட்டோம்...‘‘புரதச்சத்துக்கள் நம் உடலின் கட்டுமானத்துக்கும் இயக்கத்துக்கும் மிகவும் அத்தியாவசியமானவை. இந்த புரதச்சத்துப் பற்றாக்குறையும் நொறுக்குத் தீனிகள் எடுத்துக் கொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இது எப்படி என்று ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதற்கான பதில் உண்டு. இந்தியாவில் தினமும் இரவு உணவு கிடைக்காமல் 30 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியோடு உறங்கச் செல்கிறார்கள் என்று ஐ.நாவின் ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. அதேபோல், பொருளாதார வசதி மிக்கவர்களும் இப்போது பட்டினியோடுதான் உறங்கச் செல்கிறார்கள். ருசியான, விதவிதமான உணவுகளை அவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டாலும் போதுமான புரதச்சத்தினை அவர்கள் தங்கள் உணவின் மூலம் பெற்றுக் கொள்வதில்லை.

இதை மறைமுகமான பட்டினி(Hidden hunger) என்று குறிப்பிடலாம். இதனால், ரத்தசோகை, கல்லீரல் பாதிப்பு, ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய உடல் நலக்குறைபாடுகள் வரும். மேலும், நமது நோய் எதிர்ப்பு சக்தியும் கெடும். இப்படி போதுமான புரதச்சத்து கிடைக்காத காரணத்தால்தான் பசி உணர்வு ஏற்பட்டு, ஏதேனும் நொறுக்குத் தீனிகள் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. இதை மாற்றியும் சொல்லலாம். அதிக நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதால்ன் போதுமான புரதச்சத்தும் கிடைப்பதில்லை. எனவே, புரதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து போதுமான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், நம்முடைய உடல்நலத்திற்கும், இயக்கத்திற்கும் தேவையான சத்துக்களில் புரதச்சத்து தவிர்க்க முடியாத இடம்பெறுகிறது. துவரை, காராமணி, பட்டாணி போன்ற சைவ உணவிலும், முட்டை, கோழி இறைச்சி, மீன் முதலான அசைவ உணவிலும் நமக்குத் தேவையான அளவு கிடைக்கிறது. அடுத்தது பால், தயிர் ஆகியவற்றில் இருந்தும் நமக்குத் தேவையான புரதச்சத்தினைப் பெற்றுக் கொள்கிறோம். காய்கறிகளிலும் புரத சத்தினை ஓரளவு பெற்றுக் கொள்கிறோம்’’ என்கிறார்.

- விஜயகுமார்