மருத்துவரீதியில் தியானம் பலன் தருமா



Wellness

பரபரப்பும் பதற்றமும் நிறைந்த இன்றைய நவீன வாழ்க்கை முறையில் அமைதித் தேடி எல்லோரும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு பக்கவிளைவு இல்லாத பலன் தரும் நிவாரணமாக இருக்கிறது தியானம். அமைதியுடன் ஆனந்தமும், ஆரோக்கியமும் அளிக்கும் மருந்தாகவும் தியானம் பெருமை பெறுகிறது. ஆரோக்கியரீதியில் இதன் முழுமையான பலன்களை பெறுவது எப்படி என்கிற சந்தேகங்களுக்கான பதில்களை உளவியல் மருத்துவர் சுனில்குமார் விளக்குகிறார்...


* தியானம் என்பது பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே தோன்றியது. ஆரம்ப காலங்களில் இறைவனை அடையும் ஆன்மிக வழி என்றே பலரும் தியானம் பற்றி நினைத்து வந்திருக்கிறார்கள். யோகாவுக்கும் இப்படி ஒரு நிலைதான். ஆனால், விஞ்ஞானம் வளர்ச்சி பெற்ற பிறகு இந்த எண்ணம் மாறத் தொடங்கியது.
பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் தியானத்தின் பலன்களை கவனிக்கத் தொடங்கிய பிறகுதான் மருத்துவரீதியான முக்கியத்துவமும் தியானத்துக்கு உண்டு என்பது தெரிய வந்தது.
* தியானம் செய்வதனால் கோபம், ஆணவம், பிடிவாதம், எதன் மீதும் பற்றின்மை, அமைதியின்மை போன்றவை விலகி நம் மனது ஒரு நிலைப்படுகிறது. குறிப்பாக, உள் மன உணர்வை வலுப்படுத்தவே தியானம் மிக அவசியமாகிறது.
* தியானம் செய்வதால் மருத்துவரீதியாக நாம் பல நன்மைகளை அடைகிறோம். ஞாபக சக்தி, புத்திக்கூர்மை அதிகரிக்கிறது. மன அழுத்தம், மன உளைச்சல், வீணாக பதற்றப்படுவது போன்ற எதிர்மறை எண்ணங்கள் குறைகிறது. மனதை சாந்தப்படுத்த தியானம் மிகவும் முக்கியமானது.
* பொதுவாக மன அழுத்தம் இருப்பவர்கள் புகைப்பிடிப்பது, குடிப்பது என தீய பழக்கங்களை செய்வதுண்டு. எனவே, அவர்கள் தங்களுடைய மன அழுத்தம் குறைய தியானம் செய்தால் அவர்களின் மன அழுத்தம் குறையும். தீய பழக்கங்களிலிருந்து தம்மை எளிதில் விடுவித்துக் கொள்ளலாம்.
* தியானம் கற்கும் ஆற்றலை அதிகரிக்கிறது. நம் கவனத்தை கூர்மைப்படுத்துகிறது. நம்மை எப்போதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
* தியானம் தொடர்ந்து செய்கிறவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதில்லை. ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நோயின் தீவிரமும் குறையும். மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் தியானம் குறைக்கிறது. ஹார்மோனை சரியான விகிதத்தில் சுரக்கச் செய்து உடலுக்கு மிகவும் நன்மை தருகிறது.
* விடியற்காலை மற்றும் மாலை நேரம் தியானம் செய்வது உகந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான நேரம் பிடிக்கும், புதிதாக தியானம் செய்பவர்கள், நினைவுகள் கட்டுப்படுத்த முடியாமல் சிறிது கஷ்டப்படுவார்கள். எனவே, அவர்கள் மனநிலையைக் கட்டுப்படுத்தி முழுநிலையை அடைவதற்கு சில கால அவகாசம் தேவைப்படும்.
* தியானம் குறித்த பயிற்சி பெற்ற நிபுணரிடமோ அல்லது உளவியல் நிபுணர்களிடமோ ஆலோசனை பெற்று தியானம் செய்ய வேண்டும். அப்போதுதான் முழுமையான பலன் கிடைக்கும்.
* தியானத்தை மட்டும் தனியாக மேற்கொள்வதைவிட யோகா மற்றும் மூச்சுப்பயிற்சியுடன் சேர்ந்து செய்வது இன்னும் சிறப்பு. இதனை அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து மேற்கொள்ளலாம்.
* இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு யோகா மற்றும் மூச்சுப்பயிற்சிகள் கடினமாக இருக்கும். இத்தகைய உடல்நலப் பிரச்னை கொண்டவர்களுக்கு தியானம் சுலபமானது. நல்ல ஆரோக்கியமும் பெற முடியும்.
* பெண்கள் ஒரு குடும்பத்தின் அச்சாணியாக இருப்பதால் அவர்கள் தங்கள் உடல்நலனையும், மனநலனையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக, மகப்பேறுக்கு முன்னும் பின்னும் மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால் தியானப்பயிற்சி தொடர்ந்து செய்தால் அப்பிரச்னைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்.  
* தூக்கம் அதிகரிப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும் என்று கூறுவார்கள். எனவே, தூக்கமின்மைக்கு சிறந்த பயிற்சி தியானம்.
* தியானம் செய்யும்போது உடல் மற்றும் சிந்தனையைத் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்த வெளிச்சம் மற்றும் அமைதியான இடத்தில் செய்வது முக்கியம். உணவு வேளைக்குப் பிறகு ஒன்றரை மணி நேரம் கழித்து அல்லது அதற்கு முன்பு செய்தால் நல்ல பலன் அளிக்கும்.
* தியானத்தில் பயிற்சி பெற்ற சிலர் மனதை ஒரு நிலைப்படுத்தி நீண்ட நேரம் கூட செய்வார்கள். எனவே, அவர்களுடன் உங்களை ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.
* ஆரம்ப நிலையில் தியானம் செய்வது சற்று சிரமமாக இருக்கக் கூடும். அந்த நிலை நீடித்துக் கொண்டே இருந்தால் உளவியல் மருத்துவரை அணுகலாம்.

- எம்.வசந்தி