இளமையாக உணர்கிறவர்களுக்கு ஆயுள் அதிகம்!



நல்ல எண்ணங்கள் தரும் அபார பலன்கள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் சுவாரஸ்யமான கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், புதிய கட்டுரை ஒன்று இது. ‘நிகழ்காலத்தை அனுபவித்து, மனதளவில் இளமையாக உணர்பவர்கள் நீண்ட ஆயுள் உடையவர்களாக இருக்கிறார்கள்’ என்பதை லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 52 வயதுக்கு மேற்பட்ட சுமார் 6,500 பேரிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இந்த ஆய்வறிக்கையை JAMA Internal Medicine மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.

ஆய்வில் கலந்து கொண்டவர்களை, தங்கள் கண்காணிப்பில் 10 நாட்கள் வரை வைத்திருந்து, ஒவ்வொரு நாளும் அவர்கள் எந்த வயதில் இருப்பதாக உணர்கிறார்கள் என்பதையும், அவர்களுடைய உடல் ஆரோக்கியம், மன உணர்வு போன்ற தகவல்களையும் கேட்டறிந்தனர். மேலும், அவர்களுடைய வயது, பாலினம், மன அழுத்தம், சமூகவியல் காரணிகள், சமூக ஈடுபாடு, அறிவாற்றல் செயல்பாடு, உடல் ஆரோக்கியம், உடலியக்கம் மற்றும் புகைப்பழக்கம், மது அருந்தும் அளவு, உடற்பயிற்சி போன்ற வாழ்வியல் நடவடிக்கைகளும் ஆய்வுக் காரணிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் தங்களுடைய காலக்கிரம வயதைக் காட்டிலும்(Chronological age), மனதளவு வயது (Subjective age) குறைவாக உணர்ந்தவர்கள் 69.6 சதவிகிதத்தினராகவும், 4.8 சதவீதத்தினர் தங்கள் உண்மையான வயதைக் காட்டிலும் முதுமையான உணர்வுடையவர்களாகவும், 25.6 சதவீதத்தினர், உண்மையான வயதை உணர்ந்தவர்களாகவும் இருந்தனர். இதைத்தவிர, தொடர்ந்து 10 வருடங்கள் வரை இவர்களின் உடல் ஆரோக்கியம், மனநிலை, இறப்பு போன்றவையும் கண்காணிக்கப்பட்டது. அதனடிப்படையில், மனதளவில் இளமையாக உணர்ந்தவர்களின் ஆயுட்காலம் கூடுதலாக இருந்ததும், அவர்கள் நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ்ந்தவர்களாகவும் இருப்பது இந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

- என்.ஹரிஹரன்