மாணவர்களை குறிவைக்கும் புகையிலை நிறுவனங்கள்



எச்சரிக்கை

‘‘பள்ளி, கல்லூரி மாணவர்களை இலக்காக வைத்து கவர்ச்சிகரமான பல புதிய விளம்பர உத்திகளைக் கொண்டு புகையிலை நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த அபாயத்தில் இருந்து மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்கிறார் Consumers association of India அமைப்பின் தொடர்பு அலுவலரான சோமசுந்தரம். நுகர்வோர் அமைப்பு சார்பில் எடுக்கப்பட்ட இதுகுறித்த ஆய்வின் முடிவையும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

‘‘தமிழ்நாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் புகையிலை பொருட்கள் பல இடங்களில் விற்கப்படுகிறது. இந்தப் பொருட்களை சிறு வியாபாரிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பவர்களின் மூலம் விற்பனை செய்கின்றனர்.

புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் இருக்கிறோம். அதற்கு தமிழ்நாட்டில் COPTA 2003 சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.

இந்தியாவில் 27.5 கோடி பேர் வரை புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வரை உயிரிழக்கின்றனர். புகையிலைப் பழக்கத்தால் 30% பேர் புற்றுநோயாலும் 40% பேர் காசநோயினாலும் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் புகையிலை பொருட்களை தயாரிப்பதிலும், வாங்குவதிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

புகையிலை பயன்பாட்டைக் குறைக்க மத்திய அரசு கொண்டுவந்த COPTA 2003 சட்டம் (Cigarettes and Other Tobacco Products Act 2003) கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் போன்ற 4 மாநிலங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால், தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்கள் இச்சட்டத்தை இன்னும் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. இந்த சட்டம் முழுமையாக அமலுக்கு வர வேண்டும்.

மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்குரிய உரிமம் வாங்குவதை கட்டாயப்படுத்த வேண்டும். பள்ளிகளுக்கு மிக அருகிலேயே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை கட்டாயம் தடை செய்ய வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும்’’ என்கிறார் சோமசுந்தரம்.

- க.கதிரவன்