பனீர் ஏன் சாப்பிட வேண்டும்?!



அறிவோம்

‘‘புரதச்சத்து நம் உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் இன்றியமையாதது. இறைச்சிகள் மற்றும் பருப்புகளைப் போலவே பனீரிலிருந்தும் புரதச்சத்தானது அதிகம் கிடைக்கிறது. அதிலும் சாதாரண பாலில் உள்ளதை விட பனீரில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது. அதனால் நீரிழிவு உள்ளவர்களும்கூட பனீரை தைரியமாக சாப்பிடலாம்’’ என்று விவரிக்கிறார் உணவியல் நிபுணர் ஸ்ரீதேவி.

பனீர் ஏன் சாப்பிட வேண்டும்?

‘‘பனீரில் நம் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களான பாஸ்பரஸ், புரதச்சத்து, கார்போஹைட்ரைட், கொழுப்பு அதிகமாக இருப்பதால் நாம் அதனை உட்கொள்ளும்போது அதன் முழுப்பலனை பெற முடியும்.’’

எல்லா வேளைகளிலும் சாப்பிடலாமா?

‘‘பனீர் எல்லா வேலைகளிலும் சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள்தான். குறிப்பாக, காலை நேரங்களில் பனீர் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான அதிக எனர்ஜி நாளின் தொடக்கத்திலேயே கிடைத்துவிடுகிறது. இரவு நேரங்களில் சாப்பிடுவதால் நன்கு தூக்கம் வரும். ஜீரணக்கோளாறு உள்ளவர்கள் மட்டும் இரவில் பனீர் அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் கொழுப்புச்சத்து இருப்பதால் செரிமானமாவது சிறிது தாமதமாகும்.’’

பனீரின் முழுமையான சத்துக்கள் கிடைக்க எப்படி சமையல் செய்ய வேண்டும்?

‘‘பனீரை அதிகமாக வறுப்பதோ அல்லது பொறிப்பதோ கூடாது. அவ்வாறு செய்வதால் அதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் நீங்கிவிடும். இதனால் நம் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்காமல் போகலாம். முட்டை பொரியல், கிரேவி போன்றவை செய்து சாப்பிடலாம்.’’

பனீரில் அப்படி என்னென்ன சத்துக்கள் உள்ளன?

‘‘100 கிராம் ஃப்ரெஷ் பனீரில் எனர்ஜி - 265 kcal, புரதம் - 18.3 gm, கொழுப்பு- 20.8 gm, கால்சியம் - 208 mg, வைட்டமின் C - 3 mg, கரோட்டீன் - 110 mg ஆகியவை அடங்கியுள்ளது. புரதம், பாஸ்பரஸ் மற்றும் அதிகளவு கால்சியம் போன்ற சத்துக்கள் பனீரில் அதிகம் இருப்பதால் உடலுக்கு பலம் கிடைக்கும். மேலும் பல் சிதைவு, ஈறு பிரச்னைகள் மற்றும் மூட்டு பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாகவும் பனீர் இருக்கிறது.’’

பனீர் பயன்படுத்துகிறவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்...

‘‘பெரும்பாலும் கடைகளில் பனீர் வாங்குவதை விட வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதன் மூலம் பனீரில் கலக்கப்படும் ரசாயன அமிலங்களின் கலப்பை நம் உணவில் இருந்து  தவிர்க்கலாம். செலவும் மிக குறைவு.’’
வீட்டிலேயே பனீர் செய்யும் முறை பற்றிச் சொல்லுங்களேன்...

‘‘பால் -1 லிட்டர், எலுமிச்சைச்சாறு - 2 - 3 tbsp அல்லது தயிர் - 1 கப் எடுத்துக் கொள்ளுங்கள்.
பாலை நன்றாகக் கொதிக்க வையுங்கள். பால் கொதித்தவுடன் எலுமிச்சம் பழச்சாறு (அ) தயிர் ஏதேனும் ஒன்றை பாலில் கலந்து நன்றாகக் கிண்ட வேண்டும். அப்போது பால் திரிந்து கட்டி கட்டியாக வரும். அப்படி வந்ததும் அதனை ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டிக் கொள்ளுங்கள். இப்போது மேலே துணியில் இருப்பது தான் பனீர்.

தண்ணீர் நன்றாக வடிந்ததும், பனீரை இரண்டு தட்டுகளுக்கு இடையில் வைத்து,மேலே ஒரு கனமான பொருளை வைக்கவும்.1/2மணி நேரம் கழித்து பனீரை நன்றாக தண்ணீரில் கழுவிய பின் துண்டுகளாக்கி சமையலில் பயன்படுத்தவும். குறிப்பாக, பனீரை வைத்து டிக்கா செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம்... பனீரை வடிகட்டிய பிறகு கீழே இருக்கும் தண்ணீரை கொட்டி விட வேண்டாம். அந்த வடிகட்டிய நீரிலும் நிறைய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கிறது.அதனைத் தயிர் நீர் என்பார்கள். இதனை பருப்பு, காய்கறிகளுடன் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது கோதுமை மாவு பிசையவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.’’

- எம்.வசந்தி