உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனம்- ஒரு பார்வை



அறிந்துகொள்வோம்

உலக சுகாதார நிறுவனம் என்கிற பெயரைப் போலவே, உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனம் என்கிற FDA பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். இந்த FDA என்பது என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்...

சர்வதேச அளவில் மக்களின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகளின் நம்பகத்தன்மை, அழகு சாதனப் பொருட்களின் தரம் போன்றவற்றைக் கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட அரசு அமைப்பே ‘உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு தர நிறுவனம்(The Food and Drug Administration).FDA என்று அழைக்கப்படும் இந்த நிர்வாகம், அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறையின் கீழ் இயங்கும் அமைப்பாகும். உலகின் மற்ற நாடுகளும் இதே அளவுகோலின்படி உணவு மற்றும் மருந்துகளின் தரக்கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கின்றன.

உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சட்டக் கட்டுப்பாடுகள் மூலமாகவும், கண்காணிப்பு, மேற்பார்வை மூலமாகவும் நிர்வாகித்து பொது மக்களின் நலத்தைப் பாதுகாப்பதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது FDA. அமெரிக்காவில் விற்கப்படும் எந்தவொரு மருந்தும் இந்த நிறுவனத்தின் அனுமதியைப் பெறவேண்டும். இது ஐக்கிய மாகாணங்களின் கூட்டாட்சி நிர்வாகத் துறையின் ஒன்றாகும்.

உணவு பாதுகாப்பு, புகையிலைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மருந்துகள், உயிரியல் மருந்துகள், ரத்த மாற்றுக்கள், மருத்துவ சாதனங்கள், மின்காந்த கதிர்வீச்சு ஆகியவற்றின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை மூலம் பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்துவதற்கு FDA-வே பொறுப்பு.

அமெரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்து ஆணையாளரின் தலைமையில் FDA செயல்படுகிறது. ஸ்காட் கோட்லிப் என்பவர் தற்போதைய ஆணையாளராக பணிபுரிந்துவருகிறார்.

இவர் மே மாதம் 2017-ல் பதவியேற்றார். எஃப்.டி.ஏ-வின் தலைமையகம், அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ளது. இந்த நிறுவனம் ஏறக்குறைய 223 கள அலுவலகங்களுடன் 13 மாகாணங்களில் அமைந்துள்ளது. இந்தியா உள்பட சிலி, பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் FDAவின் களப்பணியாளர்கள் உண்டு.

உணவுப் பொருட்களின் ஒழுங்குமுறை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒழுங்குமுறை ஐக்கிய அமெரிக்க காங்கிரஸால் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்களின்படி நிர்வகிக்கப்படுகிறது. உணவுகள், உணவு சேர்க்கைகள், சத்துகள் போன்ற பல்வேறு வகைகளில் உணவுப் பொருட்களை FDA ஒழுங்குபடுத்துகிறது.

மருந்துகள் கண்காணிப்பு ஒரு மருந்து தயாரிக்கப்படுகிறது என்றால் அதன் பாதுகாப்புத்தன்மை பல கட்டமாக ஆராயப்பட்டு, FDA ஒப்புதலுக்கு பின்பே புதிய மருந்துகள் விரிவான ஆய்வுக்கு வருகின்றன.

கால்நடை தயாரிப்புகள்

விலங்குகளுக்கான மையம் (CVM) என்பது FDA-வின் கிளை ஆகும், அது விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவு சேர்க்கைகள் மற்றும் மருந்துகளை
ஒழுங்குபடுத்துகிறது.

ஆன்லைன் மருந்துகள்

கண்காணிக்கப்படாத, தரமில்லாத மருந்துப் பொருட்கள் ஆன்லைன் மூலமாக விற்கப்படுவதாக எஃப்.டி.ஏ கூறியுள்ளது. ஆன்லைன் மூலமாக விற்கப்படும் மருந்துகளை கண்காணித்து, ஒழுங்குமுறைப்படுத்துவது எப்படி என்ற செயல்முறையை அரசு மேற்கொண்டு வருகிறது.

அவர்களால் தற்போது மக்கள் ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்வதை தடுக்க முயற்சி எடுக்க முடியவில்லை. மக்கள் ஆன்லைனில் மருந்துகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். மீறியும் வாங்கினால் அந்த மருந்துகளுக்கான தரத்துக்கு நாங்கள் உத்தரவாதம் தர முடியாது எனவும் எஃப்டிஏ மருந்துகளுக்கான துணை ஆணையர் பி.ஆர் மசல் கூறியுள்ளார்.

FDA அளித்த அதிர்ச்சி தகவல்கள்பேக்கேஜ் உணவுகள் மற்றும் பதப்படுத்தி வைக்கும் உணவுகள் மனிதர்களின் உடல் நலத்துக்குக் கேடு என்று பல முறை FDA எச்சரித்துள்ளது. மேகியில் ஆரம்பித்த ரசாயனக் கலப்படம் எனும் அலாவுதீன் பூதம் இன்று உலகளவில் மாபெரும் உருவெடுத்து நிற்பதற்குக் காரணம் FDA-தான்.

இந்தியாவில் விற்கப்படும் பல நொறுக்குத்தீனிகள் விற்பனைக்குத் தகுதியானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது. உணவுகளில் ரசாயனங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதே காரணம் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்தியாவில் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு செயல்படுகிறது.

- எம். வசந்தி