திடீர் புகழ்... பகீர் சர்ச்சை... நிலவேம்பில் அப்படி என்னதான் இருக்கிறது?!



அலசல்

டெங்கு காய்ச்சல், பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று விதவிதமான காய்ச்சல்கள் வந்து பீதியைக் கிளப்பும்போதெல்லாம், நிலவேம்பு பற்றிய பேச்சும் அடிபட ஆரம்பித்துவிடும். ‘டெங்குவுக்கு அலோபதியில் மருந்துகள் இல்லை’ என்ற தகவல்கள் வந்த நிலையிலும், நம்பிக்கை தந்து புகழ் பெற்றது நிலவேம்பு.

ஆனால், அதேவேளையில் ‘நிலவேம்பால் மலட்டுத்தன்மை வரும்’ என்று வதந்திகளும் சமீபத்தில் உலா வந்தது. உண்மையில் நிலவேம்பில் அப்படி என்னதான் இருக்கிறது? சித்த மருத்துவர் சதீஷ் விளக்குகிறார்.

நிலவேம்பு என்பது எல்லா இடங்களிலும் வளரக் கூடிய ஒரு செடி. இது பாரம்பரியமாக தமிழகத்தில் பயன்படுத்துகிற கசப்புச்சுவை உடைய ஓர் அரிய வகை மூலிகையாகும். காய்ச்சலைப் போக்குகிறது என்பது மட்டுமே நிலவேம்பின் பெருமை இல்லை. பசியைத் தூண்டுவது, உடலுக்கு வலிமை தருவது, மயக்கத்தைப் போக்குவது என பல பிரச்னைகளுக்கு அருமருந்தாக இருக்கிறது நிலவேம்பு.

நிலவேம்பு எல்லா வகை வைரஸ் காய்ச்சலையும் அழிக்கக் கூடிய ஆற்றலை பெற்றிருக்கிறது. உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்கச்செய்து காய்ச்சலை உண்டு பண்ணக் கூடிய வைரஸ்க்கு எதிராக சண்டையிட்டு உடலைக் காக்கிறது.

பெரும்பாலும் நவீன உலகில் வைரஸ் எதிர்ப்பு மருந்து இல்லாத சூழ்நிலையில், நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரி செய்து வைரஸ் எதிர்ப்பு மருந்தாகவும் திறன் கொண்டதாக செயல்படுகிறது நிலவேம்பு. அதனால்தான் நிலம்வேம்பினை எல்லா காய்ச்சலுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

இதில் நிலவேம்பு குடிநீர் என்பது ஒன்பது மூலிகைகளின் கூட்டு மருந்தாகும். இவற்றில் உள்ள 9 மூலிகைகளும் பஞ்ச பூத தத்துவத்தின் அடிப்படையிலும், சத்துரு மித்துரு என்ற சித்த மருத்துவத்தின் தத்துவத்தின்படியான  அளவிலும் சரிவிகிதமாக சேர்த்து உடலுக்குத் தீங்கு விளைவிக்கா வண்ணமே நிலவேம்பு குடிநீர் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், நிலவேம்பு குடிநீரால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.

நிலவேம்பு குடிநீரில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணம் இருக்கிறது. அதனால் இது டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. டெங்கு காய்ச்சல் மனித உடலில் உள்ள தட்டணுக்களை குறைத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிதைக்கிறது. நிலவேம்பு குடிநீர் நோய் எதிர்ப்பு மண்டலத்தை காத்து உடலிலுள்ள நீர்சத்து குறைபாட்டை சரிசெய்து உடலை காக்கிறது.

பொதுவாக நாம் பயன்படுத்தும் நிலவேம்பு குடிநீர் Hydrophilic extract என்ற நீர்ம வடிவத்தில் வைரஸ் எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. உடலின் செயல்பாடுகள் மாறாமல் நோயிலிருந்து காத்து உடலை நல்ல நிலையில் வைப்பது இதன் சிறப்பம்சம். ஒரு கூட்டு மருந்தாக நிலவேம்பு குடிநீர் தாயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

மலட்டுத்தன்மை என்பதெல்லாம் எந்த வித ஆதாரமும் இல்லாத வதந்திதான். நிலவேம்புக்கு தற்போது கிடைத்திருக்கும் அங்கீகாரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் கிளப்பும் வீண்வம்பு அது’’ என்கிற சித்த மருத்துவர் சதீஷ் நிலவேம்பு குடிநீரின் கூட்டு மருந்து செயல்பாடுகள் பற்றியும் விவரிக்கிறார்.

நிலவேம்பு

நிலவேம்பு உடலை தேற்றும் சக்திகொண்டது, உடல் முழுவதையும் பற்றிய அல்லது உடல் உறுப்புகளைப் பாதிக்கிற நோயைப் போக்கி உடலை மீண்டும் நல்ல் நிலைக்குக் கொண்டு வருகிற அருமருந்தாக இருக்கிறது.

பற்படாகம்

சுரத்தை நீக்குகிற பொருள். உடலில் வியர்வை உண்டாக்கும் குணம் கொண்டது. மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

விலாமிச்சை வேர்

உடலின் பித்தத்தைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சி உண்டாக்குகிறது.

வெட்டிவேர்

உடலில் உள்ள கெட்ட வாயுக்களை வெளியேற்றுகிறது.

கோரைக்கிழங்கு

உடலில் சிறுநீரை பெருக்குகிறது. பற்படாகம் போலவே உடலை வியர்க்கச் செய்கிறது.

சந்தனம்

சிறுநீரைப் பெருக்குகிறது, உடலை குளிர்விக்கிறது, உடலைத் தேற்றுகிறது.

சுக்கு

பசியைத் தூண்டுகிறது, அகட்டுவாயு அகற்றியாக இருக்கிறது.

மிளகு

வாதமடக்கி, முறை  வெப்பகற்றி!

பயன்படுத்துவது எப்படி?

அரசு பல்வேறு ஆராய்ச்சிகளை செய்த பிறகே நிலவேம்பினை பரிந்துரை செய்துள்ளது. அந்த வகையில் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கலாம் என்று அரசு மட்டும் அல்லாமல் சர்வதேச அளவிலான 40-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் இந்திய அரசின் தரக் கட்டுப்பாட்டு ஆய்வுகளும் உறுதிப்படுத்தி உள்ளது. இதனால் அச்சமின்றி பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தலாம்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் 7 நாட்களும், வரும்முன் காக்க விரும்புகிறவர்கள் 3 நாட்களுக்கும் நிலவேம்பு குடிநீர் அருந்தினால் போதும். நிலவேம்பு குடிநீர் அருந்துவதுடன் காய்ச்சல் வந்தவருக்கு பூரண ஓய்வும் வேண்டும்.

- க.இளஞ்சேரன்