மனதை அழுத்தும் சுமை



வேலைப்பளு மனதை எவ்வாறு பாதிக்கிறது, அதை எப்படி எதிர்கொள்வது என்று உளவியல் மருத்துவர் கவிதாவிடம் கேட்டோம்...

‘‘உலக அளவில் 30 கோடி பேரும், இந்தியாவில் மட்டும் 5 கோடி மக்கள் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையத்தின் புள்ளிவிவரப்படி தெரியவந்துள்ளது.

 ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒரு தற்கொலை நிகழ்கிறது. கூடுதலாக, National Institute of Mental Health and Neurosciences (NIMHANS), நிறுவனம் 2015-16 ஆண்டில் மேற்கொண்ட தேசிய மனநல சுகாதார ஆய்வில் 7 கோடி பேருக்கு மேல், மனநோயுடன் வாழ்வதாக தெரிவித்துள்ளது. இந்தியா மட்டும் அல்லாது வளர்ச்சியடைந்த பல நாடுகளில் இந்த மனச்சோர்வை ஒரு மருத்துவ நோயாகக்கூட பார்க்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை.

இதன் பின்னணியில் வேலைப்பளு முக்கிய இடத்தில் இருக்கிறது. 60 சதவீதம் பேர் பணிச்சுமையின் காரணமாக மனச்சோர்வு, கவலை மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இறப்புக்கு காரணமாகக் கூடிய நோய்களான மாரடைப்பு, புற்றுநோய் வரிசையில், எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மனநோய் முந்திக் கொண்டிருப்பதன் பின்னணியிலும் பணிச்சுமை பெரிய காரணியாக இருக்கிறது.

நேரம் காலம் இல்லாமல் உழைப்பினால் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், தொழிலுக்கும் இடையே சமநிலையை கடைபிடிக்க முடியாமல் பலர் தவிக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் சரியான நேரத்துக்கு உண்ண முடியாமல், உறங்க முடியாமல் உடல்ரீதியான இன்னல்களுக்கும் பலர் ஆளாகின்றனர்.இதுபோல் ஒருவர் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதை அவர்களிடம் தெரியும் மாற்றங்கள் மூலம் நான்கு நிலைகளில் புரிந்து கொள்ளலாம்.

தேவையில்லாமல் கோபம், எரிச்சல் அடைவது போன்ற உணர்ச்சி மாறுதல்கள்,வேலையைத் தள்ளிப்போடுதல், அடிக்கடி தவறுகள் செய்வது, அடிக்கடி பணிக்கு தாமதமாக வருவது போன்ற நடவடிக்கை மாற்றங்கள், தன்னம்பிக்கையற்ற வார்த்தைகள், போதை பழக்கத்துக்கு அடிமையாதல், தனிமை, முக்கிய விழாக்களில் பங்கு கொள்ளாமல் இருப்பது, பசியின்மை போன்ற நடத்தை மாற்றங்கள் போன்றவற்றை அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம்.

மற்ற நோய்களைப் போலவே மனரீதியான பாதிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். கடுமையான பணிகளுக்கு நடுவிலும் சிறுசிறு இடைவெளி எடுத்துக் கொள்வது, ஓய்வெடுப்பது, நேரத்தை நிர்வகிப்பது, சக பணியாளர்களுடன்/உறவுகளுடன் இணக்கமான தொடர்பில் இருப்பது போன்றவை மனச்சோர்வை போக்கும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, தியானம் போன்ற வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்ளும்போது, பணிச்சுமையால் ஏற்படும் மனச்சோர்வை போக்கி, பணியிடங்களில் உங்களுடைய முழுத்திறனை வெளிப்படுத்த முடியும்.

குடும்ப உறுப்பினர் ஒருவர் தனக்கு மனது சரியில்லை என்று சொல்லும்போது வேலையை தவிர்ப்பதாக நினைத்து சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடம்பு சரியி–்ல்லாதபோது கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மனநிலைக்கும் கொடுக்க வேண்டும். குடும்பம் மட்டுமல்ல அவரைச் சார்ந்த சமூகத்தினரும் ஆதரவாக இருப்பதும் அவசியம்!’’

- கௌதம்