நீரிழிவுக்கான பரிசோதனைகள்



டயாபட்டீஸ் ஸ்பெஷல்

நீரிழிவை உறுதிப்படுத்துவதற்கான சில பரிசோதனைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்...

சிறுநீரகப் பரிசோதனை 

வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு  சோதனை செய்யப்படும். இது நோயின் தாக்கத்தைப்  பொறுத்து `ப்ளஸ்’ (+) முதல் நான்கு (++++) ப்ளஸ்  வரை அளவிடப்படும்.

ரத்தப் பரிசோதனை முறைகள்ரேண்டம் ரத்த சர்க்கரை பரிசோதனை (Random Blood Sugar)இந்த பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இதில் ரத்த சர்க்கரை அளவு 120 முதல் 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால், சரியான அளவு. 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால், அவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்று அர்த்தம்.

முதன்முறையாக இதை செய்து கொள்பவர்களுக்கு இந்த அளவுகள் 141 முதல் 200 வரை இருந்தால், வெறும் வயிற்றிலும், சாப்பிட்ட பிறகும் ரத்த சர்க்கரை பரிசோதனைகளை ஒரே நாளில் செய்துகொள்ள வேண்டும்.

வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை பரிசோதனை (Fasting Blood Sugar)

இரவில் உணவு சாப்பிட்ட பிறகு, சரியாக 8 மணி நேரம் கழித்து வெறும் வயிற்றில் இதை செய்ய வேண்டும்.இதில் ரத்த சர்க்கரை அளவு 80 முதல் 100 மி.கி./டெ.லி. என்று இருந்தால் அது சரியான அளவுதான். அதுவே 101 முதல் 125 மி.கி./டெ.லி. என்று இருந்தால், அது நீரிழிவு நோய் வருவதற்கு முந்தைய நிலை. இந்த அளவு 126 மி.கி./டெ.லி. அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர் ஒரு நீரிழிவு நோயாளி என்பது நிச்சயம்.

சாப்பிட்ட பின் ரத்த சர்க்கரை பரிசோதனை (Post Prandial Blood Sugar)

காலையில் வழக்கமான அளவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, 2 மணி நேரம் கழித்து இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனை செய்யும்போது நீரிழிவு உள்ளவர்கள், வழக்கமாக சாப்பிடும் நீரிழிவு நோய் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள், வழக்கமான அளவில் இன்சுலினையும் போட்டுக் கொள்ளவேண்டும்.

அதன்பிறகே இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். இதில் ரத்த  சர்க்கரை 111 முதல் 140 மி.கி./டெ.லி. என்று இருந்தால் சரியான அளவு.இந்த அளவு 141 முதல் 199 மி.கி./டெ.லி. என்று இருந்தால், Pre diabates. 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால் நீரிழிவு உள்ளதாகப் புரிந்துகொள்ளலாம்.

- என்.ஹரிஹரன்