விஸ்வரூபமெடுக்கும் குழந்தையின்மை பிரச்னை:அழியும் உயிரினமாகிறதா மனித இனம்?!



குழந்தையின்மை என்பது எங்கேயோ, யாருக்கோ நடந்துகொண்டிருக்கும் ஒரு பிரச்னை என்பது மாறி, இப்போது வேறுவிதமாக விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. ‘ஆண்களின் விந்தணு எண்ணிக்கை வெகுவேகமாகக் குறைந்து வருவதால், மனித இனமே விரைவில் அழிந்து போகும் அபாயம் உள்ளது’ என இஸ்ரேலைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹகாய் லெவின் எச்சரித்திருக்கிறார். ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவது குறித்து கடந்த 1973-ம் ஆண்டு முதல் இன்றுவரை 185 ஆராய்ச்சிகள் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளன.

‘மனித சமுதாயம் தற்போது பின்பற்றிவரும் வாழ்க்கை நடைமுறைகளை சரியான வகையில் மாற்றிக் கொள்ளாவிட்டால், மனித இனத்தின்  எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். மேற்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆண்களின் விந்தணு எண்ணிக்கை 59.3 சதவீதம் என்கிற அளவுக்குப் பாதிக்கும் மேலாகக் குறையும் அளவு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இதே வேகம் தொடர்ந்தால் டைனோசர் என்கிற இனம் அழிந்ததுபோல மனித இனமும் அழிந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று திகில் கிளப்புகிறார் லெவின். 

இந்தியாவிலும் மொத்த மக்கள் தொகையில் 14 சதவீதம் வரை ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும்,  இந்திய நகர்ப்புறங்களில் 6-ல் ஒரு தம்பதியினர் கருவுறுதல் தொடர்பான சிக்கலில் இருப்பதாகவும் Indian Society for Assisted Reproduction-ன் தலைவர் டாக்டர் துரு ஷா கூறியிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 30 சதவீதம் மலட்டுத்தன்மை அதிகரித்துள்ளதாகவும், இதில் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக ஒரு கோடி நோயாளிகள் சேர்வதாகவும் ஆய்வுகள் கூறுவதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

குழந்தையின்மை என்பது எத்தனை சீரியஸாக கவனிக்க வேண்டிய பிரச்னை என்பதையும், வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை உடனடியாக செய்ய வேண்டியது எத்தனை அவசியம் என்பதையும் உலகுக்கு உணர்த்தியிருக்கிறது இந்த ஆய்வு. குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் கோபிநாத்திடம் இந்த ஆய்வுகள் பற்றிக் கேட்டோம்...‘‘குழந்தையின்மை என்பது அதிமுக்கியமான பிரச்னை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நம் நாட்டில் இந்த அபாய விகிதம் குறைவாகத்தான் உள்ளது. அளவுக்கதிகமான விழிப்புணர்வு காரணமாக, மலட்டுத்தன்மை அதிகரித்துள்ளதுபோல் ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்பெல்லாம் திருமணம் முடிந்து 10 வருடம் கூட குழந்தைக்காகக் காத்திருப்பார்கள். குழந்தை பிறக்க வேண்டும் என்று காசி, ராமேஸ்வரம் என புண்ணிய ஸ்தலங்களுக்கும் செல்வார்கள். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. திருமணம் முடிந்து ஓர் ஆண்டிலேயே குழந்தை பிறந்துவிட வேண்டும் என்று அவசரப்படுகிறார்கள். இல்லாவிட்டால்  உறவுக்காரர்கள், நண்பர்கள் என எல்லோருமே ‘என்னாச்சு’ என்று ஏதோ துக்கம் விசாரிப்பதுபோல கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். 

சமூகத்துக்குப் பதில் சொல்ல முடியாத இந்த பயம் காரணமாக, தம்பதிகளும் இரண்டாம் ஆண்டிலேயே சிகிச்சைக்காக மருத்துவர்களிடம் செல்கிறார்கள். சிகிச்சையிலும் பொறுமை காப்பதில்லை. இந்த மருத்துவரிடம் எந்த பலனும் இல்லை என்று மருத்துவரையும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால், தம்பதியருக்கு முதலில் கவுன்சிலிங் கொடுப்பதே இதில் முதல் சிகிச்சையாக இருக்கிறது. அதன் பின்னர்தான் உண்மையான சிகிச்சையையே ஆரம்பிக்க வேண்டும்.

குழந்தையின்மை பிரச்னையில் ஆணைப் பொறுத்தவரை விந்தணு உற்பத்தி இல்லாத நிலை அல்லது குறைவாக இருப்பது, விந்தணு வெளியேறுவதில் பிரச்னை போன்றவை மலட்டுத்தன்மைக்குக் காரணமாக இருக்கிறது. பெண்களிடம் கரு முட்டை உற்பத்திக் கோளாறுகள், கருப்பை சார்ந்த கோளாறுகள், கருக்குழாய் சேதம், நோய்தொற்று, கருப்பை திசு வளர்ச்சி, PCOD பிரச்னை மற்றும் இளவயது மெனோபாஸ் போன்றவை முக்கிய காரணமாகின்றன. உடல்பருமனும் தற்போது இந்த வரிசையில் இடம்பிடித்துள்ளது. குழந்தையின்மையில் பெண்களின் வயதுக்கு முக்கியப் பங்கு உண்டு. 30 வயது வரை கருமுட்டை உற்பத்தி அதிகமாக இருக்கும். 44 - 48 வயதில் ஒரு பெண்ணுக்கு மெனோபாஸ் ஏற்படப்போவதாக வைத்துக் கொண்டால், 37, 38 வயதிலேயே கருமுட்டை உற்பத்தி குறைய ஆரம்பித்துவிடும்’’ என்றவரிடம் அதற்கான சிகிச்சைகள் பற்றிக்கேட்டோம்... ‘‘குழந்தையின்மை பிரச்னை உறுதியானால், அதை எளிதாக சமாளிக்கும் அளவுக்கு இன்று எண்ணற்ற நவீன சிகிச்சை முறைகள் உருவாகி இருக்கின்றன. அதனால், குழந்தையின்மை என்பது ஒரு பிரச்னையே இல்லை என்று தைரியமாக சொல்லும் அளவுக்கு இன்று நவீன மருத்துவம் நமக்கு பக்கபலமாக இருக்கிறது.
 
ஆண்களுக்கான சிகிச்சையில் புகை, மது, போதை போன்ற பழக்கங்களிலிருந்து விடுபடுவதில் தொடங்கி வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க வேண்டும். அடுத்து, விந்தணு எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான மருந்துகள் கொடுக்கப்படும். இந்த மருந்துகள் கை கொடுக்காவிட்டால் IUI என்கிற Intra Uterine Insemination முறையைப் பின்பற்றலாம். இது ஆரோக்கியமான விந்தணுவை எடுத்து நேரடியாக கர்ப்பப்பையில் வைக்கும் முறை. அதேபோல், பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி அதிகரிப்பதற்கான மருந்துகள் பரிந்துரைக்கப்படும். கர்ப்பப்பையில் நீர்க்கட்டி(Polycystic ovary), கருக்குழாயில் ரத்தக்கட்டி இருப்பவர் களுக்கு அதற்கான சிகிச்சைக்குப் பின்னும் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் இருந்தால் IUI முறையைப் பின்பற்றலாம். நீர்க்கட்டிகளை மருந்து கொடுத்து கரைத்து இயற்கையிலேயே கருமுட்டை வெளியேறவும் செய்ய முடியும். IUI முறை உதவாத பட்சத்தில் கருவுற்ற முட்டைகளை கருவறைக்குள் வைக்கும் IVF முறை சிகிச்சையை முயற்சிக்கலாம். இந்த முறையும் வெற்றி அடையாத பட்சத்தில் ICSI முறையில் ஆரோக்கியமான ஒரு விந்தணுவை பெண்ணின் கருமுட்டையில் நேரடியாக செலுத்தி கர்ப்பம் தரிக்க வைக்கலாம்” என செயற்கைக் கருத்தரிப்பில் புகுந்துள்ள நவீன தொழில்நுட்பத்தை விளக்கி நம்பிக்கை அளிக்கிறார்.

-  உஷா நாராயணன், க.கதிரவன்

திருமணம் முடிந்து ஓர் ஆண்டிலேயே குழந்தை பிறந்துவிட வேண்டும் என்று அவசரப்படுகிறார்கள். இல்லாவிட்டால் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் துக்கம் விசாரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.