குழந்தைக்கு உணவு... தாய்க்கும் ஆரோக்கியம்!



உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 - 7

தாய்ப்பாலினால் உடல் ஆரோக்கியம் குழந்தைக்குக் கிடைப்பது மட்டும் அல்லாமல் தாயின் ஸ்பரிசம், அரவணைப்பு, பாசம் ஆகியவையும் குழந்தைக்கும் கிடைக்கின்றன. முக்கியமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் அம்மாவிடமிருந்து மிகுந்த பாதுகாப்பு உணர்வைப்
பெறுகின்றனர்.

‘‘பரிசுத்தம், ஆரோக்கியம், அன்பு போன்ற உன்னத அடையாளங்களின் முகவரி தாய்ப்பால். குழந்தையின் நலன் காக்கும் உணவுப்பொருள் என்பதைப் போலவே, தாயின் நலன் காக்கும் பணியையும் தாய்ப்பால் செய்கிறது’’ என்கிற மகப்பேறு மருத்துவர் வகிதா சுரேஷ், அதனால் இருவருக்கும் கிடைக்கும் அளப்பரிய பலன்கள் பற்றி இங்கே விவரிக்கிறார்.

தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உட்பட எல்லாவிதமான ஊட்டசத்துக்களும் கிடைக்கின்றன.

பாக்கெட் பாலில் உடல்நலனுக்குக் கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் ஏராளமாகக் கலக்கப்படுவதாகப் புகார்கள் அவ்வப்போது வருகின்றன. அதனால், எந்த கலப்படமும் அற்ற தாய்ப்பாலே குழந்தையின் நலன் காக்கும் முதன்மையான உணவுப் பொருள் என்று தைரியமாகச் சொல்லலாம்.

தாய்ப்பால் கொடுத்து வரும் பெண்களுக்கு ஹார்மோன் சீராக சுரப்பதால் மார்பகப் புற்றுநோய் அபாயம் ஏற்படுவதில்லை. ஆனால், தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 10 பெண்களில் 3 பேருக்கு இந்நோய் ஏற்படுவதற்கு தாய்ப்பால் தராததும் முக்கியக் காரணம் என்கின்றன பல்வேறு ஆய்வுகள்.

தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கும் பெண்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதன் காரணமாக வாந்தி, பேதி போன்ற சாதாரண பிரச்னைகளிலிருந்து தொற்று நோய்த்தாக்குதல் வரை பல நோய்க்குறைபாடுகளைப் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்காத பெண்கள் உடல்பருமனாலும் அவதிப்படுகிறார்கள்.

தாய்ப்பாலால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. கால்சியம், தாது மற்றும் இரும்பு சத்துக்கள் போதுமான அளவுக்குக் கிடைக்கின்றன. அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் கிடைக்காத நிலையில் இருக்கும் தாய்மார்களின் குழந்தைகள் கூட நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளாகாமல் வளர்வதற்குத் தாய்ப்பால் உதவுகிறது. 

எய்ட்ஸ், காசநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் தாய்ப்பால் புகட்டக் கூடாது. குறிப்பிட்ட சில நோய்களுக்கென்று மருந்து சாப்பிட்டு வரும் பெண்களும் பால் புகட்டக் கூடாது.

குழந்தைகளுக்குப் பால் புகட்டும் நேரத்தில் டி.வி பார்ப்பது, போனில் பேசுவது போன்ற பழக்கங்கள் நிறைய பெண்களிடம் இருக்கிறது. இவ்வாறு கவனச்சிதறலுடன் பால் புகட்டும்போது புட்டிப்பால் குடித்தது போன்ற உணர்வு குழந்தைக்கு ஏற்படும். தாய்க்குப் பால் சுரப்பு குறையவும் வாய்ப்பு உள்ளது.

அதனால், எந்தவித கவனச்சிதறலும் இல்லாமல் பால் தரும்போதுதான் அம்மாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டு குழந்தை பால் அருந்தும். குழந்தையிடம் பேசிக்கொண்டே பால் புகட்டுவது இன்னும் சிறந்த வழி!

- விஜயகுமார்