பச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை!



நம்பிக்கை

மருத்துவம் எந்த அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கு இன்னோர் உதாரணமாக சமீபத்தில் ஓர் அறுவை சிகிச்சை நடந்துமுடிந்திருக்கிறது.

பெங்களூருவைச் சார்ந்த அஜய் - சஞ்ஜனா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று சமீபத்தில் பிறந்தது. ஆனால், அந்த சந்தோஷத்தை அவர்களால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை.

காரணம், குழந்தையின் இடது கண்ணில் இருந்த கட்டி. மனம் உடைந்துபோயிருந்த தம்பதியினருக்கு நண்பர்கள் தைரியம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்து அந்த கட்டி இப்போது அகற்றப்பட்டுவிட்டது.

மிகவும் நுட்பமான இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்ட அனுபவம் பற்றி கண் அறுவை சிகிச்சை மருத்துவர் ரவீந்திர மோகனிடம் கேட்டோம்...

‘‘பிறந்து 28 நாட்களேயான ஒரு பெண் குழந்தையை கொண்டு வந்தனர். அந்த குழந்தைக்கு இடது கண்ணின் பின்னால் ஒரு பெரிய கட்டி இருந்தது. இதற்கு முன்பு பெங்களூரில் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அந்தக்கட்டியில் ஊசி செலுத்தி அதனுள்ளிருந்த நீரை வெளியே எடுத்து தற்காலிக நிவாரணம் அளித்திருந்தார்கள்.

கண்ணைச் சுற்றியுள்ள திசுக்களில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றாவிட்டால் கொஞ்சம்கொஞ்சமாக பெரிதாகி நிரந்தரமாக கண்பார்வையை இழக்கச் செய்துவிடக்கூடிய அபாயத்தை உணர்ந்தோம். பச்சிளம்குழந்தை என்பதால் அறுவை சிகிச்சை செய்வதில் சற்று குழப்பம் ஏற்பட்டது. அதன்பிறகு பிரத்யேகமாக Transconjuncti*al approach  எனப்படும் குறைவான ஊடுருவுதல் முறையைப் பின்பற்றி இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம்.

விழிப்பந்துக்கு அருகிலுள்ள திசுக்கள் மற்றும் கண் இமைகளின் உள் அடுக்கு வழியாக ஊடுருவி, பார்வை நரம்பை பாதிக்காதவாறு அந்தகட்டியை அறுவைசிகிச்சை மூலம் அகற்றினோம். அந்த குழந்தையின் விழிப்பந்துகள், விழித்திரை உறுப்புகள் மிகவும் குட்டியாகவும், கட்டி விழிப்பந்துக்கு பின்னால் மிக ஆழத்தில் இருந்தது. பார்வை நரம்புகள் அனைத்தும் ஒன்று சேரும் இடமானதால், குழந்தையின் பார்வைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதவாறு அறுவை சிகிச்சை செய்வது மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்தது.

சுமார் இரண்டு மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சைக்காக, அனஸ்தீஸியா கொடுப்பதிலும் மிகவும் கவனமாக செயல்பட்டோம். இதில் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’’ என்கிறார்.

- என்.ஹரிஹரன்