ஓ.ஆர்.எஸ்ஸை பயன்படுத்துங்க மக்களே!



ஜூலை 29 ORS தினம்

குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்புகளால் ஏற்படுகிற நீரிழப்பைத் தடுக்க Oral Rehydration Solution என்ற உப்பு கரைசலை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் போன்ற அமைப்புகளும் இதுபற்றி தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. ஓ.ஆர்.எஸ். கரைசலுக்கு அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது?

* O.R.S என்பது வயிறு தொடர்பான கோளாறுகளைக் குணப்படுத்தும் திறன் கொண்ட ஓர் உப்புக்கரைசல். இது மனித உடலில் இருந்து அளவுக்கு அதிகமாக வெளியேறும் நீர்ச்சத்தைக் கட்டுப்படுத்துகிறது. வயிறறுப்போக்கு, வாந்தி போன்றவற்றால் குழந்தைகள் அவதிப்படும் இக்கட்டான நிலையை ORS கரைசல் கட்டுப்படுத்தும்.

* நீர்ச்சத்து குறைவதால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், இந்திய விஞ்ஞானிகளுள் முக்கியமானவராகக் கருதப்படும் டாக்டர் திலீப் மகாலனாபிஸ் பணிகளை நினைவுப்படுத்தும் வகையில் ORS தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* ORS கரைசலில் உப்பு, சர்க்கரை மற்றும் தண்ணீரின் அளவு சரிசமமான விகிதத்தில் இருக்க வேண்டும். அதாவது, ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீஸ்பூன் சர்க்கரை, கால் டீஸ்பூன் உப்பு என்பது சரியான அளவு.

* ORS கரைசல் கொடுக்க வேண்டியிருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கக் கூடாது.

* குழந்தைகளுக்கு ORS கரைசல் கொடுக்கும்போது அதன் அளவில் கவனமாக இருப்பது முக்கியம். அதனால், குழந்தைகள் நல மருத்துவர் ஆலோசனைப்படி கொடுப்பதே சரியானது.

* ஓ.ஆர்.எஸ் கரைசல் குழந்தைகளுக்கானது மட்டுமே அல்ல; பெரியவர்களுக்கும்தான். 6 மாதக்குழந்தை முதல் எந்த வயது வரைவேண்டுமானாலும் ஓ.ஆர்.எஸ் கரைசல் அருந்தி பயன்பெறலாம்.

- விஜயகுமார்