கூந்தலின் நிறம் வேறுபடுவது ஏன்?



தெரியுமா?

ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒரு பிரத்யேக முக அமைப்பு இருப்பதைப் போலவே, ஒவ்வொரு நாட்டினரின் தலைமுடி நிறத்திலும் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. இது எதனால் தெரியுமா?

நமது தோலில் சுரக்கும் மெலனின்(Melanin) எனும் நிறமியே, தோலின் நிறம் முதல் தலைமுடியின் நிறம் வரை சகலத்தையும் தீர்மானிக்கிறது. இன்னும் கொஞ்சம் நுட்பமாகச் சொன்னால் தலையில் மயிர்க்கால் பகுதியில், Pheomelanin மற்றும் Eumelanin எனும் இரண்டு வகை மெலனின் நிறமிகள் சுரக்கின்றன.

பழுப்பு நிறத்திலிருந்து கருமை நிறம் வரை பல்வேறு நிறங்களை Eumelanin செறிவு ஏற்படுத்தும். தங்க நிறம், செம்பட்டை நிறத்தை Pheomelanin செறிவு ஏற்படுத்தும். இதுபோல், இந்த இரண்டு மெலனின்களின் விகித செறிவே பல்வேறு தலைமுடி நிறங்களை உண்டாக்குகிறது. இந்த நிறமிகள் செறிவு வெகுவாகக் குறையும்போது, நரை விழுதல் ஏற்பட்டு விடுகிறது.

இதுபோல் குறிப்பிட்ட பகுதியில் வாழ்பவர்களின் தலைமுடி நிற மரபணுக்கள் கூடுதல் விகிதத்தில் இருப்பதால், தலைமுடியின் நிறம் நாட்டுக்கு நாடு வேறுபடுவதாகக் கருதுகிறோம்.

இதில் முரண்பாடாக, ஐரோப்பாவில் கருப்பு தலைமுடி கொண்டவரும், இந்தியாவில் செம்பட்டை தலைமுடி உள்ளவரும் உண்டு. முக்கியமாக, இந்த கூந்தலின் நிறமாற்றங்கள் என்பது மரபணுக்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் மறக்கக் கூடாது. இதைப் பற்றி இன்னும் தீவிரமான ஆராய்ச்சியிலும் உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

- கௌதம்