தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமா?



கூந்தல்

எண்ணெய் தேய்ப்பதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்றும், எண்ணெய் தேய்ப்பது கூந்தல் வளர்ச்சிக்கு நல்லது என்றும் மாறுபட்ட கருத்துகள் உண்டு. இந்தக் குழப்பமெல்லாம் தேவையே இல்லை. எண்ணெய் தேய்ப்பது அவசியமே என்பதற்கான காரணங்களை அடுக்குகிறார் சருமநல மருத்துவரான ருக்மணி.

* முடி உலர்வதைத் தவிர்த்து, பாதுகாப்பு கொடுத்து முடியை பலப்படுத்துகிறது எண்ணெய்.

* தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டு இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பு இருந்த மொஹஞ்சதாரோ நாகரி கம் தொட்டு தலைக்கும், உடம்புக்கும் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இருந்ததற்கான வரலாறு உள்ளது.

* அன்றைய பெண்கள் கடுகு, பீலு எண்ணெய் தேய்த்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பொதுவாக எல்லோரும் பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகும். இரண்டு எண்ணெய்களுமே தலைக்கு தேய்ப்பதற்கு சிறந்தவை என்பது நாம் பெருமைகொள்ளத்தக்க ஒன்று.

* நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்களிலும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நல்லெண்ணெயில் உள்ள வைட்டமின் E முடி சிதைவைத் தடுக்கிறது.

*  முடி செம்பட்டையாக உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்தால் செம்பட்டை குறைய வாய்ப்பு உள்ளது. தலை உலர்ந்து பொடுகு
உள்ளவர்களுக்கு எண்ணெய் தேய்த்தால் அரிப்பு குறையும்.

* குளிப்பதற்கு முன் எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை வாரம் ஒரு முறையும், குளித்த பிறகு எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை அன்றாடமும் கடைபிடிக்கலாம்.

* தலை முழுக்க எண்ணெய் படும்படி மட்டும் தேய்த்தால் போதும்; நனையும் அளவுக்கு அதிகம் தேய்க்க தேவையில்லை.

* எண்ணெய் ஒவ்வாமை உள்ளவர்களும் தலையில் இயற்கையாக அதிக எண்ணெய் உள்ளவர்களும், எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்க்கலாம்.

* இயற்கையாக கிடைக்கக்கூடிய நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினாலே போதும். ஆலிவ் எண்ணெய் மற்றும் வெளிநாட்டு எண்ணெய்களை பயன்படுத்துவது தேவையில்லை.

* செயற்கை ஹேர் ஆயில்களை மருத்துவர்களின் ஆலோசனைப்படி மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். விளம்பரத்தை பார்த்து வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

- க.இளஞ்சேரன்