டேஸ்ட்டி டேஞ்சர்...



தேவை அதிக கவனம்

‘சப்பாத்தி, ப்ரெட், சாண்ட்விச் போன்றவற்றுக்கு சுவையான துணையாக இருக்கும் சாக்லேட் ஸ்ப்ரெட்டர் புற்றுநோயை வரவழைக்கக்கூடியது’ என்று எச்சரித்திருக்கிறது ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம். சில நாடுகளில் இந்த சாக்லெட் ஸ்ப்ரெட்டரைத் தடைசெய்தும் இருக்கிறார்கள். உணவியல் ஆலோசகர் சாந்தி காவேரியிடம் சாக்லெட் ஸ்ப்ரெட்டர் பற்றிக் கேட்டோம்...

‘‘சாக்லேட் ஸ்ப்ரெட்டரில் உள்ள பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகள் நம் இதய ஆரோக்கியத்துக்கு நல்லதுதான். கோகோ பவுடர் சேர்க்கப்படுவதால் உயர் ரத்த அழுத்தம் குறையவும் வாய்ப்பு உண்டு. இப்படி ஒன்றிரண்டு நன்மைகள் இருந்தாலும், பல பிரச்னைகள் இருப்பதை மறுக்க முடியாது.சாக்லெட் ஸ்ப்ரெட்டரின் பசைபோன்ற தன்மைக்காகவும், நீண்டநாள் உபயோகத்துக்காகவும் சில தாவர எண்ணெய்கள் சேர்க்கப்படுகின்றன.

குறிப்பாக, அதில் சேர்க்கப்படும் பாம் ஆயிலின் நிறம் மற்றும் அதன் வாசனையை நீக்குவதற்காக 200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சுத்திகரிக்கிறார்கள். இவ்வாறு உயர் வெப்பத்தில் சுத்திகரிக்கும்போது Glycidyl Fatty Acid esters என்ற வேதிப்பொருள் அதிகமாகும்.

உணவு செரிக்கும்போது இந்த Glycidyl Fatty Acid esters உடைந்து Glycidol என்னும் அமிலத்தை வெளிப்படுத்தும். இந்த கிளைசிடால் உடலினுள் புற்றுநோய் கட்டிகளை உருவாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். அதேபோல் பாமாயிலினால் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவதோடு, உடலின் பல்வேறு திசுக்களில் Metastasis என்னும் புற்றுநோய் செல்கள் பரவலாகும் அபாயமும் உண்டு. அதனால், வீட்டிலேயே பழங்களைக் கொண்டு ஜாம், ஜெல்லி போன்றவற்றைத் தயாரித்து உபயோகப்படுத்துவதே பாதுகாப்பானது’’ என அறிவுறுத்துகிறார்.

- இந்துமதி