செல்லாக்குட்டி
Pet Doctor
‘செல்லப்பிராணி வளர்ப்பு என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. மனநலம், உடல்நலம், சமூகநலம் என மூன்றையுமே காக்க அது அழகான ஒரு வழி’ என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்கள்.
ஆராய்ச்சியாளர்களும், உளவிளாளர்களும் கூறி இருப்பதைக் கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம். மனிதனிடம் இயல்பாக உள்ள அன்பு, பாசம், கருணை போன்ற நல்ல குணங்களை வளர்க்க செல்லப்பிராணிகளின் பழக்கம் பெரிய தூண்டுகோலாக அமைகிறது. உதாரணத்துக்கு ஒரு நாய்க்குட்டி வாங்கி வந்ததும், அதன் கழுத்தில் கட்ட ஒரு பெல்ட் வாங்க வேண்டும்...
அதை வெளியே கூட்டிச்செல்ல ஒரு செயின் வாங்க வேண்டும்... அதற்கு தண்ணீர், சாப்பாடு வைக்க ஒரு பாத்திரம் வாங்க வேண்டும்... இப்படி நம்மை அறியாமல் நம் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு பொறுப்புணர்வு வளர்கிறது. பொம்மைகளைவிட ‘உயிருள்ள ஒரு ஜீவனை நான் வளர்க்கிறேன்’ என்பதில் குழந்தைகளுக்கும் சந்தோஷம் அதிகம்.
செல்லப் பிராணிகள் வளர்க்கும் பழக்கம், குழந்தைகளின் நேர்மறையான வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. செல்லப்பிராணியுடன் நேரம் செலவழிப்பது மிகப்பெரிய மன அழுத்த நிவாரணியாக இருக்கிறது. செல்லப்பிராணியிடம் பேசும்போதும், அதனுடன் விளையாடும்போதும் நமக்கு ஆறுதல் கிடைக்கிறது. மற்ற சொந்தங்களைப்போல அல்லாமல் செல்லப் பிராணிகள் நம்மிடம் எந்த வேறுபாடும், எதிர்பார்ப்பும் இன்றி அன்பு காட்டு–்பவை. பிராணிகளின் மனம் அதிகச் சிக்கல் இல்லாதது. அதற்குப் பசித்தால் சாப்பிடும்; அன்பாக இருந்தால் விளையாடும். ஆனால், மனிதர்கள் வேறு வேறு எண்ண அலைகளும், உணர்ச்சி நிலைகளும் கொண்டவர்களாக மாறிக்கொண்டே இருப்பவர்கள்.
மேலாளரிடம் கோபப்பட்டு வீட்டுக்குத் திரும்புகிறார் ஒருவர். வீட்டுக்கு வந்ததும் தன் காலணியைக் கழற்றி வீசுவதும், செல்போனைத் தூக்கிப் போடுவதுமாக இருக்கிறார். அவரது மனநிலையை உணராத அவருடைய நாய் பாசத்துடன் வாலை ஆட்டிக்கொண்டு அவரிடம் வந்து உட்காருகிறது. அலுவலக வெறுப்பை அவர் நாயிடம் திரும்பத் திரும்பக் காட்டினாலும், அது அவரிடம் அன்போடு திரும்பி வந்துகொண்டே இருக்கிறது. அந்த நேரத்தில், ‘நாம்தான் கோபத்தில் இருக்கிறோம், அது நம்மிடம் மிகுந்த அன்போடு நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது’ என்பதை அவரால் மனதளவில் உணர முடியும்.
இதனால், கோபம் குறைந்து, இயல்புநிலைக்கு திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது.ஒருவரைப் பற்றி நாம் மற்றவரிடம் திட்டினாலோ, குறைகூறினாலோ அது நமக்கே வினையாக முடியும். ஆனால், நம் செல்லப்பிராணிகளிடம் அவர்களைப் பற்றித் திட்டித் தீர்க்கும்போது, அவர்களுக்கு மன அழுத்தம் குறையும். அதற்குப் புரியவில்லை என்றாலும், வாலை ஆட்டிக்கொண்டு நம் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொள்ளும். இதனால், மன அழுத்தம் குறையும். அதன் மூலமாக நமக்கு இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.
நாய் வளர்ப்பவர்கள் வீட்டில் உள்ளவர்களின் உடல், மனநலம் சீரான நிலையில் இருக்கும். குழந்தைகளைப் பொறுத்தவரை செல்லப்பிராணி வளர்ப்பதைச் சிறுவயதிலிருந்தே ஊக்குவிக்கும்போது, அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வு அதிகரிக்கும். சின்னக் குழந்தைகளிடம் பிராணி களைக் கொடுக்கும்போது, அவர்கள் அதை ஆசையோடும் அன்போடும் அக்கறையோடும் கவனிக்கக் கற்றுக்கொள்வார்கள். அதை எப்படிப் பராமரிப்பது, நேரம் ஒதுக்குவது, பொறுமையாகக் கையாள்வது, உணவு கொடுப்பது என்பதையும் தானாகக் கற்றுக்கொள்கிறார்கள்.
குறிப்பாக ADHD குழந்தைகள் அதீத துறுதுறுப்போடு இருப்பார்கள். அவர்கள் வேகத்துக்கு நாய்களால் மட்டுமே ஈடுகொடுக்க முடியும். நாய்கள் எவ்வளவு விளையாடினாலும் சோர்ந்து போகாது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை கள் யாரிடமும் எளிதில் பழக மாட்டார்கள். அவர்களுக்கு கண்டிப்பதோ, குறைகூறுவதோ பிடிக்காது. கண்களைப் பார்த்துப் பேச மாட்டார்கள். விலங்குகளுக்கு அதுபோன்ற விஷயங்கள் தேவை இல்லை என்பதால், அவற்றின் தோற்றம், அவை நடந்துகொள்ளும் விதம் அவர்களுக்குப் பிடித்துப்போய், அவற்றுடன் உற்சாகமாக விளையாடுவார்கள்.
செல்லப்பிராணிகளைப் பொறுத்தவரை மூட் அப்செட் என்பதே கிடையாது என்பதால், அக்குழந்தைகள் விளையாட நினைக்கும்போதெல்லாம் அவர்களுடன் சேர்ந்து விளையாடும். மேலும், வீட்டில் உள்ள வயதானவர்களுக்கு ஏற்படும் மிக மோசமான பிரச்னை தனிமை. செல்லப்பிராணிகள் அவர்களின் தனிமையைப் போக்குகின்றன. அவர்களைப் பாதுகாக்கின்றன.அதுமட்டுமா? உடற்பயிற்சி, செயல்களில் நேர்த்தி, மனநிறைவு, உதவும் குணம், சமூக இணக்கம், தேடல், தன்னம்பிக்கை டைம் மேனேஜ்மென்ட் இந்த அனைத்துப் பண்புகளையும் வளர்த்துக் கொள்ளலாம்.
எப்படி? செல்லப்பிராணிகள் காலையில், சூரியன் உதிக்கும் முன்பே எழுந்துவிடும். நம் வருகைக்காகக் காத்திருக்கும். அதற்குப் பசிக்குமே, உணவு தயாரிக்க வேண்டுமே என்ற எண்ணமும் நமக்குள் தன்னால் மேலோங்கி, நாமும் நேரத்துக்கு நம் வேலைகளைச் செய்யக் கற்றுக்கொள்வோம். நாய்க்கு விளையாட்டுக்காட்டுவது, அதனுடன் விளையாடுவது, கதவிடுக்கில் ஒளிந்துகொள்ளும் பூனையை துரத்தித் தேடிப் பிடிப்பது போன்ற செயல் பாடுகளால் குழந்தைகள் ஆரோக்கியமான உடல் இயக்கங்கள் கிடைக்கப் பெறுவார்கள். நாமும் டி.வி முன் சிலையாக அமர்ந்திருப்பது, ஸ்மார்ட்போன், ஐபேடில் தலை கவிழ்ந்துக் கிடப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம். காலை மற்றும் மாலை வேளைகளில் நாயை வாக்கிங் கூட்டிக்கொண்டு செல்பவர்களுக்கு இதய நோய்கள் வருவது குறையும்.
தன் ஷூ, சாக்ஸைக்கூட கழற்றியவுடன் முறையாக அதற்குரிய இடத்தில் வைக்காதவர்கள்கூட, செல்லப் பிராணி வளர்க்க ஆரம்பித்தவுடன் லவ் பேர்ட்ஸ் கூண்டைச் சுத்தம் செய்வது, மீன் தொட்டியைக் கழுவுவது, நாய்க்கு நேரத்துக்கு உணவு கொடுப்பது, கிளிக்கு தண்ணீர் வைப்பது என தங்கள் செயல்களில் நேர்த்தியடைவார்கள், பொறுப்புணர்வு கிடைக்கப் பெறுவார்கள்.
ஒரு தாய், தன் குழந்தை சமர்த்தாகச் சாப்பிட்டால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்வாரோ, அப்படியொரு மகிழ்ச்சியைத்தான் தங்கள் செல்லப்பிராணிகள் ஒவ்வொரு முறை வயிறு நிறையும்போதும் நாமும் உணர்வோம். வீடியோ விளையாட்டுகளில் வெற்றிக்களிப்பு கிடைக்கலாம். ஆனால், மனம் இப்படி மகிழ்ந்து மலரும் தருணங்கள் கிடைக்குமா என்ன?!
வாலாட்டும் நாய் முதல், கீச் கீச் எனப் பேசும் கிளி வரை ஒவ்வொரு பிராணியும் தன் நன்றியை மிக ரசனையாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்தும். தன் கால் நகங்களின் பிடிமானத்துக்கு ஏதுவாக தனக்காக கூட்டுக்குள் குறுக்காக ஒரு குச்சியை வைக்க ஏற்பாடு செய்து தந்தால், அதன் கூண்டின் அருகில் நாம்போய் நிற்கும்போதெல்லாம் நம்மை நோக்கி சிறகுகள் படபடக்க வந்து நிற்கும். அந்த நன்றிக்கு உரியவன் நான் என்று உணரும் நாம் செல்லப் பிராணியிடம் இன்னும் அக்கறை செலுத்த முற்படுவோம். மற்றவருக்கு என்ன தேவை என்று யோசித்துச் செய்யும் ஈரமும், உதவும் குணமும், தானாகவே தோன்றி நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும்.
இன்று வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் இளம்வயதினர் எத்தனைபேர் இயல்பாக பேசுகிறார்கள் என்பது கேள்விக்குறிதான். அதுவே, ‘இது என்ன முயல் வளர்க்குறீங்க?’ என்று விருந்தினர் கேட்கும்போது, ‘அது என் பொண்ணோட பெட்... பார்த்துப் பார்த்து வளர்க்குறா!’ என்று அறிமுகம் தந்து மகளை அழைக்கும்போது, தன் செல்லப் பிராணி குறித்த விருந்தினரின் பாராட்டைப் பெறவும், அதுகுறித்த தன் அனுபவங்களை அவருடன் பகிர்ந்துகொள்ளவும் மனதில் ஒரு ஆர்வம் எழும். பெட் அனிமல் வளர்ப்பவர்களுக்கிடையே இயல்பாகவே நட்பு மலரும். மற்றவர்களோடு இணக்கமாக பழக ஆரம்பிப்பார்கள்...ஹலோ எங்க கிளம்பிட்டீங்க? பெட் வாங்கவா?
மன அழுத்தத்துக்கு மாமருந்துஇந்தியாவில் 20 நபர்களில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய Bangalore national institute of mental health நடத்திய ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 2015-ம் ஆண்டைக்காட்டிலும் 2016-ம் ஆண்டு 14 சதவிகிதம் பேர் அதிகமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ‘செல்லப்பிராணிகள் வளர்ப்பதன் மூலம் மன அழுத்தங்களிலிருந்து விடுபடலாம்’ என்பதை ஆராய்ச்சி நடத்தியே நிரூபித்துள்ளனர்.‘செல்லப்பிராணிகளுடன் கொஞ்சி விளையாடும்போது அவை நிபந்தனையற்ற அன்பைத் தருவதால் மனநோயாளிகளுக்கு உடனடியான மன அமைதி கிடைக்கிறது’ என்று ஆராய்ச்சிக்குழுவின் முதன்மை ஆய்வாளரான ஹெலன் ப்ரூக்ஸ் கூறியிருக்கிறார்.
- இந்துமதி படங்கள் : ஏ.டி.தமிழ்வாணன் மாடல்: சாய்
|