எக்ஸ்-ரே எடுத்து கொரோனாவை கண்டறியலாம்!: கோவை மாணவர்களின் புது முயற்சி…



* கண்டுபிடிப்பு

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை எளிதாகக் கண்டறிய உலக நாடுகள் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. கொரோனா வைரஸை துல்லியமாகக் கண்டறியப் பயன்படும் இசிஆர் பரிசோதனை முடிவுகள் வர மூன்று முதல் நான்கு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. மேலும் தமிழகத்தில் எந்தவிதமான அறிகுறியுமே இல்லாமல் 98% கொரோனா தொற்று ஏற்படுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் வசித்துவரும்  ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் 4-ஆம்  ஆண்டு பயிலும் மாணவர் உ.கிருபா சங்கரும் மற்றும் சில மாணவர்களும் இணைந்து, ஒருவரின் எக்ஸ்-ரேவை பகுப்பாய்வு செய்து சில விநாடிகளில் துல்லியமாக கண்டறியும் மென்பொருள் (Software) மற்றும் மித்ரன் மொபைல் செயலியை (Mobile App) கண்டுப்பிடித்துள்ளனர். தனது கண்டுபிடிப்பு பற்றி கிருபா சங்கர் கூறுவதைப் பார்ப்போம்…



‘‘இந்த கொரோனா பரிசோதனை முறையை ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) அதாவது, செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளேன். பொதுவாக நமக்கு ஒரு எக்ஸ்ரே ஸ்கேன் பண்ணி நோய்த் தொற்று இருக்கின்றதா? இல்லையா? அல்லது அது எந்த வகையைச் சேர்ந்த வைரஸ் தொற்று என்பதை துல்லியமாக கண்டறியும் வகையில் ஒரு மென்பொருளைக் கண்டுபிடித்துள்ளோம். ஒரு எக்ஸ்-ரேயை எடுத்து நேரடியாக மென்பொருளில் இணைத்தால் ஒன்றிரண்டு நொடிகளிலேயே அதனைக் கண்டுபிடித்துவிடும். இதற்கு ‘மித்ரன் கோவிட் 19’ எனப் பெயரிட்டுள்ளோம். எக்ஸ்-ரே கருவியுடன் இணைந்து இயங்கும் இந்த மென்பொருளானது உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா மட்டுமல்லாமல் நுரையீரல் தொடர்புடைய சார்ஸ், நிமோனியா பாக்டீரியா தொற்று உள்ளிட்ட நோய்களை கண்டறியவும் இந்த மென்பொருள் மூலம் வழி செய்யப்பட்டுள்ளது.



இந்த மென்பொருள் மூலம் அதிகப்படியான நபர்களுக்கு சில மணி நேரத்தில் நோய்த் தொற்று உள்ளதா என கண்டறியலாம். எக்ஸ்-ரே கருவி என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது. அரசு இந்த மென்பொருளை இலவசமாக எக்ஸ்-ரே கருவியுடன் இணைத்துக் கொடுத்துவிட்டால் பலருக்கு கொரோனா நோய்த் தொற்று இருக்கிறதா என கண்டறியலாம். மேலும், எத்தனை பேர் பரிசோதனை செய்துள்ளார்கள், அதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சீக்கிரமாக பரிசோதனை செய்ய எளிதாக உதவும்.ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தனியொருவனாக முயற்சியில் இறங்கினேன். ஓரளவுக்கு வெற்றி கண்டவுடன் அதற்கு உதவியாக எங்கள் கல்லூரியில் பயிலும் பல மாணவர்களையும் இணைத்துக்கொண்டு முழுமையான வடிவமைப்பு கொடுத்து மித்ரன் எனப் பெயரிட்டோம். சமூக விலகல், தனிமனித இடைவெளி, சுயபரிசோதனை, தனிப்பட்ட கண்காணிப்பு, மருத்துவ உதவி, ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைன் மூலம் பெரும் வசதி என பல்வேறு அம்சங்களை இந்த மென்பொருள் உள்ளடக்கியுள்ளது.

நாங்கள் கண்டறிந்துள்ள மென்பொருள் நோயின் தீவிரத்தை ஒருசில நொடிகளில் துல்லியமாகக் கண்டறிந்துவிடும். இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் இன்னும் சில பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு முழு வெற்றி கண்டால் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களை எளிதாக கண்டறியப் பயன்படுவதோடு தனிமைப்படுத்துதலுக்கும் பெரும் உதவியாக இருக்கும்’’ என்றவர் செல்போன் செயலியின் செயல்பாடுகள் பற்றியும் விவரித்தார். ‘‘இச்செயலியில் கொரோனாவைப் பற்றிய புதிய தகவலும், புள்ளிவிவரமும் மற்றும் தடுப்பு முறைகளையும் தெரிந்துகொள்ளலாம். மேலும் அருகிலுள்ள மருத்துவமனைகளையும், மருத்துவ உதவியையும் அறிந்துகொள்ளமுடியும். இந்த செயலி மூலம் மளிகை மற்றும் உணவுப் பொருட்களையும் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள முடியும்.

கொரோனா பாதிக்காமல் இருக்க சமூக விலகல், உடனடி  தொடர்பு சோதனை, தனிப்பட்ட கண்காணிப்பு, சமூக உதவிக்கான இணைப்பு (Online Shopping), மருத்துவ உதவி (மருத்துவமனை மற்றும் மருந்தகம்) தொடர்பு சேவை போன்ற அனைத்தையும் அறிந்துகொள்ளும் வகையில் மொபைல் செயலி (Mobile App) மற்றும் வலை போர்டல் (Web Portal) உருவாக்கப்பட்டுள்ளது.இதன்  மூலம் ஊரடங்கு காலத்தில், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையில் நமது மித்ரன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.



வட்டமலைப்பாளையத்திலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வரும் டாக்டர் அலமேலு பேசும்போது, ‘‘ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியானது ஆரம்ப காலத்திலிருந்தே புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் வடிவமைப்பு ஆகிய இரண்டு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறது. இந்த innovation, creativity ஆகிய இரண்டும் அனைத்து துறைகளுக்கும் மிக முக்கியமானதாகும். குறிப்பாக பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இது இன்றியமையாததாகும். எந்த அளவிற்கு மாணவர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்களோ.... ஒரு பிரச்னைக்கு தீர்வைக் கண்டுபிடிக்கிறார்களோ... அந்த அளவிற்கு அவர்கள் வெற்றியாளர்களாகத் திகழமுடியும்.

தற்போது இந்த கோவிட் 19 எனும் தொற்று உலக அளவில் பெரும் தொற்றாகப் பரவிக்கொண்டிருக்கும் சூழலில், உலக அளவிலான நாடுகள் அனைத்தும் எந்த வகையிலான, வித்தியாசமான தீர்வைக் கொண்டுவரமுடியும்... அதன் மூலம் உலக மக்களை இந்தத் தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதில் அதிக கவனம் செலுத்திவருகின்றன.இந்நிலையில் COIN (center for innovation - collaborative innovation) என்று சொல்லப்படும் கல்லூரியின் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறியும் அமைப்பினைச் சேர்ந்த மெக்கானிக்கல், ECE, IT துறைகளைச் சேர்ந்த  சுமார் 40 மாணவர்கள் கிருபா சங்கர் எனும் இறுதியாண்டு கணிப் பொறியியல் மாணவரின் தலைமையில் ஒன்றுகூடி, கோவிட் 19 தொற்றினை எக்ஸ்ரே மூலம் விரைவில் கண்டறிவதற்கான ஒரு தீர்வையும், மித்ரன் எனப்படும் அலைபேசி செயலி ஒன்றையும் இதற்கான தீர்வாகக் கண்டறிந்துள்ளனர். இவை இரண்டும் சேர்ந்து இந்தக் காலகட்டத்தில் கோவிட்19-க்கு ஒரு தீர்வாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் எங்கள் மாணவர்கள் விலகியிருந்தும் கூட அவரவர் வீட்டிலிருந்து இதுபோன்ற ஒரு கண்டுபிடிப்பைச் செய்திருப்பது எதையாவது சாதிக்கவேண்டும் என்ற ஆர்வமும் உற்சாகமும் இயல்பாகவே அந்த மாணவர்களுக்கு இருப்பதையே காட்டுகிறது.

இந்த மாணவர்கள் இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து சோதனைகள் செய்யவேண்டும். சோதனைகள் அனைத்தும் நிறைவுற்று ஒரு முழுமையான தீர்வாக இது வரும்போது... நமது மத்திய மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெற்றபிறகு இது ஒரு நல்ல முழுமையான தீர்வாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை’’ என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.
-திருவரசு