நில அதிர்வு அளவீட்டை கண்டறிந்த அமெரிக்கர்



பொது அறிவு

நிலநடுக்கம் (பூகம்பம், பூமியதிர்ச்சி) என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் (Plates) நகர்வதனால் ஏற்படும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வை நிலநடுக்கமானியினால் (seismometer) அளவிட பயன்படுத்தப்படும் (Richter Magnitude Scale) அளவை முறையே ரிக்டர் அளவு.இந்த ரிக்டர் அளவு முறையை அமெரிக்க நில அதிர்வு ஆய்வியலாளர் சார்லஸ் ரிக்டர்1935ம் ஆண்டில் முதன்முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்ததன் மூலம் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அவரின் பெயரைக் கொண்டே இந்த அளவு முறை ரிக்டர் அளவு என்று அழைக்கப்பட்டது.

இம்முறை தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். இதன் ஓர் அலகு அதற்கு முந்தைய அலகு அளவைவிடப் பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். நில அதிர்வுகள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரை மிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால், அவர் அளவுகளை இவ்வாறு வரையறுக்க வேண்டியிருந்தது. ஆகவே ரிக்டர் அளவில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10 × 10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.

ரிக்டர் அளவில் 2.0-க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவை மைக்ரோ எனப்படும். இவை சாதாரணமாகத் தொடர்ந்து நடைபெறும். 6.0-க்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ரிக்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நில அதிர்வு நிகழும் இடத்தைப் பொறுத்து ஒரே ரிக்டர் அளவைக்கு மாறுபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் நெருக்கியடித்து வாழும் நகரின் மையத்தில் நிகழும் நில அதிர்வு அளவிட முடியாத நாசத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால், அதே அளவு நில அதிர்வு ஒரு தட்டையான வனப்பிரதேசத்தில் ஏற்பட்டால் அங்குள்ள வனவிலங்குகளைச் சற்று சிதறி ஓடச்செய்வதைத் தவிர வேறு பாதிப்புகளை உண்டாக்காமலும் இருக்கமுடியும்.
 
இஸ்ரோவின் அடுத்தகட்ட திட்டங்கள்..!


சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சிவன், பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து, திட்டக்குழு உருவாக்கப்பட்டு, பணிகள் சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். சந்திராயன்-3 திட்டத்தில் நிலவில் தரையிறங்குவதற்கான லேண்டரும், நிலவின் தரையில் ஆய்வு செய்வதற்கான ரோவரும் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.

லேண்டர், ரோவர் உள்ளிட்டவற்றிற்கு 250 கோடி ரூபாயும், திட்டத்தை ஏவுவதற்கு 365 கோடி ரூபாயும் என மொத்தம் 615 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக சிவன் கூறியுள்ளார். சந்திராயன்-3 திட்டத்தை இந்த ஆண்டே ஏவுவதற்கு திட்டமிடுவதாகவும், இதற்காக 2020ஆம் ஆண்டு நவம்பரை இலக்காக நிர்ணயித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த கால அவகாசம் அடுத்த ஆண்டு வரை செல்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சிவன் கூறியிருக்கிறார்.

சந்திராயன்-2 திட்டத்தின் லேண்டர் தோல்வியடைந்தாலும், ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டுவருவதாகவும், அடுத்த 7 ஆண்டுகளுக்கு அது அறிவியல்பூர்வமான தகவல்களை வழங்கும் எனவும் அவர் விளக்கம் அளித்தார். விண்வெளிக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான வடிவமைப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாகவும், இந்தத் திட்டம் தொடர்பாக இந்த ஆண்டில் பல சோதனைகள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்கான 4 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ஜனவரி 3வது வாரத்தில் மாஸ்கோவில் பயிற்சியளிக்கப்பட உள்ளதாகவும், ஆளில்லாமல் ககன்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்திப் பார்க்கும் சோதனை இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சந்திராயன்-3, ககன்யான் போன்றவற்றால் பிற திட்டங்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும், நடப்பு ஆண்டில் 25 விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும் சிவன் தெரிவித்தார். இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவிருப்பதாகவும், இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியிருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.

உலகின் மிகச் சிறிய பறவை

பறவைகளிலேயே மிகச் சிறிய பறவை எது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆங்கிலத்தில் Bee Hummingbird என்று அழைக்கப்படும் 5 சென்டிமீட்டர் நீளமும் 2 கிராம் எடையும் கொண்ட ஒரு ஓசனிச்சிட்டு வகைதான் பறவைகளில் மிகச் சிறியது. வழக்கமாக கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை உலகின் மிகச் சிறிய பறவை என்பது மட்டுமில்லாமல், உலகில் மிகச் சிறிய முட்டையை இடும் பறவையாகும்.

அனைத்து ஓசனிச்சிட்டுகள் போன்றும் இந்த Bee Hummingbird முன்னே பறப்பது மட்டுமில்லாமல், மேலே, கீழே மற்றும் பின்னே பறக்கக்கூடியது. நின்ற நிலையிலேயே அந்தரத்தில் மிதக்கும் திறனையும் இந்தப் பறவை கொண்டதாகும். இதில் என்ன சிறப்பு இருக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். அப்படி மிதப்பதற்கு இந்தப் பறவை அதன் இறக்கைகளை ஒரே நொடியில் ஏறத்தாழ 80 தடவைகள் அடிக்க வேண்டும். இப்படி அதிவேகத்தில் அடிக்கும் இறக்கைகளை மனிதக் கண்களால் பார்க்கவே முடியாதுயென்றால் யோசித்துப் பாருங்கள். பொதுவாக இந்தப் பறவை ஒரு பூவிலிருந்து இன்னுமொரு பூவுக்கு மகரந்தத்தை எடுத்துச் செல்கிறது. ஆனால், அதன் சிறிய பரிமாணம் மற்றும் பறக்கும் திறன் காரணமாக ஒரு நாளில் மட்டுமே 1500 பூக்களைத் தொட்டுவிடுகின்றன.