இந்திய உணவுக் கழகத்தில் கிரேடு-2, கிரேடு-3 பணிகள்!



வாய்ப்பு

4,103 பேருக்கு வாய்ப்பு!


இந்திய உணவுக் கழக நிறுவனம் சுருக்கமாக எஃப்.சி.ஐ. (Food Corporation of India-FCI) எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் பல்வேறு மண்டலக் கிளைகளிலும் ஜூனியர் எஞ்சினியர், டைப்பிஸ்ட், அசிஸ்டன்ட் (கிரேடு-2, கிரேடு-3) மற்றும் ஸ்டெனோ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 4,103 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மண்டலம் வாரியாகத் தெற்கு மண்டலத்தில் 540 பணியிடங்களும், வடக்கு மண்டலத்தில் 1,999 பணியிடங்களும், கிழக்கு மண்டலத்தில் 538 பணியிடங்களும், மேற்கு மண்டலத்தில் 735 பணியிடங்களும், வடகிழக்கு மண்டலத்தில் 291 பணியிடங்களும் உள்ளன. ஒவ்வொரு பணிப்பிரிவிலும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பிலோ அல்லது இணைய தளத்திலோ பார்க்கலாம்.

கல்வித்தகுதி: ஜூனியர் எஞ்சினியர் பணிக்கு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன், குறிப்பிட்ட அளவில் சுருக்கெழுத்து தட்டச்சுத்திறன் பெற்றவர்கள் ஸ்டெனோ (கிரேடு 2) பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் இந்தித் தட்டச்சுத்திறன் பெற்றவர்கள் டைப்பிஸ்ட் பணிக்கும், இதர பட்டப்படிப்புகள் மற்றும் பி.இ., பி.டெக் படிப்புடன் கணினி அறிவு பெற்றவர்களுக்கு அசிஸ்டன்ட் கிரேடு 3 பணியில் வாய்ப்புகள் உள்ளன.

வயது வரம்பு: ஸ்டெனோ பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும், ஜூனியர் எஞ்சினியர் மற்றும் அசிஸ்டன்ட் கிரேடு-2 பணிக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும், அசிஸ்டன்ட் கிரேடு- 3 பணிக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1.1.2019ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 25.3.2019.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் இந்தக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.மேலும் விரிவான விவரங்களை www.fci.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் பார்க்கலாம்.
 

 -முத்து