மாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் கல்விக்கு குரல் கொடுத்த கல்லூரி மாணவி!



சாதனை

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் வறுமையில் வாடும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சரியான முறையில் கல்வியறிவு கிடைக்கவில்லை. அதனால், அவர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளாக்குகின்றனர். இந்நிலையைப் போக்க அவர்களுக்கு இந்தியாவில் எங்கு சென்றாலும் இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என மாதிரி ஐ.நா. சபை மாநாட்டில் பேசிவிட்டு வந்துள்ளார் கல்லூரி மாணவி பவித்ரா. அவர் நம்மோடு பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே…

‘‘மாதிரி ஐக்கிய நாடுகள் சபை Model United Nations (MUN) என்பது ஒரு சர்வதேச அளவில் பரவலாக நடத்தப்படும் ஒரு மாநாடு ஆகும். ஐக்கிய நாடுகள் சபை பற்றிய அறிவை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மேம்படுத்துவதற்கும் மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் பின்பற்றப்படும் சபை நடவடிக்கை முறைகளை அறிமுகம் செய்து அதற்கு மாணவர்களை தயார்படுத்தவுமே இவ்வாறான மாதிரி ஐக்கிய நாடுகள் சபைகள் நடத்தப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து 1945-ல் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்த பின்னர் முதலாவது மாதிரி ஐ.நா. சபை மாநாடு அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல நாடுகளில் இந்த மாதிரி ஐ.நா. சபை மாநாடு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளில் நடத்தப்பட்டது. மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாடு நடத்துவது என்பது இப்போது ஒரு வழக்கமாகவே மாறியுள்ளது’’ என்கிறார் பவித்ரா.

‘‘மாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் பங்குகொள்ளும் மாணவர்கள் உண்மையான ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை பிரதிநிதித்துவ
படுத்தும் பிரதிநிதிகளாக (Delegates) கலந்துகொள்வர். ஐ.நா.வில் பொதுச் சபை (General Assembly), பாதுகாப்பு சபை (Security Council), மனித உரிமைக்கான ஐ. நா பேரவை (UNHRC) மற்றும் உலக சுகாதார சபை (World Health Assembly) என எவ்வாறு பல குழுக்கள் இருக்கின்றனவோ அதே வகையான குழுக்கள் அடிப்படையில் வெவ்வேறு நாட்டுப் பிரதிநிதிகள் உலகில் உள்ள பொதுவான மற்றும் நாடுகளில் காணப்படும் பிரச்னைகள் பற்றி ஆராய்ந்து, விவாதித்து அவற்றுக்கான சிறந்த தீர்வை அங்கே முன்வைப்பர்.

கடந்த 2018ஆம் ஆண்டுக்கான மாதிரி ஐ.நா. சபை சர்வதேச மாநாடு சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் நான் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ‘செயின்ட் ஜோசப்’ஸ் எஞ்சினியரிங் கல்லூரியில் பி.டெக். பயோடெக்னாலஜி நான்காமாண்டு படித்தபோது மாதிரி ஐ.நா. சபை மாநாடு குறித்து உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். இதுவரை நடைபெற்று வரும் மாதிரி ஐ.நா. மாநாட்டில் நமது இந்தியாவின் சார்பில் யாரும் கலந்துகொண்டதில்லை.

நம் நாட்டிலிருந்து நாம் ஏன் கலந்துகொள்ளக் கூடாது என விண்ணப்பித்தேன். அதில் தேர்வும் ஆனேன். இதனை அறிந்த எங்கள் கல்லூரி சேர்மன் பாபு மனோகரன், அந்த மாநாட்டில் கலந்துகொள்ள விண்ணப்பம், பயணச் செலவு உள்ளிட்ட அனைத்தும் செய்து கொடுத்து பெரிதும் ஊக்கப்படுத்தினார். அத்துடன் துறை சார்ந்த பேராசிரியர்களும் உடன் பயிலும் மாணவர்களும் ஆலோசனை மற்றும் ஊக்கம் கொடுத்தனர்’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

மேலும் மாணவி பவித்ரா கூறும்போது, ‘‘சிங்கப்பூரில் நடைபெற்ற 2018 மாதிரி ஐ.நா. சபை மாநாட்டில் 93 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவரவர்களுக்கான தலைப்பு அறிமுகவுரைக்கு 95 விநாடிகளும் முழு அமர்வுக்கு 64 நிமிடங்களும் வழங்கப்பட்டது. அந்த நேரங்களைப் பயன்படுத்தி, நம் நாட்டில் உள்ள வறுமை மற்றும் அதனை பயன்படுத்தி தீவிரவாதத்தை உருவாக்கும் செயல் போன்றவற்றைக் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன்.

பொதுவாக எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களிடையே வறுமை அதிகமாக உள்ளது. அவர்களின் வறுமை நிலையைப் பயன்படுத்தி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை மூளைச்சலவை செய்து பணம் கொடுத்து தீவிரவாதிகளாக்கிவிடுகின்றனர். இந்த நிலையை மாற்றவேண்டுமானால் அந்த காஷ்மீர் எல்லைப் பகுதியில் வறுமையில் உள்ள மக்களுக்கு இந்தியாவில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு இலவசக் கல்வி கொடுக்க வேண்டும் என எடுத்துரைத்தேன். மத்திய அரசும் அதனை செயல்படுத்தி வருகிறது என்பதை முன்வைத்தேன்.

கல்வி அறிவு மற்றும் பொருளாதார நிறைவு பெற்றுவிட்டால் தீவிரவாதத்தை அழித்துவிடலாம் என்ற எனது கருத்துக்கு பன்னாட்டு பிரதிநிதிகளிடையே நல்ல வரவேற்பு இருந்ததை அறிய முடிந்தது. என்போன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் எடுத்துரைத்த கருத்துகளில் சிறப்பாக பேசிய 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு (2019) ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள மாதிரி ஐ.நா. சபை மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்புள்ளதாக அங்கேயே அறிவிக்கப்பட்டது. எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம். அவ்வாறு செல்லும்போது மீண்டும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், தீவிரவாத ஒழிப்பு ஆகிய கருத்துகளை எடுத்துரைப்பேன்.

நம் மாணவர்களிடையே இந்த மாதிரி ஐ.நா. சபை மாநாடுகளில் கலந்துகொண்டு நம் நாட்டு பிரச்னைகளை எடுத்துரைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு குறைவாக உள்ளது. எனவே, அவர்களுக்கு தெரியப்படுத்தவும், ஐ.நா. சபை நடவடிக்கைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும் நம் நாடுகளில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் மாதிரி ஐ.நா. சபை மாநாடுகள் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்தப்பட்டால் நம் நாட்டு பிரதிநிதிகளின் குரலும் அங்கே ஒலிக்கும். இது என் விருப்பம்’’ என முடித்தார் பவித்ரா.

  - தோ.திருத்துவராஜ்