உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் பட்டயப்படிப்பு!



அட்மிஷன்

தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை வெளிநாட்டவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்புகொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொள்ளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன போன்ற நோக்கங்களோடு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்நிறு
வனம் சென்னைத் தரமணியில் உள்ளது.

இங்கு தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டு பட்டயப்படிப்பு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து, நூலாக்கம் செய்யும் வகையில் இந்தப் பட்டயப்படிப்பு வழங்கப்பட்டுவருகிறது. மேலும், இந்தப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஓராண்டுக்கு 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.3,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

எழுத்துத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். (இதேபோல் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஓராண்டு பட்டயப்படிப்பும் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 20.12.2018).

இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ulakaththamizh.org  என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 10.12.2018.

கல்வித் தகுதி: இந்தப் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு எதுவும் கிடையாது.பயிற்சிக்கான கட்டணமாக ரூ.2,000 வசூலிக்கப்படும். வகுப்புகள் 2.1.2019 முதல் தொடங்கும்.

எழுத்துத் தேர்வு: இந்தப் படிப்புக்கான எழுத்துத் தேர்வு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு ‘இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-113’ என்ற முகவரியில் நேரில் தொடர்புகொள்ளலாம் அல்லது 044-22542992, 22540087 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

- முத்து