எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்சிங் ஆபீஸர் பணி!



வாய்ப்பு

755 பேருக்கு வாய்ப்பு!


புதுடெல்லியைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (All India Institutes of Medical Sciences  AIIMS) சுருக்கமாக ‘எய்ம்ஸ்’என்று அழைக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் மருத்துவமனை - கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. தற்போது பல்வேறு இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடங்களில் குறிப்பாக ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மையத்தில் அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டன்ட், சீனியர் நர்சிங் ஆபீஸர் மற்றும் நர்சிங் ஆபீஸர் பணிகளுக்கு 755 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ‘நர்சிங் ஆபீஸர்‘பணிக்கு மட்டும் 600 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சீனியர் நர்சிங் ஆபீஸர் பணிக்கு 127 இடங்களும், அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டன்ட் பணிக்கு 28 இடங்களும் உள்ளன.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் பற்றி பார்ப்போம்…

கல்வித்தகுதி:

அசிஸ்டன்ட்   நர்சிங் சூப்பிரண்டன்ட், சீனியர் நர்சிங் ஆபீஸர் பணி விண்ணப்பதாரர்கள் பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். நர்சிங் ஆபீஸர் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், டிப்ளமோ நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் தகுதியாகக் கேட்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அந்தந்தப் பணிக்கான வயது வரம்பு விவரங்களை இணையத்தில் பார்க்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டன்ட் பணிக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சீனியர் நர்சிங் ஆபீஸர், நர்சிங் ஆபீஸர் பணிக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.4.2018
மேலும் விரிவான விவரங்களை www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளப் பக்கத்தில் பார்க்கலாம்.

போரில் உயிர்நீத்த வீரர்களின் குழந்தைகளுக்கு சலுகைகள்!

போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அரசு ஏற்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.போரில் உயிர்நீத்த, ஊனமுற்ற, காணாமல்போன ராணுவ வீரர்களின் குழந்தைகளின் பள்ளிக்கல்வி முதல், தொழில்முறை படிப்பு வரையிலான கல்விக் கட்டணம், சீருடை, விடுதிச் செலவு முழுவதையும் மத்திய அரசு ஏற்பதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் போரில் உயிர்நீத்த, ராணுவத்தைச் சேர்ந்த, உயர் அதிகாரி முதல், ஜவான்கள் வரை அனைவருக்கும், இந்தச் சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைப்படி, போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திரக் கல்வி உதவித்தொகை, 10 ஆயிரம் ரூபாயாக 2017 ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. இதில், கல்விக் கட்டணம், சீருடை மற்றும் தங்குமிடச் செலவும் அடங்கும்.

ராணுவ அமைச்சகத்தின் இந்த உத்தரவால், ராணுவத்தினர் அதிருப்தி அடைந்தனர். ‘இந்த வரம்பை நீக்க வேண்டும்’ என அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வரம்பு நீக்கப்படுவதாக, ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.