ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வுக்கு தயாராகுங்க!



தகுதித் தேர்வு

அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கான, டெட் தகுதித் தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. அறிவித்துள்ளது.ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவி உள்பட, 3,030 காலியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில், 1,058 இடங்களுக்கு, டி.ஆர்.பி. சார்பில், தேர்வு நடத்தப்பட்டது.

இதில் முறைகேடு புகார்கள் எழுந்ததால், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின், முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து டி.ஆர்.பி.,யின் புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, எட்டுப் பேரை கைது செய்தனர்.
இதில், ஐந்துபேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில், கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வு பட்டியல் குறித்த ஆண்டு அறிக்கையை, டி.ஆர்.பி., சமீபத்தில் அறிவித்தது. அதில் தேர்வுகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மே மாதம் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டில் நடத்தப்படும், தேர்வு முடிவுகள் செப்டம்பரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.எட். பட்டதாரிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கான டெட் தேர்வு ஜூலையில் அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 6, 7ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள் நவம்பரில் வெளியாகும். ஆசிரியர் பணிக்கு, 13 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான டெட் தேர்வில் 4 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதில், தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த ஆண்டில் நடத்தப்படும் புதிய பணி நியமனங்களில், ஆசிரியர் வேலை கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதவி: நாள் வேளாண் பயிற்றுனர்   
காலியிடம்: 25
தேர்வு நாள்: ஏப்ரல், ஜூலை, 14    
தேர்வு முடிவு: ஆகஸ்ட்
பதவி: பாலிடெக்னிக் விரிவுரையாளர்
காலியிடம்: 1,065
தேர்வு நாள்: மே,  ஆகஸ்ட், 4
தேர்வு முடிவு: செப்டம்பர்
பதவி: கலைக் கல்லுாரி உதவிப் பேராசிரியர்
காலியிடம்: 1,883
தேர்வு நாள்: மே,  ஜூன், 2ம் வாரம்
சான்றிதழ் ஆய்வு: ஜூலை
பதவி: உதவி தொடக்கக் கல்வி அதிகாரி
காலியிடம்: 57
தேர்வு நாள்: ஜூன், செப்டம்பர், 15
தேர்வு முடிவு: அக்டோபர்,
‘டெட்’ என்ற ஆசிரியர் தகுதித் தேர்வு
தேர்வு நாள்: ஜூலை, அக்டோபர் 6, 7
தேர்வு முடிவு: நவம்பர்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதித் தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்ப விளக்கவுரை, விண்ணப்பம் வழங்கப்படும் மையங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்
படும் இடங்கள் பற்றிய விவரங்களை
http://www.trb.tn.nic.in என்ற
இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு முறை

ஆசிரியர் தகுதித் தேர்வு மூன்று பிரிவுகளில் நடைபெறும். ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் (D.T.Ed) படித்தவர்கள் தாள் ஒன்றினை எழுத வேண்டும்.கலைப்பட்டதாரி ஆசிரியர்கள் (B.A. + B.Ed.) மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் (B.Sc. + B.Ed) தாள் இரண்டு எழுத வேண்டும்.

மூன்று பிரிவுகளுக்கான தாள்களுமே 150 கேள்விகள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். தேர்ச்சி பெறுவதற்குத் தற்போதுள்ள விதிமுறைப்படி பொதுப்பிரிவினர் 90 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

 இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இந்தத் தகுதி மதிப்பெண்களில் இருந்து 5 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 82 மதிப்பெண்கள் பெற்றால் போதும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

முதல் தாள் 5 பிரிவுகள் கொண்டதாக இருக்கும்
தமிழ் - 30 மதிப்பெண்கள்
ஆங்கிலம் - 30 மதிப்பெண்கள்
குழந்தை வளர்ப்பு உளவியல்  30 மதிப்பெண்கள்
கணிதம் - 30 மதிப்பெண்கள்
சூழ்நிலையியல்/அறிவியல்  30 மதிப்பெண்கள்
ஆக மொத்தம் = 150 மதிப்பெண்கள்
இரண்டாம் தாள் கலைப் பிரிவு, நான்கு  பிரிவுகள் கொண்டதாக இருக்கும்
தமிழ் - 30 மதிப்பெண்கள்
ஆங்கிலம் - 30 மதிப்பெண்கள்
குழந்தை வளர்ப்பு உளவியல்  30 மதிப்பெண்கள்
சமூக அறிவியல் - 60 மதிப்பெண்கள்
ஆக மொத்தம் = 150 மதிப்பெண்கள்
இரண்டாம் தாள் அறிவியல் பிரிவு, நான்கு பிரிவுகள் கொண்டதாக இருக்கும்
தமிழ் - 30 மதிப்பெண்கள்
ஆங்கிலம் - 30 மதிப்பெண்கள்
குழந்தை வளர்ப்பு உளவியல்  30 மதிப்பெண்கள்
கணிதம் மற்றும் அறிவியல்  60 மதிப்பெண்கள்
ஆக மொத்தம் = 150 மதிப்பெண்கள்

 வெறுமனே ‘ஜஸ்ட் பாஸ்’என்பது வேலை பெறுவதற்கு உதவி செய்யாது என்பதைத் தேர்வர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு வேலை வாய்ப்பு பெறுவதற்கு ‘வெயிட்டேஜ்’முறையைத் தமிழக அரசு
பின்பற்றுகிறது.

முதல் தாளில் வெற்றி பெற்று, இடைநிலை ஆசிரியராக விரும்புபவர்களுக்கு, அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 15 சதவீதமும், பட்டயப் படிப்பு மதிப்பெண்களில் இருந்து 25 சதவீதமும், தகுதித் தேர்வு மதிப்பெண்களில் இருந்து 60 சதவீதமும் ‘வெயிட்டேஜ்’முறையில் மதிப்பெண்களின்படி வேலைக்கான தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்படும்.

இரண்டாம் தாளில் வெற்றி பெற்று பட்டதாரி ஆசிரியராக விரும்புபவர்களுக்கு அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 10 சதவீதமும், டிகிரி மதிப்பெண்களில் இருந்து 15 சதவீதமும், பி.எட்.மதிப்பெண்கள் 15 சதவீதமும், தகுதித் தேர்வு மதிப்பெண்களில் இருந்து 60 சதவீதமும் என்ற அளவில் ‘வெயிட்டேஜ்’முறையில் மதிப்பெண்களின்படி வேலைக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.

+2, டிகிரி மதிப்பெண்கள் எல்லாம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவை. இனிமேல் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. தகுதித் தேர்வில் நாம் எவ்வளவு அதிகம் மதிப்பெண்கள் பெறுகிறோம் என்பதை வைத்துத்தான் நம் வேலை வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

ஆக, ஆசிரியர் வேலை தேடுவோர் கையில் உள்ள ஒரே மந்திரக்கோல், தகுதித் தேர்வு மட்டுமே!. மொத்தமுள்ள 150 கேள்விகளுக்கு 130 மதிப்பெண்களையாவது தாண்டினால்தான் அரசு ஆசிரியர் பணியை நோக்கி நெருங்க முடியும். எனவே, தகுதித் தேர்வுக்குத் திட்டமிட்டு சரியாக, நிறைவாகத் தயாராக வேண்டும்.

மூன்று தாள்களுக்கும், தமிழ், ஆங்கிலம்,  உளவியல் ஆகியவை பொதுவானவை. தமிழ்ப் பாடத்திற்கு ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை முழுமையாகப் படிக்க வேண்டும். இலக்கண அறிவோடு, பாடப்பகுதியில் உள்ள முழுமையான இலக்கிய, உரைநடைச் செய்திகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆங்கிலப் பாடத்திற்கு அடிப்படை இலக்கணம் அவசியம். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களின் பயிற்சிகளை முறையாக ‘ஒர்க் அவுட்’செய்து பார்த்தால் போதும். குழந்தை வளர்ப்பு உளவியல் என்பது கொஞ்சம் புதிய பகுதி இதற்கான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. ஆனாலும் தேர்வர்கள், தங்களது. D.T.Ed. அல்லது B.Ed  படிப்பில் படித்திருப்பீர்கள்.

மனவெழுச்சி, சமூக உணர்வு, ஒப்பார் குழு, அறிவு வளர்ச்சி, உளவியல் முறைகள், தனி ஆள் ஆய்வு, பல்வேறு உளவியல் அறிஞர்களின் கொள்கைகள், வளர்ச்சி, முன்னேற்றம், முதிர்ச்சி, சிந்தனை மற்றும் மொழி, கவனித்தல், மனநோய்கள், வழிகாட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தல், மீத்திறக் குழந்தைகள், கற்றல் கோட்பாடுகள் ஆகியவை இந்தக் குழந்தை வளர்ப்பு உளவியலில் அடங்கியிருக்கும்.

முதல் தாளுக்கான சூழ்நிலையியல் பாடத்திற்கு அரசு வெளியிட்ட (பழைய) சூழ்நிலையியல் பாடங்களைப் படிக்க வேண்டும்.அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கு ஆறு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல், அறிவியல், கணிதப் பாடங்களை முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும்.

பாடங்களைப் படிக்கும்போது, ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் உள்ள பயிற்சி வினாக்களை மட்டும் படிக்காமல், பாடம் முழுவதையும் புரிந்துகொண்டு படிக்க வேண்டும்.குறிக்கோளோடு படியுங்கள். உற்சாகத்தோடு தேர்வுக்குத் தயாராகுங்கள்!

வாழ்த்துகள்! 

- வடிவேல்