கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியில் சேர ‘நெட்’ தகுதித் தேர்வு!



தகுதித் தேர்வு

பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பணிக்கான ‘நெட்’ தகுதித் தேர்வு குறித்த முழுமையான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வெளியிட்டுள்ளது.

இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் கல்லூரி -பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கும் செட் அல்லது நெட் தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இதில் நெட் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்திவருகிறது. இப்போது 2018-ஆம் ஆண்டுக்கான ‘நெட்’ தேர்வு அறிவிப்பை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு நெட் தேர்வு ஜூலை 8-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம் : தேர்வை எழுதப் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.,) ரூ. 500, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினப் பிரிவினருக்கு ரூ. 250 என்ற அளவிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: இந்தத் தேர்வில் இதுவரை மூன்று தாள்கள் இடம்பெற்றிருந்தன. 2018 ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வில் இரண்டு தாள்கள் மட்டுமே இடம்பெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான முதல் தாள் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை 1 மணி நேரம் மட்டும் நடத்தப்படும். இதில் 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதேபோல 100 மதிப்பெண்களுக்கான இரண்டாம் தாள் காலை 11 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும்.

வயது வரம்பு அதிகரிப்பு: கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற நெட் தேர்வை எழுதுபவர்களுக்கு வயது உச்ச வரம்பு எதுவும் கிடையாது. ஆனால், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெற நெட் தேர்வை எழுதுபவர்களுக்கு இதுவரை அதிகபட்சம் 28 வயது, உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த உச்ச வரம்பை இப்போது 30 வயதாக சி.பி.எஸ்.இ. உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இனி 30 வயதுடையவர்களும் இந்தத் தேர்வை எழுத முடியும்.

- முத்து