செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

அரசுப் பள்ளிகளில் வரப்போகிறது கணினிவழித் தேர்வு!

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு,பள்ளிகளில் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்துதல் எனப் பல புதிய திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், புதிய வசதிகள் செய்து தரப்படுகின்றன. இந்த வரிசையில், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கணினி வழியில் தேர்வும், மதிப்பீடும் நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஆயத்த பணிகளில், எஸ்.எஸ்.ஏ., இயக்குநரகம் இறங்கிஉள்ளது. முதல் கட்டமாக, 800 பள்ளிகளில், ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளுடன், கணினி வழி தேர்வுக்கான வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.மேலும், வினாத்தாளில் கொள்குறி என்று சொல்லப்படும் ‘அப்ஜெக்டிவ்’ வகையிலான, கேள்விகளும், பதிலுக்கான குறிப்புகளும் இடம்பெறும். மேலும் மாணவர்களின் விடைத்தாள்களை ‘ஸ்கேன்’ செய்து, கணினி மூலமாக திருத்தவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான மாதிரி தேர்வு 2018 மார்ச்சில் நடக்கும் என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

CBSE பாடத்திட்டத்தில் மீண்டும் ‘ரேங்கிங்’..!

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டப் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் +2 மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவில், அதிக மதிப்பெண் பெறும் மூன்று மாணவர்கள், தேசிய அளவில், முதல் மூன்று ‘ரேங்க்’ பெறுவர். இந்நிலையில் 2009 முதல் 10ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வுமுறை ரத்து செய்யப்பட்டது.

அதாவது, சி.சி.இ. எனப்படும், தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டு, பள்ளிகளிலேயே ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதனால், மாணவர்களுக்கு, ‘ரேங்கிங்’ முறை ரத்து செய்யப்பட்டு, படிநிலை என்ற, ‘கிரேடு’ முறை அறிமுகம் ஆனது. இதற்கிடையில் பொதுத்தேர்வு இல்லாததால் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தேர்வில் பின்தங்கும் மாணவர்களுக்கும் அதிக மதிப்பெண் வழங்கி +1க்கு தேர்ச்சி பெற வைப்பதாகப் புகார் எழுந்தது. அதனால், கல்வித் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது.

இது குறித்து, மத்திய அரசின் சார்பில், நிபுணர் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு நடந்தது. ஆய்வு அறிக்கையின்படி, 10ம் வகுப்புக்கு, மீண்டும் தேசிய அளவில் பொதுத்தேர்வு வந்துள்ளது. இந்த ஆண்டு, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வரும் மார்ச்சில், பொதுத்தேர்வை எழுத வேண்டும். அதன் முடிவுகள், மே மாதம் வெளியாகும். இந்த முடிவுகளில், மீண்டும் மதிப்பெண் முறையும், தரவரிசை என்ற ‘ரேங்கிங்’ முறையும் வரவுள்ளது.

பொதுத்தேர்வு கால அட்டவணை