நல்ல விஷயம் 4



வளாகம்

படிக்க வேண்டிய புத்தகம் : மான்டிசோரி முறையில் குழந்தை வளர்ப்பும் கற்பித்தலும்

 நாடு விட்டு நாடு தாண்டும் விமானத்தையும், அணுசக்தியையும் கண்டறிந்த மனிதன் தன்னைத் தானே அறிந்துணரத் தவறிவிட்டான். இந்தமாதிரியான நடைமுறைச் செயல்பாட்டிற்கு நேர் எதிராக மனதின் தன்மையை அறிந்து, அதற்கேற்றவாறு குழந்தைகளை வளர்ப்பது குறித்து தெளிவாக விளக்கி, பெற்றோர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக  உள்ளது இப்புத்தகம்.

ஆரம்ப காலத்தில் கருவில் இருக்கும் உயிரின் வளர்ச்சி முறைகளையும், செயல்பாடுகளையும் ஆராய்ந்து, குழந்தையாக மண்ணில் தவழத் தொடங்கும் தருணம் என ஒவ்வொரு நிமிடமும் அவ்வுயிரை அணுஅணுவாக ஆராய்ந்து உருவாக்கப்பட்டதும், உலகமெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டதுமான  மனோதத்துவ மருத்துவர் மரியா மான்டிசோரியின் கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்டு உளவியல் ரீதியாகக் குழந்தைகளைப்பெற்றோர்கள் அணுகும் விதமாக எழுதப்பட்டதே இப்புத்தகத்தின் சிறப்பு. இது Montessori Infant  Toddlers, Early Childhood and Child Psychology Theory & Practicals  Part 1&2 என்ற நூலின் தமிழாக்கமாக டி.ஐ.ரவீந்திரன் மற்றும் ராஜலட்சுமி சிவலிங்கம் உருவாக்கியுள்ளனர்.

 மனதின் எண்ணங்கள்தான் உலக இயக்கங்களைத் தீர்மானிக்கின்றன என்பதையறிந்து நல்ல எண்ணங்களைக் குழந்தைகள் மனதில் விதைக்கவும், மனித சக்தியின் எல்லைகளைக் கடக்கவும் செயல்முறை விளக்கங்களோடு விளக்கியிருக்கிறார்கள் இப்புத்தகத்தை. (வெளியீடு:  வெங்கடேஸ்வரா மான்டிசோரி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, ஆழ்வார் திருநகர் அனெக்ஸ் சாலை, ஆழ்வார்திருநகர், சென்னை-6000087. தொடர்புக்கு: 044-2377 1088)

அறிய வேண்டிய மனிதர் :விக்ரம் சாராபாய்

மிகச்சிறந்த இந்திய விஞ்ஞானிகளில் ஒருவரான விக்ரம் அம்பாலால் சாராபாய் 1919ம் ஆண்டு, ஆகஸ்டு 12ம் தேதி, அகமதாபாத்தில் ஒரு பணக்காரக்குடும்பத்தில் பிறந்தார். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த விக்ரம் சாராபாய்க்குக் கணிதத்திலும் இயற்பியலிலும்தான் நாட்டம் அதிகம் இருந்தது.

இதன் காரணமாகவே இங்கிலாந்து சென்று ஆராய்ச்சிப்படிப்பை முடித்துவிட்டு அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை 1947ல் நிறுவினார். பின் அறிவியலின் அடிப்படைத் தத்துவங்களையும், கணிதத்தையும் இந்திய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் விதமாக விக்ரம் எ.சாராபாய் கம்யூனிட்டி சென்டரை 1960ல் ஆரம்பித்தார்.

இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுக்காரணமுமாகச் செயல்பட்டார். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வாயிலாகப் பயிற்றுவிக்கும் முயற்சி’மூலம் 2,400 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச்செல்ல உதவினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை விரிவாக்கினார். அறிவியல் துறையில் இவர் செய்த பணிகளைக் கவுரவிக்கும் நோக்கில் இந்திய அரசு இவருக்குச் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பத்மபூஷன் விருது, பத்ம விபூஷன் விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவரின் சாதனைகளைக் கருத்தில்கொண்டு இந்திய விண்வெளித் துறையின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரைப்பற்றி மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Vikram_Sarabhai

பார்க்க வேண்டிய இடம் : அரசு அருங்காட்சியகம் - சென்னை

சென்னை எழும்பூரில் 16.25 ஏக்கர் நிலப்பரப்பில் ஆறு கட்டடங்களில் 46 காட்சிக்கூடங்களுடன் உயர்ந்து நிற்கும் சென்னை அரசு அருங்காட்சியகம் 1851ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. தொல்லியல், மானுடவியல், நாணயவியல், சிற்பம், புவியமைப்பியல், தாவரவியல், விலங்கியல் போன்ற பல துறைகளை உள்ளடக்கி பல பொருட்கள் காட்சிப்படுத்தபட்டுள்ளன.

சிந்து சமவெளி நாகரிகம், பாரதியாரின் கவிதைகளின் கையெழுத்துப் பிரதி, பல்வேறு மன்னர்களின் ஆட்சிக்காலத்துச் செப்புப் பட்டயங்கள், சமண காலத்துச் சிற்பங்கள், ரவிவர்மாவின் ஓவியங்கள் போன்றவை பார்வையாளர்களால் முக்கியமாகப் பார்க்கப்படுபவையாக கருதப்படுகின்றன. காட்சிக்கூடங்களின் கட்டமைப்பும்,சரித்திரகாலப் பொருட்களும் பார்வையாளனை அக்காலகட்டத்திற்கே கொண்டு செல்லும் உணர்வை உண்டாக்குகின்றன. மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/அரசு_அருங்காட்சியகம்_சென்னை

வாசிக்க வேண்டிய வலைத் தளம் : www.kalviosai.com

கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளில் தொடங்கி, டெட், டி.என்.பி.எஸ்.சி போன்ற அரசுப் பணிகளுக்கான போட்டித்  தேர்வுகள் குறித்த விளக்கங்களும், அறிவுரைகளையும் வழங்கும் தளமாக செயல்படுகிறது கல்வியோசை வலைத்தளம்.

கல்வித்துறையின் அனைத்து இணைய முகவரிகளையும், வேலைவாய்ப்புப் பக்கங்களின் இணைய முகவரிகளையும் தன்னகத்தே குவித்துள்ள இத்தளத்தில் +2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஸ்டடி மெட்டீரியல்களை வழங்குவதோடு, அவ்வப்போது வெளியாகும் அரசாணைகளையும் வெளியிட்டுச் சிறப்பான இணையதளமாகச் செயல்படுகிறது.