நல்ல விஷயம் 4



வளாகம்

பார்க்கவேண்டிய இடம் நார்த்தாமலை

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இந்த இடம் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் 36வது கிலோமீட்டரில் அமைந்துள்ள முக்கியமான சுற்று லாத்தலம். நார்த்தாமலை இன்று உள்ளதுபோல் மொட்டைப் பாறைப் பிரதேசமாக இல்லாமல், பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் செல்வம் கொழிக்கும், வாணிபம் பெருகும் பகுதியாக, வணிகர்களின் தலைமையகமாக இருந்திருக்கிறது.

இந்தப் பகுதியைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், மதுரை நாயக்க மன்னர்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சி செய்திருக்கின்றனர். நார்த்தாமலை என்ற பெயர் நாரதர்மலை என்பதிலிருந்து மருவி வந்ததாகும். இதில் மேல்மலை, கோட்டைமலை உட்பட மொத்தம் 9 குன்றுகள் உள்ளன. தஞ்சாவூர் பெரியகோயில், சுற்றுவட்டார அம்மன் கோயிலுக்கான சிற்பங்கள், இங்கிருந்து பெறப்பட்டவையே.

இங்கு முத்துமாரியம்மன் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டமும், ஜல்லிக்கட்டும் மிகப் பிரபலம். அவசியம் காணவேண்டிய கலையழகு மிகுந்த கோயில் சிற்பங்களின் சொர்க்கம் நார்த்தாமலை. மேலும்  விவரங்கள் அறிய: https://ta.wikipedia.org/wiki/நார்த்தாமலை

படிக்க வேண்டிய புத்தகம் பால் அரசியல் - நக்கீரன்

குழந்தைக்கு அவசியமான தாய்ப்பாலை கைவிடவைத்து உலகையே புட்டிப்பால் வணிகத்திற்கு நகர்த்திய சதிப் பின்னல்களை துல்லியமாக விவரிக்கும் நூல் இது. தாய்ப்பாலின் வேறுபாடு, பால்மாவு வணிக வளர்ச்சி, அதிகரித்த குழந்தை இறப்புகள், தவறான விளம்பரங்கள் ஆகியவை குறித்த விவரங்களைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர். பால் வணிகத்தின் விதிமுறையற்ற விளையாட்டுகளையும், பாலின் வகைகளையும் தெளிவாக விளக்கி, தற்சார்பு குறித்த சிந்தனைகளைத் தூண்டி விழிப்புணர்வூட்டி ஆசிரியர் நக்கீரன் முத்திரை பதித்துள்ளார்.(வெளியீடு: எதிர் வெளியீடு, 96, நியூஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி. தொடர்புக்கு: 04259-226012. விலை ரூ.60)

வாசிக்க வேண்டிய வலைத்தளம் http://www.muthukamalam.com

அழகுத் தமிழில் ஆக்கப்பூர்வமாக அறிவுக்கு விருந்தாகும் தகவல்கள் கொட்டிக்கிடக்கும் தளமிது. உள்ளடக்கமாக  ஆன்மிகம், ஜோதிடம், பொன்மொழிகள், பகுத்தறிவு,  அடையாளம், நேர்காணல், கல்வி, கதை, கட்டுரை, கவிதை   குட்டிக்கதை, குறுந்தகவல், சிரிக்க சிரிக்க,  சிறுவர் பகுதி, மகளிர் மட்டும்,  சமையல், மருத்துவம், புத்தகப் பார்வை, சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள், மின் புத்தகங்கள், தமிழ் வலைப்பூக்கள், படைப்பாளர்கள், தினம் ஒரு தளம் எனப் பல்சுவைகளைக் கொண்ட  பயனுள்ள இணையதளமாக முத்துக்கமலம் இணையதளம் உள்ளது. எழுதும் செய்திகளில் ஆழம் எனத் தமிழில் நுட்ப நுணுக்கமான கட்டுரைகளின் சுரங்கம்.  இலவசமாகப் படிக்க பாரதியார், பாரதிதாசன், அண்ணா, புதுமைப்பித்தன் எனப் பலரது படைப்புகளும், பக்தி இலக்கியங்களும் இலக்கண நூல்களும் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியது.

அறியவேண்டிய மனிதர் வி.வி. கிரி

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதராஸ் பிராந்தியத்தின் கீழ் இருந்த கஞ்சம் மாவட்டம் பெர்தம்புரை சேர்ந்த வராககிரி வேங்கட ஜோகயா-வின் மகனாக 1894 ஆம் ஆண்டு பிறந்தார் கிரி. இந்த நகரமும் அதன் மாவட்டமும் தற்போது ஒரிசா மாநிலத்தில் உள்ளது. இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீல்.

தொடக்கக் கல்வியை பெர்தம்பூரில் முடித்தார். 1913-ஆம் ஆண்டு டுப்ளின்-இல் சட்டம் பயிலச் சென்றார். ஆனால், 1916 ஆம் ஆண்டு அயர்லாந்தில் உள்ள சின் பியன் இயக்கத்துடன் இவர் கொண்ட தொடர்பால் படிப்பைப் பாதியிலேயே விட நேர்ந்தது. அரசியலில் தீவிர ஆர்வம் காட்டியதால் தனது பி.ஏ. படிப்பை கைவிட்டு இந்தியா திரும்பியவர் தொழிலாளர் இயக்கத்தில் பெரிதும் ஈடுபட்டார். பின்பு அகில இந்திய தொடர்வண்டி தொழிலாளர்கள் பேரவையின் அதிபராகவும் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க அவையின் அதிபராக இருமுறை பதவி வகித்தார்.

காந்தியின் ஒத்துழையாமை போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட நன்மனிதர். உத்தரப் பிரதேசம்(1957-1960) , கேரளா(1960-1965) மற்றும் மைசூர் (1965-1967)மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றிய இவர்  1969 ஆம் ஆண்டு பக்ருதீன் அலிக்கு பிறகு 4வது ஜனாதிபதியாகவும் வி.வி. கிரி பதவியேற்று சிறப்பாக செயல்பட்டார்.

இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா விருது 1975 ஆம் ஆண்டு  வி.வி. கிரிக்கு அளித்து இந்திய அரசு கௌரவித்தது. 1980 ஆம் ஆண்டு சென்னையில் இயற்கை எய்தினார் வி.வி.கிரி. இவரைப் பற்றி மேலும் அறிய: https://ta.wikipedia.org/wiki/வி._வி._கிரி